அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை குரங்குகளுக்கு செலுத்தி சோதித்ததில், வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி, கொரோனா வைரஸை மூக்கு மற்றும் நுரையீரலில் பரவாமல் தடுத்துள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பூசி ஆராய்ச்சியில் உள்ள நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியை விரைந்து அறிமுகம் செய்வதன் மூலம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பில் டிரம்ப் உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, குரங்குகளை கொரோனா வைரஸிலிருந்து தடுத்துள்ளதாக நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 குரங்குகளுக்கு இரண்டு வெவ்வேறு அளவுகளில் இந்த தடுப்பூசியை செலுத்தினர். பின்னர் குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றை உண்டாக்கினர்.
இரண்டு நாட்களுக்கு பிறகு அவற்றை பரிசோதித்ததில் 8 விலங்குகளுக்கு மூக்கு மற்றும் நுரையீரலில் வைரஸ் பரவாமல் இருந்தது. அனைத்து 16 குரங்குகளும் குறைந்தபட்ச பாதுகாப்பின் சில அறிகுறிகளைக் காட்டின.
இந்த சாதகமான முடிவுகளால் அடுத்த கட்டமாக 30,000 மனிதர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பரிசோதனையை மாடர்னா நிறுவனம் செய்து வருகிறது.
தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனைத் தீர்மானிப்பதற்கான 3 கட்ட சோதனைகளும் நவம்பர் அல்லது டிசம்பரில் முடிவடையும். இவ்வாறு அந்த மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.