
தமிழக கோவில்களில் பணிபுரிந்து வரும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு.
.தமிழக கோவில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு 6 மற்றும் 7வது ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் புகழ்பெற்ற வடபழனி, திருச்செந்தூர், பழனி ஆகிய முருகன் கோவில்களில் தவில், மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைக்கும் கலைஞர்களுக்கான ஊதியத்தை 8 ஆயிரத்து 185 ரூபாயிலிருந்து, 10 ஆயிரத்து 100 ரூபாயாக உயர்த்தி கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அதே போல் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனக் கோரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இசைக்கலைஞர் கணேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், 6 மற்றும் 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் சம்பள பாக்கியை 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.



