இன்று சித்ரா பௌர்ணமியன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும் அறிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்வை காண சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் அதிகளவில் வரத்துவங்கி விட்டனர்.
சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி இன்று சனிக்கிழமை வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இந்த இரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த அரிய காட்சியை காண கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மிக அதிகளவில் வந்து முகாமிட்டுள்ளனர் .
மேற்கு பக்கம் அரபிக் கடலில் சூரியன் மறையும் அதே நேரம் கிழக்கு பக்கம் வங்கக்கடலில் சந்திரன் உதயமாகும். இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டு ரசிக்கலாம். கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும்.
இந்த அபூர்வகாட்சியை காண ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. இதனால் கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமியான இன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியா குமரியில் வந்த வண்ணமாக இருக்கிறார்கள்.
இன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம்உள்ள அரபிக் கடல் பகுதியில் வர்ண ஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் எழும். அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளிவெளிச்சத்தால் ”பளிச்“என்று மின்னும்.
இந்தஅரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி மற்றும் கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்துரசிக்கலாம்.
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடைபெற்றது.
மேலும் சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூடுவதால் அன்றைய தினம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.








