கொரோனா… தீவிரத்தை இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் சமூகத்துக்குப் புரிய வைக்க வேண்டும்!

Published:

corona virus alert - 2026

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 571, குணமடைந்தவர்கள் 8, பலியானவர்கள் 5, ஆக 558 பேர் தற்போது கொரோனா பாதிப்பு உடையவர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 500 பேருக்கும் அதிகமானோர் டில்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களும்,பிறகு அவர்களின் தொடர்புகளில் இருந்தவர்களும் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது குறித்து எந்த விமர்சனமும் செய்ய முடியாது, செய்யக்கூடாது. அது அவர்களின் உரிமை. ஒரு வேளை, அனுமதியில்லாமல் அந்த மாநாடு நடத்தப்பட்டிருந்தாலும் கூட, தில்லி மாநில அரசு தான் அதற்கான பொறுப்பை எடுத்து கொள்ளவேண்டும்.

ஆனால், தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக, மத்திய, மாநில அரசுகள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே முன் வந்து, தொற்று உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பல வழிகளில் கூறிய பிறகும் அவர்கள் பரிசோதனைக்கு முன்வராததே தற்போது விமர்சனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. ‘ஒரே தொற்று, ஒரே குரூப்’ 1200 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழகத்தின்

சுகாதார துறை செயலாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், அந்த 1200 பேர் மூலம் எத்துணை ஆயிரம் பேருக்கு இது பரவியிருக்க வாய்ப்பு உள்ளது, அது எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் நம் முன் உள்ள கேள்வி. அந்த கேள்விக்கான விடைகளை தேடி அரசு சுகாதார துறை ஊழியர்களை பனி செய்ய விடாமல் தடுத்து, சோதனை செய்ய விடாமல் செய்வதை தான் விமர்சனம் செய்கிறோம்.

இதை மதரீதியான விமர்சங்களாக கருதுவது தவறு. நேற்று கயத்தாறில் தொற்று இருந்தவர்களின் குடுமபத்தினருக்கு சோதனை செய்ய சென்ற போது சுகாதார துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.தடுக்கப்பட்டனர். இன்று அந்த குடும்பத்தில் உள்ள இருவருக்கு தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

மேலும், தப்லீக் மாநாட்டில், மஸ்தூராத் ஜமாஅத் (தப்லீக் இயக்கத்தின் மகளிரனி) யை சேர்ந்த பலர் (வெளிநாட்டினர் உட்பட) தமிழகதில் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர் என்று மத்திய புலனாய்வு துறை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (ஆதாரம் : தி ஹிந்து)

இவர்கள் மசூதிக்குச் செல்லாமல், அந்தந்த பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் வீட்டிலே தங்கி மத போதகத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், அவர்கள் குறித்த விவரங்களை அறிந்து உடனடியாக அவர்களையும், அவர்களின் தொடர்புகளில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து சிகிச்சைக்கு உட்படுத்துமாறு மாநில அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும், மீண்டும் நாம் சொல்வது ஒன்று தான். இந்த விவகாரத்தை மதரீதியான விவகாரமாக நாம் பார்க்கவில்லை யென்றாலும் கூட, இதை மதரீதியான கண்ணோட்டத்துடன் தான் இஸ்லாமிய அமைப்புகள் சில அணுகுகின்றன.

அதை விடுத்து இஸ்லாமிய சமூகத்தின் நலன் கருதியாவது, தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள், அவர்களின் தொடர்புகளில் இருந்தவர்கள், அவர்கள் சென்ற இடங்கள் ஆகிய விவரங்களை அரசுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே மிக பெரிய பாதிப்பை தடுக்க முடியும்.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஏனென்றால், இந்த மத போதகம் என்பது இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தான் அதிக அளவில் நடந்திருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆகையால் அதிகளவில் பாதிக்கப்படப்போவது இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர்கள் தான் என்பதையாவது கருத்தில் கொண்டு அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இளைஞர்கள், நிலைமையின் தீவிரத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

1918 முதல் 1920ஆம் ஆண்டு வரை பரவிய இன்ஃப்ளுவென்ஸா மற்றும் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் H1N1 நோய்களால் உலகம் முழுவதும் 50 கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.

ஸ்பானிஷ் ஃப்ளு என்று அழைக்கப்படும் இந்த நோயால் சுமார் 10 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.5 கோடி பேர் வரை இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

உலகில் இதுவரை ஏற்பட்ட வைரஸ் நோய்களில் மிகவும் மோசமானது என்று இன்று வரை கருதப்படுகிறது.இந்த தொற்றுக்கான முறிவு மருந்து அல்லது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் எவ்வளவு பொறுப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

ஆகையால், ஏதோ கொரோனா தொற்று 21 நாளில் அகன்று விடும் என்றெல்லாம் எண்ணாமல், இந்த தொற்றின் பரவலால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்த விவரங்களை இஸ்லாமிய இளைஞர்கள் அந்த சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டும். இளைஞர்கள் சொன்னால் பெற்றோர்கள் கேட்கும் காலம் இது.

ஆகையால் இதை மத ரீதியாக அரசுகளோ, கட்சிகளோ, பார்க்கவில்லை ஆனால் மத ரீதியாக இந்த தொற்றை அணுகுவது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று புரிய வைக்க வேண்டியது இளைய சமுதாயத்தின் பொறுப்பு.

மீள்வோம்.வெல்வோம்.

  • நாராயணன் திருப்பதி, (செய்தி தொடர்பாளர், பாஜக.,)

Related articles

Recent articles

spot_img