Home Blog Page 5859

மீனாட்சி கல்லூரியில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி

சென்னை மீனாட்சி கல்லூரியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 ஏ1 சார்பாக இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடன் அரிமா மாவட்ட ஆளுநர் ஜி.எம். பாலாஜி ரத்தினம், மீனாட்சி கல்லூரி முதல்வர் அரிமா கே.எஸ். லட்சுமி, துணை ஆளுநர் டி.எம். குணராஜா, அரிமா மாவட்டத் தலைவர்கள் எஸ்.வி. மாணிக்கம், கே. சந்திரசேகர், கே.எல்.வி. ராமாராவ், டி. துர்கா பிரசாத், ஆர். வெங்கடேசன், அரிமா நா. கண்ணன் மற்றும் அரிமா மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி இளைஞர் அமைப்பினர் முதல்வரிடம் மனு அளிக்கின்றனர்

கால்நூற்றாண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களை தாயுள்ளத்தோடு விடுதலை செய்ய மாணவர் இளைஞர் அமைப்புகளின் அன்பு வேண்டுகோள் என அந்த அமைப்பின் சார்பில் இயக்குனர் வ.கவுதமன் வெளியிட்ட அறிக்கையில்,

 

 

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களை விடுவிக்க2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்தார்.

ஆனால் அது பொறுக்காத அன்றையமத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்தவழக்கின் தீர்ப்பில் குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகளில் முட்டுக்கட்டை போட்ட உச்சநீதிமன்றம்; அரசியலமைப்பு சட்ட பிரிவுகளின் வாயிலாக விடுதலை செய்யும் வாய்ப்பை திறந்து வைத்தது.

ஆகவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு இந்தவிடயத்தை அணுகி இந்த எழுவர் விடுதலையையும் இது போல் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலையையும் சாத்தியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த காலத்தில் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அன்போடு செவிமடுத்து பல வரலாற்று தீர்மானங்களை இயற்றிய மாண்புமிகு முதல்வர் “அம்மா” அவர்கள், இந்த நேர்மையான வேண்டுகளையும் ஏற்று தமிழக மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க வழி செய்யுமாறு மாணவர் / இளைஞர்அமைப்புகளின் சார்பில் வேண்டு கோள் வைக்கப்படுகிறது. என்று கூறியுள்ளார். 

இதை அடுத்து,  மாணவர் / இளைஞர் அமைப்புகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் திங்கள் அன்று (11-01-2016) 11 மணி அளவில் சட்டப்பேரவை சென்று இது குறித்த ஆவணங்களை கொடுத்து மாண்புமிகு முதல்வர் “அம்மா” அவர்களை சந்திக்கின்றனர் 

ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து தில்லி திரும்பினார் ராகுல்

புது தில்லி:

ஐரோப்பிய சுற்றுப் பயணம் முடிந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் நேற்று புது தில்லி திரும்பினார்.

 

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்த ராகுல், 2016 புத்தாண்டை ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடுவதாகக் கூறிச் சென்றார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்ததை அடுத்து, தனது ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, நேற்று காலை தில்லி திரும்பினார். திங்கட்கிழமை இன்று அவர் கட்சியின் வளர்ச்சி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த 2015ல் 3ஆவது வெளிநாட்டு பயணமாக ராகுல், டிசம்பர் மாத இறுதியில் ஐரோப்பா சென்றார். இது தொடர்பான தகவல்களை அவரே தனது ‘டுவிட்டர்’ தளத்தில் பகிர்ந்து இருந்தார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறப்பட்டு இருந்தது.

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து

புது தில்லி:

இந்திய பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது; பதான்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரையில் பேச்சுவார்த்தை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் இருந்து தில்லி திரும்பும் வழியில், பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். லாகூர் நகரில் அவர், பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்தார். இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 15 ஆம் தேதி இஸ்லாமபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 

கடந்த 2 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

ஆனால், திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெறும் என பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். பதான்கோட் சம்பவத்துக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது எனவும், பதன்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் அமையாத வரை அமைதி பேச்சுவார்த்தை நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இன்று கேரளா செல்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி

புது தில்லி:

குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி திங்கட் கிழமை இன்று 3 நாள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் நாளை மலப்புரத்தில் நடைபெறும் மருத்துவ மாநாட்டைத் துவக்கி வைக்கிறார்.

 

திருவனந்தபுரத்தில் நடைபெறும் ஸ்ரீசித்திரை திருநாள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்சாரி, 13 ஆம் தேதி திருவனந்தபுரம் செனட் ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாட்டில் கல்வியில் கேரளம் முதலிடத்தை வகிப்பதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை அவர் அங்கு வெளியிடுகிறார்.

நானும் தமிழன்தான்; ஜல்லிக்கட்டு காளையை அடக்க விரும்புகிறேன்: மார்கண்டேய கட்ஜு

புதுதில்லி :

முற்பிறவியில் நானும் ஒரு தமிழனாகத்தான் பிறந்திருப்பேன்; நானும் தமிழன் தான், ஜல்லிக்கட்டு காளையை அடக்க நான் விரும்புகிறேன் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

 

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மத்திய அரசு அனுமதிக்காவிட்டாலும் மாநில அரசு ஜல்லிக்கட்டினை சிறப்பு சட்டம் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டு என்று தெரிவித்திருந்த கட்ஜு, ஜல்லிக்கட்டு மீதான தடை விலக்கப்பட்டு, இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வழி ஏற்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கங்களில் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துகள்…

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதில் எந்த வித சட்டவிரோதமும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

 

நானும் ஒரு தமிழன் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ள கட்ஜு, தமிழ் என் மூச்சு என்றும் பதிவு செய்துள்ளார்.

 

 

இப்பொழுதும் நான் நன்றாக தமிழ் பேசுகின்றேன். முற்பிறவியில் நான் தமிழனாகத்தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அப்போது நான் மீண்டும் தமிழனாகப் பிறந்து காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

 

காதலனை அடித்து விரட்டியடித்து மாணவியை கடத்தி கற்பழித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

 
மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து பகுதியை சேர்ந்தவர் 17 வயதான இளம் பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு படித்து வரு மாணவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலர்கள். அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம்.அதே போல் நேற்று மதியம் இருவரும் மதுரை அருகே வடிவேல்கரை பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கோவிலுக்கு சென்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் காதலனை அடித்து விரட்டி விட்டு காதலியை குண்டுகட்டாக தூக்கி கோவில் அருகே உள்ள பாலத்தின் கீழ் கடத்தி சென்று அங்கு வைத்து மாணவியை ஒருவர் பின் ஒருவராக 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.
கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவி நாகமலைப்புதுக்கோட்டைகாவல் நிலையத்தில் அளித்த புகாரில் வடிவேல்கரையை சேர்ந்த பிரபு (24), கீழக்குயில்குடி சவுந்திரபாண்டி (35), முனியாண்டி ஆகிய 3 பேர் தன்னை கடத்தி சென்று கற்பழித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கமலி, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய 3 வாலிபர்களை காவல் நிலையத்தினர் தீவிரமாக வலைவீ சி தேடி வருகின்றனர்

தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சி தொடக்கம்

 

சென்னை:

தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வகுப்புகள் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி 13-ந் தேதி முடிவடைகிறது.

 

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தேர்தல் மேலாண்மை பயிற்சிகள் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளுக்கு, கடந்த டிசம்பர் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்ற அதிகாரிகள், மாவட்ட அளவிலான (தலைமை பயிற்சி) அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை வழங்கினர். அதாவது, மாவட்டத்துக்கு 2 அதிகாரிகள் என்று தேர்வு செய்து, கடந்த டிசம்பர் 21 மற்றும் 22-ந் தேதிகளில் சென்னையில் வைத்து அவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டன.

தேர்தலின்போது, மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்டத்துக்கு 16 முதன்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், தேர்தல் பணி தொடர்பான பல பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இவர்கள், தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து, அங்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகளை கடந்த டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை பலருக்கு வழங்கினார்கள்.

இந்த நிலையில், முதன்மை தேர்தல் பயிற்சியாளர்களின், தேர்தல் பயிற்சி வழங்கும் திறனின் முக்கியத்துவம் அறிந்து, அவர்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வைத்து இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பயிற்சி ஜனவரி 10-ந் தேதி (நேற்று) முதல் தொடங்கியது.

இந்த பயிற்சி 13-ந் தேதி முடிவுக்கு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சியாளர்களும், ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 அதிகாரிகள் என்று தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டனர். முதல் கட்ட பயிற்சியில் 94 அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட பயிற்சி ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி

தருமபுரி:

தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள 5 தீர்த்தங்களிலும் நீராடினால் தீராத நோய் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் தீர்த்தமலைக்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து, தீர்த்தத்தில் நீராடி செல்கிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கோவில் வளாகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். அவரைப் பிடித்து, கோயில் பணியாளர்கள் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த அவர்கள், அவர் வைத்திருந்த பையை சோதித்த போது, அதில் 3 செம்பு கலசங்கள் இருப்பது தெரியவந்தது.

அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 60) என்பதும், தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் இருந்து செம்பு கலசங்களை திருடியதும் தெரிய வந்தது. இதனால், பணியாளர்கள் கலசங்களை திருடிய நாகராஜூக்கு தர்ம அடி கொடுத்து, அவரை கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய ஆய்வாளர் இடமாற்றம்

திருவண்ணாமலை:

குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும், வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் வேலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று, வழக்கறிஞர் – ஆய்வாளரின் 11 நிமிட செல்போன் உரையாடல் ஒலிப்பதிவு வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது. இதில், குற்றவாளியை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சத்துக்கு அந்த ஆய்வாளர் பேரம் பேசினார். இதற்கு வழக்கறிஞர் மறுத்ததும் பதிவாகி இருந்தது.

ஆய்வாளர்: சென்னையில் இருந்து ஆய்வாளர் பேசுகிறேன்.
வழக்கறிஞர்: நிலுவையில் உள்ள வழக்கில் தொடர்புடைய ஒரு நபரை கைது செய்யவேண்டாம்.
ஆய்வாளர்: இதுதொடர்பாக உங்களுக்கு ஏற்கனவே 2 மாதம் அவகாசம் கொடுத்துவிட்டேன். ஆனாலும் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. நான் இந்த ஸ்டேஷனில் இருக்கும்வரை அந்த நபரை கைது செய்யாமல் இருக்கவேண்டுமானால் ஏற்கனவே பேசியபடி ரூ.5 லட்சத்தை கொண்டு வந்து கொடுக்காவிட்டால், இதுகுறித்து என்னிடம் தொடர்ந்து பேச வேண்டாம்.
வழக்கறிஞர்: என்னிடம் பணம் இல்லை. இன்சூரன்ஸ் பணம் வந்ததும் சொன்னபடி கொடுத்துவிடுகிறேன்
0ஆய்வாளர்: வரும் வியாழக்கிழமைக்குள் சென்னைக்கு வந்து பணத்தை செட்டில் செய்துவிடுங்கள். ரூ.5 லட்சத்தில் 1 லட்சத்தை உங்களுக்கும் மற்றும் 1 லட்சத்தை உன்னுடன் வரும் நபருக்கும் பிரித்து கொடுத்துவிட்டு 3 லட்சத்தை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன். தேவைப்பட்டால் அந்த நபரையும் கூடவே அழைத்து வாருங்கள் எனக்கு ஆட்சேபணை இல்லை.

இவ்வாறு நடக்கும் உரையாடலின் முடிவில், ‘நாம் பேசுவதை எல்லாம் ரெக்கார்டு செய்கிறாயா?‘ என சந்தேகத்துடன் ஆய்வாளர் கேட்கிறார். அதற்கு வழக்கறிஞர், ‘சத்தியமாக ரெக்கார்டு செய்யவில்லை. அந்த வசதி என் போனில் இல்லை. உங்களை நேரில் பார்க்கும்போது என் போனை உங்களிடம் காட்டுகிறேன்’ என்று கூறுகிறார்.

இத்துடன் இந்த உரையாடல் முடிகிறது. இந்த உரையாடலின்போது, அருவருப்பான, ஆபாச வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயரையும், அவரது அண்ணன் பெயரையும் குற்றவாளிகளின் பெயர்களையும் தனது பேச்சில் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அவர் பேசிய விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உரையாடலின் அடிப்படையில் திருவண்ணாமலையை சுற்றியுள்ள சம்பவமாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், ‘திருவண்ணாமலை தாலுகா போலீஸ் ஆய்வாளர் பழனி’ என்று தெரியவந்தது.

இதனால், வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், ஆய்வாளர் பழனியை வேலூருக்கு நேற்று இடமாற்றம் செய்து, காத்திருப்போர் பட்டியிலில் வைக்க டி.ஐ.ஜி உத்தரவிட்டார். ஆய்வாளர் பழனியிடம் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.