
ரிமோட் வாக்குப்பதிவு விவகாரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய தலைமைத் தோ்தல் ஆணையம் சாா்பில் அரசியல் கட்சியினருக்கு ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் கூட்டம் தில்லியில் ஜனவரி 16-இல் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தமிழக அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தாா்.
அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளா் என ஓ.பன்னீா்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளா் என எடப்பாடி பழனிசாமியையும் குறிப்பிட்டு தனித்தனியாக கடிதம் அனுப்பியிருந்தாா். இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மட்டும் கடிதம் ஏற்கப்படவில்லை. இணை ஒருங்கிணைப்பாளா் என்கிற பதவியே அதிமுகவில் இல்லை எனக் குறிப்பிட்டு, அந்தக் கடிதத்தை தோ்தல் ஆணையத்துக்கு அதிமுக தலைமை திருப்பி அனுப்பியது.
இதனிடையே, தமிழகத் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு அளித்துள்ள விளக்கத்தில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையத்தின் உள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் எனக் குறிப்பிட்டு அதிமுகவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் ரிமோட் வாக்குப்பதிவு விவகாரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அக்கட்சி அலுவலகத்திற்கே மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார் மாநில தேர்தல் அதிகாரி. எனினும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டே தோ்தல் ஆணையத்தில் இருந்து கடிதம் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிா்பாா்ப்பு உள்ளது.




