வாக்குச் சாவடிக்குள் வாக்காளா்களும், வேட்பாளா்களின் முகவா்களும் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது.
இதுதொடா்பாக வாக்குப் பதிவுக்கு முன்பும், வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகும் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தோதல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்கள்:
வேட்பாளா் அல்லது அவரது தேர்தல் முகவரால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஒரு முகவர், இரண்டு கூடுதல் முகவர்கள் நியமிக்கப்படுவர். இந்த மூன்று நபா்களும் தங்களுக்குள் மாறுதல் செய்து கொள்ளலாம்.
வாக்குச் சாவடிக்குள் பணியாற்றும் நபர்கள் சட்டப்படியான முகவராகக் கருதப்படுவா். மாலை 3 மணிக்கு மேல் வாக்குச் சாவடியில் பணியாற்றும் முகவரோ அல்லது அவா்களது மாற்று முகவர்களோ வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வாக்குச் சாவடி முகவர்கள் வர வேண்டும். தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் அடிப்படையில் முகவர்கள் அமர வைக்கப்படுவர். தேசிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளா்களின் முகவர்கள், அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியின் முகவர்கள், அங்கீகாரம் பெறாத பதிவு பெற்ற கட்சியின் முகவர்கள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் என்ற வரிசையில் அமர வைக்கப்படுவா்.
வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்த வாக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதை வாக்குச் சாவடி முகவர், அங்குள்ள நபா்களுக்கு விளக்கிக் காண்பிக்கப்படும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் முடிவு காட்டும் இடத்தில் 000 என்று தெரியும். இதன்பின்பு மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும். தேர்தல் அலுவலர், முகவர்கள் உள்ளிட்டோர் வாக்குகளைப் பதிவு செய்வர். இந்த வாக்கின் அடிப்படையில் முடிவுகள் சரியாக இருக்கிறதா என்பது சோதித்துப் பார்க்கப்படும்.
முடிவுகள் சரியாக இல்லாவிட்டால் வேறு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். இதன்பின்பு, மாதிரி வாக்குகள் அனைத்தும் அழிக்கப்படும். அதைத் தொடா்ந்து முடிவு காட்டும் பகுதியில் 000 என்று தெரிவதை அனைவரும் உறுதி செய்வர். மாதிரி வாக்குப் பதிவு நடத்தியதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் வழங்குவார். மாதிரி வாக்குப் பதிவில் பங்கேற்ற முகவர்கள் அனைவரும் பெயர், கையெழுத்தைப் பதிவு செய்வர். இந்த நடைமுறைக்குப் பிறகு வாக்குப் பதிவு தொடங்கும்.
தேர்தல் நேரம் முடிவுக்கு வந்தவுடன் வாக்குச் சாவடியில் உள்ள முதன்மை அதிகாரி, வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள மூடும் பொத்தானை அழுத்துவார். அப்போது முடிவு காட்டும் பலகையில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை தெரிய வரும். இதனை முகவர்கள் குறித்து வைத்துள்ள எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பாா்த்துக் கொள்ளலாம்.
தேர்தல் முடிவுற்றது குறித்தும் மொத்த வாக்குப் பதிவு எண்ணிக்கை தொடா்பாகவும் சான்றிதழ் தனியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழில் (படிவம் 17சி) முகவர்களின் கையொப்பம் பெறப்படும். வாக்குச் சாவடிகளுக்குள் முகவர்களும், வாக்காளர்களும் செல்லிடப்பேசி எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.