
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, ‘பிரதமர் மோடி பற்றி உங்கள் எண்ணம் என்ன? அவரின் தலைமையின் கீழ் வெளிநாடுகளில் இந்தியா குறித்தான பார்வை வெகுவாக மாறியுள்ளதே?’ என்றதற்கு,
கமல், ‘அவர் எப்போதும் அதைப் போன்ற பண்பை வெளிப்படுத்துவதில்லை.
அவ்வப்போது அப்படியான ஒரு நடவடிக்கையை வெளிக்காட்டுகிறார். தொடர்ச்சியாக அவர் அப்படி செயல்பட்டால், அது நாட்டுக்கு நல்லது. இதை நான் மட்டுமல்ல, பலரும் உணருகிறோம்.

அவரும் இதை கண்டிப்பாக கவனித்திருப்பார். அந்த விஷயத்தை அவரும் மாற்றிக் கொள்வார். பிரதமர் மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் தலைவர். அதனால் தான் அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார்.
சீக்கிரமே பிரதமர் மோடி, மற்றவர்களுடனும், மற்ற கட்சியினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும். இது பரிந்துரையும் நம்பிக்கையும் கலந்த கருத்து’ என்று தன் பாணியில் பல விஷயங்களை பூடகமாக தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடிக்கு அவர் வெளிப்படையாக புகழாரம் சூட்டியே, இந்தப் பேட்டியில் பேசினார்.

தொடர்ந்து, ‘பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அழைப்பு வந்ததா?’ என்று கேட்ட போது, ‘பாஜகவிடமிருந்து இதுவரை எனக்கு எந்தவித அழைப்பும் பேச்சுவார்த்தைக்கு வந்ததில்லை. அதே நேரத்தில் நான் தான் பாஜகவிடம் பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறேன். கடிதங்கள் மூலமாக, காணொலிக் காட்சி மூலமாக, மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நான் அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை’ என்றார். கமல், இந்த பதிலில் கூட்டணிக் கணக்குகள் குறித்துதான் பேசுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.