காலையிலே பத்திரிகைகளைப் பார்த்தேன். இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் வாழ்த்து என்ற பெயரால், வரவேற்பு என்ற பெயரால், தலைவர்களைப் பாராட்டுவது என்ற பெயரால், என்னென்னவோ விளம்பரங்களைச் செய்கிறார்கள். “ஆண்டவரே’ என்கிறார்கள்- “கடவுளே’ என்கிறார்கள் – “பரமேஸ் வரியே” என்கிறார்கள் – “எங்களைக் காக்க வந்த ஆண்டவனே” என்றெல்லாம் கவிதைகளை இயற்றுகிறார்கள். இவைகளெல்லாம் பத்திரிகைகளிலே வருகிறது.
காலையிலே இன்றைக்கு நான் தங்கியிருந்த இடத்திற்கு தம்பி வேலு வந்தபோது ஒன்றைச் சொன்னேன் – அப்போது சற்றுக் கடுமையாக அவரிடத்திலே கோபித்துக் கொண்டேன். “எல்லாம் சரி – என்னை தந்தை பெரியாரின் தொண்டனே என்று வாழ்த்துங்கள் – அண்ணாவின் தம்பியே என்று அழைத்து வாழ்த்துங்கள். ஆனால், “வள்ளுவரே” என்றும், “தொல்காப்பியனே” என்று சொல்லி, என் மனதைப் புண்படுத்தாதீர்கள் என்று நான் அவரிடத்திலே (எ.வ.வேலுவிடம்) சொன்னேன். அதைச் சொன்னேனா, இல்லையா என்பதை அவரிடத்திலே நீங்கள் கேட்டுப் பார்த்தால் சொல்வார்.
ஏனென்றால், ஒருவரைப் பெருமைப்படுத்துகிற அளவிற்கு – என்மீது என்னதான் ஆசையிருந்தாலும், என்னதான் என்மீது அன்பு இருந்தாலும், என்னைப் பாராட்ட வேண்டுமென்று கருதினால். “பெரியாரின் தொண்டன்” -“அண்ணாவின் தம்பி” – “தொண்டர் களுக்குத் தோழன்” – “ஏழைகளுக்குத் தோழன்” என்று சொல்லுங்கள். ஆதிதிராவிடர்களுக்கு, அனாதை மக்களுக்கு, நோயுற்ற குழந்தைகளுக்கு – இன்றைக்கு இந்த அரசு ஆற்றுகின்ற பணிகளை யெல்லாம் ஒன்றுபடுத்தி, அந்த நிலையிலேயிருந்து புகழுங்கள். அதை விட்டு விட்டு, “தொல்காப்பியரே” என்றும், “வள்ளுவரே” என்றெல்லாம் சொன்னால், அவர்களுடைய காலடிக்குக்கூட நான் சமம் அல்ல. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தமானவன் அல்ல. எனவே, தயவு செய்து – வேலு அவர்களுக்கு நான் காலையிலே சொன்ன – கோபத்தோடு சொன்ன அந்த எச்சரிக்கையை நம்முடைய கழகத் தோழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திருமணத்திலே இதுதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு விடுக்கின்ற செய்தியாகும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
(பின் குறிப்பு: இதில் நம் கற்பனை, எள்ளளவும் எள்முனையளவும், கடுகளவும் கடுகுத் தோலளவும் இல்லை…. எல்லாமே ஒரிஜினல். நம் கற்பனை வறட்சியைப் புரிந்து கொண்டு ‘டாக்’ கொடுத்த டாக்-டர் வாழ்க! கற்பனைப் பஞ்சத்தைப் போக்கிய வார்த்தை வள்ளல் வாழ்க வாழ்க!)


