திமுக.,வின் செய்தி தொடர்பாளர் சரவணன் குறித்து தற்போது என்.ஐ.ஏ., வசம் புகார்கள் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சமூகத் தளங்களில், என்.ஐ.ஏ., வசத்தில் திமுக., இருப்பதாக மேற்கண்ட தகவல் பரபரப்பாக உலா வருகிறது.
இரு தினங்களுக்கு முன் ரிபப்ளிக் டி,வி.,யில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய திமுக., செய்தி தொடர்பாளர் சரவணன், ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் கூறி, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பினார். அதாவது ‘காஷ்மீர் பாகிஸ்தானுக்கே சொந்தம்’ என சொல்லாமல் சொல்லி நாடு முழுதும் திகிலைக் கிளப்பினார். அவரது பேச்சுக்காக, நேரலை நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப் பட்டார்.
சரவணன் பேச்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து திமுக.,விற்கு மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது. தவிர, சமூக வலைதளங்களிலும் திமுக.,வை இணையதளவாசிகள் கடுமையாக விமர்சித்து பதிவு செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே காஷ்மீர் பிரச்னையின் போது நாடாளுமன்றத்தில் திமுக., எம்.பி.,க்கள் லடாக் எம்.பி.,யிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர். இந்நிலையில், திமுக., செய்தித் தொடர்பாளர் சரவணனின் இந்தப் பேச்சுக்காக, ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’ பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளை பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தலைமையில் ஒரு அணி மேற்கொண்டு வருகிறதாம்.
நாடே நேற்று சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது, திமுக., சுதந்திர தினத்தை புறக்கணித்தது. திமுக.,வின் இந்தச் செயல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திமுக.,வின் அதிகார பூர்வ டி.வி.யில்., பாரதப் பிரதமர் உரையின் போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் உரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது என்று நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனால் நாட்டின் இறையாண்மையை திமுக., மதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக., செய்தி தொடர்பாளர் சரவணனின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக குறிப்பிட்டு ‘ஆர்மி பிரெண்ட்ஸ்’ இயக்கம் என்.ஐ.ஏ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. சரவணனின் பேச்சு அக்கட்சியின் நிலைப்பாடுதான் என்பதால், சரவணனின் பேச்சுக்கான முழுப் பொறுப்பும் கட்சியையே சாரும்.
இந்நிலையில் சரவணன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பிரிவினை பேசிக் கொண்டு, தமிழர் பெயர்களில் உலா வரும் பயங்கரவாதிகளின் தொடர்புடையவர்களுக்கு நெருக்கடி ஏற்படும், இல்லாவிட்டால், சீமான், திருமுருகன் காந்தி, வேல்முருகன் போன்றவர்களைப் போல் நிறையப் பேர் பேசத் தொடங்குவார்கள் என்ற கருத்து தேசியவாதிகளிடம் முக்கியமாக உலவுகிறது
சரவணனின் காஷ்மீர் குறித்த பேச்சு திமுக., மூத்த தலைவர்களையும் பதற்றத்தில் தள்ளியுள்ளது. இப்படிப்பட்ட பேச்சுக்கள் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே சரவணன் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியை காப்பாற்ற முடியாது என்று அவர்கள் ஸ்டாலினிடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், சரவணன் மீது நடவடிக்கை எடுத்தால் இளைஞர்கள் மட்டுமின்றி, இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியிலும் திமுக., எதிர்ப்பை சந்திக்கும் என்றும் கூறுகின்றனர். ஏற்கெனவே முத்தலாக், என்.ஐ.ஏ., சட்ட மசோதாக்களின் போது, திமுக., கடும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்று கூறி வருகின்றனர் இஸ்லாமியர்கள்! வேலூர் தேர்தல் முடிவும் இஸ்லாமிய வாக்குகளால் தான் திமுக.,வுக்கு சாதகமானது என்றும், எனவே சரவணன் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் சரியாக இருக்காது என்றும் ஒரு பேச்சு ஓடியிருக்கிறது. இருப்பினும், திமுக., மீதே இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி தடை விதிக்கக் கோரப் படலாம் என்று கூறப் படுவதால், அடுத்து செய்யப் போவது குறித்து அறிவாலய வட்டாரம் ஆலோசனையில் இறங்கியுள்ளது.
இதை அடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுப்பிரமணிய சாமி ஆகியோர் மூலம் ஏதாவது செய்யலாம் என களத்தில் இறங்கியுள்ளது திமுக., என்கிறார்கள். ஆனால் திமுக.,வின் செயல்பாடுகளுக்கு பாஜக., செவி சாய்த்தால், தேசிய அளவில் பாஜக.,வின் செயல்பாடு கேலிக்கூத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் தேசியவாதிகள்.! சரவணன் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் நிலையைப் பொறுத்தே தமிழகத்தில் தேசியத்தின் செயல்பாடும் பிரிவினைவாதிகளின் கொட்டமும் தீர்மானிக்கப் படப் போகிறது!


