பிரதமர் நரேந்திரமோடி புகழ்பாடினால் அவ்வளவுதான் என்று கட்சிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் கே.எஸ்.அழகிரி.
மோடியின் புகழ்பாடி, கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் குழப்பவாதிகளை காங்கிரஸ் தலைமை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
நரேந்திர மோடியை எதிர்ப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று அரசு அதிகாரிகளாக இருந்து காங்கிரசில் சேர்ந்து, மத்திய அமைச்சர் பதவி அனுபவித்த ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இதை தெரிவிக்க விரும்பினால் சோனியா, ராகுல் ஆகியோரிடம் தெரிவித்து இருக்கலாம்.
பொதுவெளியில் சொல்வது, பாஜக.,வை எதிர்த்து போராடும் காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்து விடும்.
விஷமத்தனமான கருத்துகளை ஜெய்ராம் ரமேஷ் போன்றோர் கூறுவதும், அதை சிலர் ஆமோதிப்பதும் காங்கிரஸ் கட்சிக்கு செய்கிற, பச்சை துரோகம். மோடியை புகழ பாஜக.,வில் நிறைய தலைவர்கள் உள்ளனர். அந்த வேலையை இவர்கள் செய்வதற்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
மோடியை துதிபாடி பிழைக்க நினைத்தால் காங்கிரசில் இருந்து வெளியேறுவது நல்லது. இத்தகைய குழப்பவாதிகளை காங்கிரஸ் தலைமை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் !