பாட்னா: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வீடு மீது இளைஞர் காங்கிரசார் முட்டை வீசி எதிர்ப்பைத் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது மகன் ராகுல் ஆகியோர் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்தைத் தெரிவித்திருந்தார். அது அக்கட்சித் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு எதிராக பீகார்- பாட்னாவில் அனந்த்புரி பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கிரிராஜ் சிங் வீட்டை நோக்கி முட்டைகளையும், அழுகிய தக்காளியையும் வீசி எறிந்தனர். அவருடைய புகைப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், பதாகைகளையும் கிழித்து சேதப்படுத்தினர். இதை அடுத்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நைஜீரியாவில் ஆளும் கட்சி படுதோல்வி; முன்னாள் சர்வாதிகாரி புகாரி அதிபராகிறார்
நைஜீரியா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முகமது புகாரி வெற்றி பெற்றுள்ளார். அவர், அந்நாட்டு அதிபராகவுள்ளார். முன்னாள் சர்வாதிகாரியான முகமது புகாரி (72) தற்போதைய அதிபர் குட்லக் ஜோனாத்தானை விட 25 லட்சம் கூடுதல் ஓட்டுகளைப் பெற்றார். இவர், கடந்த 1980களில் நைஜீரியாவை ஆட்சி செய்தவர். தற்போது, நான்காவது முறையாக, வரும் மே 29ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று நைஜீரியா. உள்நாட்டு போர், லஞ்சம் ஊழல் என, அந்நாடு போதிய வளர்ச்சியை எட்டவில்லை. நைஜீரியாவின் அதிபராக மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த குட்லக் ஜொனாதன் இருந்து வருகிறார். அவர், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். இருப்பினும் அங்கு செயல்பட்டு வரும் போகோ ஹராம் அமைப்பை அவர் ஒடுக்கத் தவறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர். போகோ ஹராம் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதோடு, சிறுமிகளை கடத்திச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஜொனாதன் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்து வந்த நிலையில், அதிபர் தேர்தல் நடைபெற்றது. போகோ ஹராம் தீவிரவாதிகளின் அச்சுற்றுத்தலுக்கு மத்தியில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று முதல் வெளிவரத் தொடங்கின. இதில் பெரும்பாலான இடங்களில் முகமது புகாரி முன்னிலை வகித்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பல தொகுதிகளில் அவர் வெற்றிபெற்றுள்ளார். இதையடுத்து, நைஜீரிய நாட்டின் அதிபராக முகமது புகாரி பொறுப்பேற்க உள்ளார். நைஜீரியா, 1960ஆம் ஆண்டு, இங்கிலாந்திடம் இருந்து விடுதலை பெற்று பின்னர், பல்வேறு ராணுவப் புரட்சிகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் சந்தித்தது. 1999ல் நைஜீரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குட்லக் ஜோனாதான் வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக அதிபராகும் அவரது கனவு இப்போது தகர்ந்துள்ளது. நைஜீரிய வரலாற்றில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிபர், தேர்தலில் தோல்வி அடைவதும் இதுவே முதல் முறை.
புள்ளி விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்ற முயல்கிறார் முதல்வர்: பாமக ராமதாஸ்
ஜப்பானில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம்
டோக்கியோ: ஜப்பானில் முதன் முறையாக டோக்கியோ மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஷிபுயா வார்ட் உள்ளூர் சபையில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்த அங்கீகாரத்தின் காரணமாக இனி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு திருமண சான்றிதழ்கள் வழங்கப்படும். இதனால் சமூகத்தில் அவர்களும் சாதாரண மனிதர்களைப் போல் வாழ முடியும். வரிச் சலுகைகள், சமூக பாதுகாப்பு மற்றும் சொத்துரிமை என்று சராசரி மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய அனைத்தும் அவர்களுக்கும் கிடைக்கும். சிவில் சட்டப்படி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்காத ஒரு நாட்டில், இது மிகவும் முக்கியமான ஒரு நடவடிக்கை என்று உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொகாடியா வந்தால் கைது செய்வோம்: மேற்கு வங்க அரசு எச்சரிக்கை
கோல்கத்தா: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் பாய் தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைந்தால் அவரைக் கைது செய்வோம் என்று அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொகாடியா வந்தால், மாநிலத்தில் மத மோதல்கள் ஏற்படும். தடையை மீறி அவர் வந்தால் கைது செய்வோம் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தொகாடியா மேற்கு வங்கத்துக்குள் நுழைவதற்கு தடையும் விதித்துள்ளது.
சோனியா குறித்த கிரிராஜ் கருத்து: நைஜீரிய தூதர் அதிருப்தி
புது தில்லி: சோனியா காந்தி வெள்ளை நிற தோலுடையவர் என்பதால் காங்கிரசார் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஒருவேளை ராஜீவின் மனைவி நைஜீரியாவில் இருந்து வந்திருந்தால், (கறுப்பாக இருந்தால்) தலைவராக அவரை ஏற்றுக் கொள்வார்களா என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்தார். அவரது பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நைஜீரிய தூதர் ஓபி ஒகோங்கர், மத்திய அரசில் உயர்ந்த பதவியில் இருப்பவரிடமிருந்து இது போன்ற கருத்துக்கள் வருவது எதிர்பாராதது. இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ள நிலையில், இந்தக் கருத்து எதிர்பாராதது என்று கூறியுள்ளார்.
சோனியா குறித்த கருத்து: கிரிராஜுக்கு அமித் ஷா அறிவுரை
புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம், பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் பேசியுள்ளனர். அப்போது, இனி இது போன்று பேசக்கூடாது என்றும், பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற கருத்துகள் பா.ஜ.க,வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கினாராம்.
முஸ்தபா கமால் ராஜினாமா: ஐசிசி ஏற்பு
துபை; சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது பதவி விலகலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தகவலை ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, முஸ்தபா கமால் தனது ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் தனது முடிவுக்காக ஐசிசியின் அனைத்து அசோசியேட் உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல் காலமானார்
மும்பை: காங்கிரஸ் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான எஸ்.ஆர்.பாட்டீல், தனது 94 ஆவது வயதில் இன்று காலமானார். அப்பாசாஹேப் என்று அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் எஸ்.ஆர்.பாட்டீல். மேற்கு மகாராஷ்ட்ரத்தின் கோல்ஹாப்பூரில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்தவர். சர்க்கரை ஆலைகளுக்காகவும், கூட்டுறவுத் துறையிலும் மாநிலத்தில் பல்வேறு பணிகளைச் செய்தவர். மகாராஷ்டிரத்தின் சட்டமன்றத்தில் மிக மூத்த உறுப்பினராகத் திகழ்ந்தவர். அண்மையில் நடந்த தேர்தலின்போது, சிவசேனாவின் உல்ஹாஸ் படேலிடம் ஷிரோல் சட்டமன்றத் தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார். அவருடைய மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மகாராஷ்டிர பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஷோக் சவான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு: கேரளத்தில் 300 பார்கள் மூடல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் உள்ள 300 மதுபான பார்கள் இன்று மூடப்பட்டன. கேரளத்தில் முதல்வர் உம்மன்சாண்டி புதிய மதுக் கொள்கையை அறிவித்தார். இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பாபுமாத்து, பி.ஜோசப் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2014–15 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசின் மதுகொள்கைக்கு அனுமதி அளிப்பது எனவும், மாநிலத்தில் உள்ள 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட 24 பார்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், 300 மது பான பார்களை உடனடியாக மூடவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்ப்ப்பளிக்கப்பட்டிருந்ததால், மாநிலம் முழுவதும் 300 பார்கள் உடனடியாக மூடப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவில், 5 நட்சத்திர ஓட்டல் பார்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

