ஊரடங்கு தளர்வு எதிரொலியாக மீண்டும் காவிரியில் திருட்டுத்தனமாக மணல் எடுக்கும் சம்பவம் மீண்டும் தொடங்கியுள்ளது. அதிலும் பட்டவர்த்தனமாக ஊரறிய திருட்டு மணல் கொண்டு செல்லப் படுவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே பட்டப்பகலில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு மணல் கடத்தலில் ஈடுபடுவது, வீடியோக்கள் மூலம் அம்பலமானது!
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் செல்லாண்டியம்மன் ஆலயம் அருகே ஊரடங்கு உத்தரவு தளர்வு எதிரொலியாக பட்டப்பகலில் அரசால் தடை செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவையும் மீறி ராட்சத ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு, லாரியில் மணல் அள்ளும் காட்சி தற்போது கரூர் மாவட்டத்தில் வைரலாகி வருகிறது.
மாயனூர் காவல்துறையினர் அந்த லாரியை பறிமுதல் செய்து மாயனூர் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். கொரோனா கொடூரத்திலும் ஊரடங்கு தளர்வு என்பது பொதுமக்களின் இன்றியமையாத தேவைக்காக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் காவிரி ஆற்றில் மணல் திருட்டு அம்பலம் ஆனதால் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர்.