
என்னை அரசியலுக்கு வரச் சொல்லி மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நடிகர் ரஜினி இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு…
நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே, விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம், வற்புறுத்த வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழகம். ஜெய்ஹிந்த்… என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தாம் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்தார் நடிகர் ரஜினி காந்த். ஆனால், அவரது ரசிகர் மன்றத்தினரில் ஒரு பிரிவினர் ‘ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிக் கொண்டு, அரசியலுக்கு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து, ஆங்காங்கே அறப் போராட்டம் நடத்துவது, போஸ்டர்கள் ஒட்டுவது, சமூகத் தளங்களில் கோரிக்கை விடுத்து வீடியோக்கள் பதிவு செய்வது என்று இருந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நேற்று குவிந்த அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அறப் போராட்டம் நடத்தினர். இதனால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘வா தலைவா வா’ என ரஜினிக்கு அழைப்பு விடுத்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்திருந்தனர்.