திமுக., பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைவை அடுத்து தி.மு.க.வின் அடுத்த பொது செயலாளர் யார் என்ற கேள்வி அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. கடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளரின் சில முக்கிய அதிகாரங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டன.
இருப்பினும், பொதுச் செயலாளர் பதவி முக்கியமானது என்பதால், அதனை உடனே நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் திமுக., உள்ளது. அதிமுக.,வில் நிரந்தரத் தலைவர் எம்.ஜி.ஆர்.தான்! எனவே பொதுச்செயலாளர் பதவிதான் அடுத்த உயர்ந்த பதவி என்று அறிவித்து, ஜெயலலிதா கட்சியைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது போல், ஸ்டாலினும், திமுக., தலைவர் பதவி மு.கருணாநிதிக்கு மட்டுமே என்று அறிவித்து, பொதுச் செயலாளரின் அதிகாரங்களைக் கூடுதல் ஆக்கி தாமே வைத்துக் கொள்ளலாம் என்ற கருத்தும் திமுக.,வில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், விரைவில் திமுக பொதுச் செயலாளர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி அல்லது, கருணாநிதி குடும்ப உறுப்பினர் யாரேனும் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப் படலாம் என்று கிசுகிசுக்கள் உலா வருகின்றன.
இந்நிலையில், இப்பதவிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அல்லது துணை பொது செயலாளர் பெரியசாமி ஆகியோர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. துரைமுருகன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டால், பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலு , திமுக எம்.பி. டி.ஆர்.பாலு , முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகிய மூவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப் படுகிறது.