விக்கிரமங்கலம் பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்:
சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் கிராம ஊராட்சியில் , தமிழக அரசின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கலியுக நாதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வி முன்னிலை வகித்தார்.
செயலர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். பற்றாளர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு வியாபாரிகள் சங்கத்தினர், கடைவீதி பகுதியில் பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அது தொடர்பாக ,மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மே 1 ஆம் தேதி முதல் விக்கிரமங்கலம் கடைவீதி பகுதியில் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. திருமணம் காதணி விழா மற்றும் இதர விசேஷ வைபவங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி வைக்கவும்தடை செய்யப்பட்டுள்ளது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதனை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. செக்கான் கோவில்பட்டி நரியம்பட்டி மம்பட்டிபட்டி கல்புளிச்சான் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதேபோல், முதலைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட முதலைகுளம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடி பாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பத்திரகாளி முன்னிலை வகித்தார்.
செயலர் பாண்டி அறிக்கை வாசித்தார். ஒன்றியக் கவுன்சிலர் அரவிந்தன், யூனியன் பற்றாளர் கவுசல்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
இதில், அரசு பள்ளியில் சுகாதார பணிகளை மேற்கொள்வது, நாடக மேடையில் பேவர் பிளாக் அமைப்பது, சாக்கடை வசதிகளை ஏற்படுத்தித் தருவது , புதிதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் பணியாளர்களுக்கு புதிய அட்டை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..