Home Blog Page 6162

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் வழங்கிய ரூ.5 லட்சம்: மோடியிடம் ஒப்படைப்பு

pon-radhakrishnan-modi-nitin-katkari புது தில்லி: குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கைச் சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை, மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடியிடம் வழங்கினார். பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்க வழங்கப்பட்ட காசோலையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

சண்டியர்; கொம்பன்… அட சினிமாவ எதிர்க்கத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா? – கேட்பது சீமான் !

அன்று சண்டியர்… இன்று கொம்பன்… படங்களுக்கு எதிராகப் போராடத்தான் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
ஒரு திரைப்படத்தில் என்ன கதை, எத்தகைய கருத்து எனத் தெரியாமலேயே அந்தப் படத்துக்கு எதிராகப் பிரச்னைகள் கிளப்புவது தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மதிப்பிற்குரிய மருத்துவரான அண்ணன் கிருஷ்ணசாமி திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது கட்சியின் முழு நேரக் கடமையாக்கிவிட்டார் போலிருக்கிறது. திரைப்படங்களுக்கு எதிராகப் போராடுவது எல்லாம் ஒரு மதிப்புமிக்க தலைவருக்கு சிறுமையாகப் படவில்லையா? ‘கொம்பன்’ படத்தால் தென் மாவட்டங்களில் சாதியச் சண்டைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகச் சொல்லும் மருத்துவர் கிருஷ்ணசாமி இதுகாலம் வரை திரைப்படங்களால் அப்படி வன்முறைகள் உருவான வரலாற்றைச் சொல்ல முடியுமா? சில மாதங்களுக்கு முன்னர் சாதியக் கொலைகள் நிகழ்ந்ததே அது எந்தப் படத்தின் காரணமாக என்று மருத்துவரால் சொல்ல முடியுமா? ‘கொம்பன்’ படம் நின்றுவிட்டால், அதன் பிறகு தென் மாவட்டத்தில் எந்தச் சாதிக் கலவரமோ கொலைகளோ நடக்காது; அப்படி நடந்தால் நானே பொறுப்பு என மருத்துவர் கிருஷ்ணசாமியால் உறுதி ஏற்க முடியுமா?
மேகதாது அணை, நியூட்ரினோ திட்டம் என மக்களைப் பாதிக்கும் எத்தனையோ பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கையில், ஒரு திரைப்படப் பிரச்னையைத் தூக்கிக் கொண்டு போராடுவது மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு சரியாகப்படுகிறதா? மக்கள் நலனுக்காக நிற்கிற தலைவனாக மேகதாது, நியூட்ரினோ திட்டங்களைத் தடை செய்யச் சொல்லி நீதிமன்றத்துக்குப் போகாதா மருத்துவர் கிருஷ்ணசாமி, ‘கொம்பன்’ படத்துக்கு தடை கேட்டு நீதிமன்றத்துக்குப் போவது நகைப்பாகத் தெரியவில்லையா?
‘கொம்பன்’ படத்தில் தவறான காட்சிகள் இடம்பெற்று இருப்பதாகச் சொல்லி வழக்குப் போட்டிருக்கும் மருத்துவர் கிருஷ்ணசாமி, அவருடைய அரசியல் வாழ்க்கையில் அத்தனை முடிவுகளையும் சரியாகத்தான் எடுத்தாரா? அ.தி.மு.க.வின் கூட்டணியில் இடம்பிடித்து எங்களைப் போன்றவர்களின் பரப்புரையால் வெற்றி பெற்று, தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழிக்கு ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட்டாரே கிருஷ்ணசாமி… அந்தத் தவறைக் கண்டித்து அவருக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனும் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டால் மருத்துவரால் தாங்க முடியுமா?
‘கொம்பன்’ என்கிற தலைப்பே சாதிய அடையாளமாக இருப்பதாகச் சொல்வது தமிழ்த் தெரியாத தலைவர்கள் பேச வேண்டிய பேச்சு. கொம்பன் என்றால் உயர்ந்தவன், பலசாலி, உச்சத்தில் இருப்பவன் என்றுதான் அர்த்தமே தவிர, அது சாதியச் சொல் அல்ல. ‘நீ பெரிய கொம்பனா’ எனக் கிராமத்தில் பேசுவதும், ‘அந்த மரக்கொம்பை ஒடி’ எனச் சொல்வதும் தமிழ் வழக்கில் இருக்கும் வார்த்தைகள்தானே… ‘கொம்பன்’ என்கிற வார்த்தையே தவறு என்றால் மாட்டுக் கொம்புக்கு இனி மாற்று வார்த்தை கண்டுபிடித்துக் கொடுப்பாரா இந்த மருத்துவர்? ‘கும்கி’ படத்தில் ஒரு யானைப் பாத்திரத்துக்கு ‘கொம்பன்’ என்றுதான் பெயர் வைத்திருப்பார்கள். அப்படிப்பார்த்தால் அந்த யானை தேவர் சாதி யானையா?
இப்போது ‘கொம்பன்’ படத்துக்கு எதிராகப் போராடுவதுபோல் முன்பு கமலஹாசன் நடித்த ‘சண்டியர்’ படத்துக்கு எதிராகவும் மருத்துவர் கிருஷ்ணசாமி போராடினார். கமலஹாசன் என்கிற அந்த மாபெரும் கலைஞன் மருத்துவர் மீது கொண்ட மரியாதையால் ‘சண்டியர்’ என்கிற தலைப்பை மாற்றினார். ஆனால், சில மாதங்களுக்கு முன் ‘சண்டியர்’ என்கிற தலைப்பில் ஒரு படம் வெளியானபோது மருத்துவர் கிருஷ்ணசாமி எங்கே போனார்? கமல் நடித்தால் சண்டியர்… புதுமுகம் நடித்தால் மண்டியரா? அதேபோல் இந்த ‘கொம்பன்’ படத்திலும் கார்த்திக்கு பதிலாக வேறு ஏதாவது புதுமுகம் நடித்திருந்தால் மருத்துவர் கிருஷ்ணசாமி அமைதியாக இருந்திருப்பார். அப்படித்தானே அர்த்தம்?
இப்போதும் ‘கொம்பன்’ படத்தில் தவறு இருப்பதாக நினைத்தால், படத்தைப் போட்டுக் காட்டச் சொல்லி தனது மனக் கருத்தை மருத்துவர் கிருஷ்ணசாமி வெளிப்படுத்தி இருக்கலாமே… அதைச் செய்யாமல் ‘கொம்பன்’ படத்தைத் தடை செய்யச் சொல்லி சட்டமன்றத்தில் குரல் எழுப்பியும் நீதிமன்றத்துக்குப் போய் தடை கேட்டும் போராட வேண்டிய அவசியம் என்ன வந்தது?
அண்ணன் கிருஷ்ணசாமி சட்டமன்றத்துக்குப் போனது கொம்பனை பிரச்னையாக்க அல்ல. சாதாரண சும்பனையும் கொம்பனாக்க. ஆனால், அதைச் செய்யாமல் திரைப்படங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா? இதற்குத்தான் மருத்துவர் கிருஷ்ணசாமி அரசியலுக்கு வந்தாரா?
‘கொம்பன்’ படத்தில் தேவேந்திரகுல மக்களை அவமதிக்கும் காட்சிகளும் வசனங்களும் இருப்பதாகச் சொல்லி மருத்துவர் கிருஷ்ணசாமி போராடி வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதிக்கு தி.மு.க. கூட்டணியில் இடம் வாங்கியவர், தான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அவரே போட்டியிட்டார். ஏன் தேவேந்திர குல சமூகத்தில் அறிவார்ந்த பிள்ளைகளே இல்லையா? அறிவிற்சிறந்த பெருமகன்கள் எத்தனையோ பேர் தேவேந்திர குலத்தில் இருக்க, சட்டமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் தான் ஒருவரே சிறந்தவர் என நினைத்த கிருஷ்ணசாமியின் செயல்பாடுதான் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாக இருந்தது? இந்த அவமானத்தைக் கண்டித்து எந்த நீதிமன்றத்துக்குப் போவது?
‘கொம்பன்’ என்கிற தலைப்பே தவறு என இப்போது சொல்லும் மருத்துவர் கிருஷ்ணசாமி, பல மாதங்களுக்கு முன்னரே இந்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோது இந்த நாட்டில்தானே இருந்தார்? அப்போதே படத்தின் இயக்குநரையோ கதாநாயனையோ அழைத்துப் பேசியிருக்கலாமே… இயக்குவதும் நடிப்பதும் நமது தமிழ்ப் பிள்ளைகள்தானே… அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இரண்டாம் தேதி படம் வெளியீடு என்றவுடன் கிருஷ்ணசாமி கொடிபிடித்துக் கிளம்பிவருவது ஏனாம்? அன்றைய தேதியில் ‘நண்பேன்டா’ படம் வெளியாகும் காரணமா?
‘கொம்பன்’ படத்தை மருத்துவர் கிருஷ்ணசாமியுடன் ஒருசேர உட்கார்ந்து பார்க்க நான் தயாராக இருக்கிறேன். படத்தில் அவர் சொல்லும் தவறுகள் நியாயமானதாக இருந்தால், அவர் பக்கம் இருந்து நானும் போராடுகிறேன். ஆனால், அதைச் செய்யாமல் அரசியல் ஆதாயத்துக்காகவும் யாரையோ திருப்தி செய்யவும் ‘கொம்பன்’ படத்தை தடை செய்யக் கோரும் அவருடைய போராட்டம் தொடர்ந்தால், அது மதிப்புமிக்க ஒரு தலைவர் செய்கிற மலிவான அரசியலாகவே இருக்கும். இத்தகைய அர்த்தமற்ற போராட்டங்களைக் கைவிட்டு, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியலுக்கான  போராட்டங்களில் அண்ணன் கிருஷ்ணசாமி அக்கறை காட்டினால் எங்கள் எல்லோருக்குமான ‘கொம்பன்’ நிச்சயம் அவர்தான். ‘கொம்பன்’ என்றால் உயர்ந்தவன் என்கிற அர்த்தமும் அவருக்கே சாலப் பொருந்துவதாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

காலிக்குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

குடிநீர் பிரச்னையை தீர்க்க  வலியுறுத்தி காலிக்குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை நெல்லையாபுரம் தெருவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் பயன்பெறும் வகையில் வீட்டுக் குடிநீர் இணைப்பு, பொது குடிநீர் குழாய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. பழையபேட்டையில் உள்ள நீரேற்றும் நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லையாம். இதையடுத்து இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காலிக் குடங்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது

அடிதடியை எடிட் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்: பிரசாந்த் பூஷண்

புது தில்லி: ஆம் ஆத்மி செயற்குழுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவுகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண். ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கேஜரிவால் பேசிய வீடியோ பதிவுகள் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதாகவும், பல காட்சிகள் அவற்றில் காணாமல் போயுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்… அன்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டது தொடர்பான காட்சிகள் வீடியோவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நிலம் எடுத்தல் அவசர சட்டத்தை  மீண்டும் பிறப்பிக்கக் கூடாது: ராமதாஸ்

நிலம் எடுத்தல் அவசர சட்டத்தை  மீண்டும் பிறப்பிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிகையில்,
நிலம் எடுத்தல் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்காக மத்திய அரசு கடந்த திசம்பர் மாதம் பிறப்பித்த அவசரச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை- நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத் திருத்த மசோதா’ கடந்த 10 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்த போதிலும் அவை வெற்றி பெறவில்லை.
இதையடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதியுடன் காலாவதியாகவிருக்கும் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு வசதியாக அண்மைக் காலங்களில் இல்லாத வகையில், மாநிலங்களவைக் கூட்டத் தொடர் மட்டும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரமும் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படும் ஆபத்து உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உழவர்களுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் எதிரானதாகும்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் அரசு மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்கள் உழவர்களுக்கு நன்மை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். ஆனால், எந்த வகையில் இது உழவர்களுக்கு நன்மை அளிக்கும் என்பது தான் தெரியவில்லை. மக்களவையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதா உழவர்களுக்கு இருக்கும் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி அரசு&தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின்  ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இப்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நிலங்களை பெரிய அளவில் கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் புதிய மசோதாவில் அகற்றப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது. கையகப்படுத்தப்பட்ட இடம் 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை திரும்பவும் அவற்றின் முந்தைய உரிமையாளர்களிடமே வழங்க பழைய சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது. அந்தப் பிரிவையும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதா நீக்கியிருக்கிறது.
மக்களவையில் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த சுமார் 85 திருத்தங்களில் ஒன்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றால் உழவர்களுக்கு பெரிய அளவில் நன்மை கிடைக்கப் போவதில்லை. இன்றைய நிலையில், இந்தியா முழுவதும் உள்ள உழவர்கள் பெரும் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில வாரங்களில்  வறுமை காரணமாக 12&க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் எதிர்பாராதவிதமாக பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் அங்குள்ள விவசாயிகள் பெரும் கடன்சுமைக்கு ஆளாகியிருக்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதுடன் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருவதற்காக தேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் – உழவர்களின் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் நிலை நிர்ணயிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து தான் நரேந்திர மோடி பிரதமர் ஆனார். ஆனால், மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்றதும்  பயிர்களுக்கான கொள்முதல் விலையை சுமார் 4 விழுக்காடு மட்டுமே உயர்த்தியதுடன், மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்றும் ஆணையிட்டது. இதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பறிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது மனிதாபிமான செயலா? என மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.
மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைவதற்குள்ளாகவே பிரதமரின்  செல்வாக்குக் குறையத் தொடங்கி விட்டதாக இந்திய கள நிலைமையை ஆய்வு செய்த இராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இதை தமது அரசின் வேளாண் துறை செயல்பாடு குறித்த மதிப்பீடாக பிரதமர் கருத வேண்டும். வேளாண் தொழிலை அடியோடு அழிக்கும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவும் நிலையில், அதை வரிந்து கட்டிக் கொண்டு விவசாயிகள் மீது திணிப்பதை கைவிட்டு, அது குறித்த அவசர சட்டம் தானாக காலாவதியாக அனுமதிக்க வேண்டும். இதற்காக அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்; அனைத்து உழவர்களையும் வாழ விட வேண்டும். – என்று கோரியுள்ளார்.

இளம் பெண் குழந்தையோடு மாயம்

  murugeshwari-photo-horz வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் இளம்பெண் குழந்தையோடு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ஆர்சி தெருவைச் சேர்ந்தவர் தவுடன் என்ற ரஜினி. இவருக்கும் அருகிலுள்ள ஊரைச் சார்ந்த முருகேஷ்வரிக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு புவனேஸ்வரி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தவுடன் என்ற ரஜினி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி முருகேஷ்வரியையும் மகள் புவனேஸ்வரியும் காணாமல் தவித்தார். ஒரு வேளை உறவினர்கள் வீட்டுக்குச் சென்று இருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரித்துள்ளார். ஆனால் அங்கேயும் அவரைக் காணவில்லை. பாலா இடங்களில் தேடியும் அவர், மற்றும் குழந்தையும் காணவில்லை. உடனடியாக அவர் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தாயையும், மகளையும் யாரும் கடத்திச் சென்றார்களா இல்லை வீட்டில் கணவன் மனைவி சண்டை காரணமாக எங்கேயும் சென்றாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: இரா.முத்தரசன் கோரிக்கை

திருவாரூர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தர வேண்டும் என்று  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அதில்,

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக் கழக கட்டிடம் இடிந்து ஐந்து பேர் பலியானதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் மிகுந்த கவலை அளிக்கின்றது.
ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிடு செய்து கட்டுமானப் பணிகள் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.
கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் 2014ல் இரு முறை குடியரசுத் தலைவரின் வருகைக்கு ஏற்பாடு செய்து ரத்து செய்யப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டும்.
கலவைப் பொருள்கள் உரிய வகையில் பயன் படுத்தாமலும், அவசர கதியில் பணிகளை முடிக்க மேற் கொண்ட முயற்சியாலும், பணி புரியும் தொழிலாளர்களை ஒய்வின்றி இரவு பகலாக பணிகளில் ஈடுபடுத்திய காரணத்தாலும் விபத்து நடை பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
ஒப்பந்தக் காரரின் பொறுப்பற்ற செயலாலும் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவும் விலை மதிக்க முடியாத ஐந்து மனித உயிர்கள் பலியாகி உள்ளன. 16க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த இருவர், உத்திரபிரதேசத்தை சேர்ந்த இருவர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளனர்.  இறந்தவர்களில் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
காயமடைந்தவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பும் வரை உயர் மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிதி வழங்கிட வேண்டும்.
மத்திய பல்கலைக் கழக கட்டுமான பணிகள் தொடங்கிய நாள் முதல் பெரும் ஊழல் முறைகேடுகள் நடை பெற்று வருவதன் காரணமாக இவ்விபத்து நடை பெற்றுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். விபத்து நடைபெற்றது குறித்தும், கட்டுமான பணிகள் நடை பெறுவது குறித்தும் பணியல் உள்ள உயர்நீதி மன்ற நீதிபதியைக் பொண்டு முழுமையான விசாரனை நடத்தப்பட வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். இனியும் இத்தகைள கோர விபத்துகள் நடைபெறாமல் இருக்க உ நடவடிக்கைகளை அரசு மேற் கொள்ள வேண்டும். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

puthiya-thamizhagam விருதுநகர், நெல்லை  மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ‘ கொம்பன்’ திரைப்படத்தை தணிக்கை குழு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.  

2015 உலகக் கோப்பையில் சாதித்த 5 பேட்ஸ்மென்கள்

2015 உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தத் தொடரில் சாதனை படைத்த டாப் 5 பேட்ஸ்மென்கள் விவரம் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 22,293 ரன் எடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 38 செஞ்சுரிகள், அவற்றில் 2 இரட்டை சதங்கள், (அதுவும் முதல் முதலாக உலகக் கோப்பை இரட்டை சதம்), நூறு பந்துக்கு 89 ரன் என்ற ரன் ரேட் என இந்த உலகக் கோப்பை சாதனைகள் நீள்கின்றன. இவற்றில் பேட்டிங்கில் அசத்திய 5 பேர், மார்டின் குப்டில், குமார் சங்ககரா, ஏபி டி விலியர்ஸ், பிரெண்டன் டெய்லர், ஷிகர் தவான்.. ஆகியோர். குப்டில்: 547 ரன் குவித்து முதலிடத்தில் உள்ளார். 163 பந்தில் 237 எடுத்து உலக கோப்பை கிரிக்கெட் ரன்னின் உச்ச பட்ச சாதனை படைத்தார். குமார் சங்ககரா: 541 ரன் குவித்து இரண்டாமிடம். இதில் சராசரி 108.20 என்பது குறிப்பிடத்தக்கது. ஏபி டிவில்லியர்ஸ்: 482 ரன் குவித்தார். ஷிகர் தவான்: 449 ரன் எடுத்துள்ளார். பிரண்டன் டெய்லர்: 433 ரன் குவித்துள்ளார்.

கொம்பன் தடை கோரி நெல்லையில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 31 பேர் கைது

puthiya-thamizhagam திருநெல்வேலி: கொம்பன் படத்துக்கு தடை கோரி, திருநெல்வேலியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர் 31 பேரை போலீஸார் கைது செய்தனர். கொம்பன் திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதியளிக்கவில்லை. இந்நிலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச்செயலர் நடராஜன் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 31 பேரை கைதுசெய்தனர்.