
கரும்பு விற்பதைப் போல் ஏதோ மரக்குச்சிகளை சீவி இங்கே விற்பனை செய்கிறார்களே… என்ன என்று யோசிக்கிறீர்களா…
வாருங்கள் ஒரு விசித்திர வழிபாட்டைப் பற்றி தெரிந்து கொள்வோம்…
நாடு முழுதும் இந்துக்களிடையே, பாரம்பரியமாக வித்தியாசமான வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் இருப்பது உண்டு. பெரும்பாலும் இந்தப் பழக்கங்கள், பண்டிகைகள், ராமாயண, மகாபாரத இதிகாசங்களை ஒட்டி கடைப்பிடிக்கப் படுபவை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசும் மொழிகளால் வேறுபட்டிருந்தாலும் கலாசார பண்டிகைகளால் இந்துக்களின் மனத்தில் வழிபடு முறை ஒன்றாகியிருக்கிறது. அதற்கு உதாரணமான ஒரு பண்டிகை தமிழகத்தின் கொங்கு வட்டாரத்தில் கடைப்பிடிக்கப் படுகிறது. இன்றளவும், சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வித்தியாச விசித்திரத் திருவிழாவை கொண்டாடுகிறார்கள்.
காவிரி நதியைப் போற்றி, பொங்கி வரும் காவிரியை வரவேற்று ஆடி 18ஐக் கொண்டாடுகிறார்கள் காவிரிக் கரை வாழ் மக்கள். இங்கே தமிழ் மாதமான ஆடி 1 ஆம் தேதியை வரவேற்று கரூரில் தேங்காய் சுட்டு மகிழ்ச்சியுடன் காணும் மக்களைக் காணும் போது, காலம் காலமாக நடந்து வரும் இந்த சம்பிரதாய நிகழ்ச்சி நமக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதனடிப்படையில் ஆடி மாதம் ஒன்றாம் தேதி அன்று மாலை கரூர் மாவட்டத்தின் அமராவதி ஆற்றங்கரையோரமான கரூர் லைட் ஹவுஸ் கார்னர், படிக்கட்டுத்துறை, பெரிய ஆண்டாங்கோயில், சின்ன ஆண்டாங்கோயில், திருமாநிலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆடி தேங்காய் சுடும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ‘‘ஆடி-18’’ அன்று முடிவுக்கு வந்தது.
இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ஆம் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக நம்பிக்கை.
ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும்.
பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, ஒரு நீண்ட முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமரக் குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். பின்னர் அந்தக் குச்சியை சுற்றி மஞ்சளைப் பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஓர் இடத்தில் நெருப்பு மூட்டி, அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுகிறார்கள்….