நாட்டில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இணையதள சேவை பல்வேறு துறைகளிலும், மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இவை அனைத்தையும் குறிவைத்து தகர்த்து, சைபர் குற்றவாளிகள் கோடிக்கணக்கான ரூபாயை இருந்த இடத்திலேயே கொள்ளையடித்து வருகின்றனர்
வங்கி தொடர்பான சேவைகளில் இந்த குற்றமானது பெருமளவில் நடைபெற்று வருகிறது. வங்கி கணக்கு எண்ணை கேட்பது, ஓடிபி எண்ணை கேட்பது உள்ளிட்ட பல வழிகளில், கோடிக்கணக்கான பணம் இணையதள குற்றவாளிகளால் நாள்தோறும் திருடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் சைபர்கிரைம் தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது என்றாலும், அதில் புகார் அளித்து, நடவடிக்கை எடுப்பதற்குள் இணையதள குற்றவாளிகள் உடனடியாக பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து பெருமளவு பணத்தை திருடி விடுகின்றனர்.
இந்நிலையில், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் புகார் அளிக்கும் வகையில், புதிய இணையதள முகவரியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
மேலும் தேசிய இலவச தொலைபேசி சேவை எண்ணையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச காவல்துறைகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், மத்திய அரசு புதிய இணையதள cybercrime.gov.in என்ற முகவரியை பயன்பாட்டு கொண்டு வந்துள்ளனர்.
இந்த இணையதளம் மூலமாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக புகார் அளிக்கும் வகையில், இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் காவல்துறைகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பயிற்சி முறையில் சோதிக்கப்பட்ட வந்த இந்த இணையதளம், தற்போது முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த இணையதள முகவரியில் பாதிக்கப்பட்ட நபர், நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட நபர் உடனே இந்த இணையதளத்தில் புகார் அளித்தால், அவர் இருக்கும் இடத்தில் உள்ள காவல்துறைக்கு உடனடியாக இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாவட்டங்களாக இருந்தால் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி என்ற வழியில் உடனடியாக தகவல் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்யும் முறை இதில் உள்ளது.
அதே போன்று தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 6 காவல் ஆணையரகமாக இருந்தால், உடனடியாக அந்த காவல் ஆணையருக்கு இந்த தகவல் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் விரைவான நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இணையவழியில் எந்த வகை குற்றமாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த இணையதளம் உருவாக்கப்பட்டு தற்போது முழுவீச்சில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இணையதளத்தை பயன்படுத்துவதில் சிரமம் அல்லது சிக்கல் உள்ளவர்களுக்கு, அதற்கென தனியான தேசிய கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி சேவை எண்ணும் (155260) கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பணம் திருடப்பட்ட அடுத்த நிமிடமே இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணமானது முடக்கப்படும்.
மேலும் அனைத்து மாநில காவல்துறைகளும் இந்த இணையதளத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதால், புகார் எங்கிருந்து வந்தாலும் உடனடியாக அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சைபர் கிரைம் ஏடிஜிபியாக வெங்கட்ராமன் உள்ளார். அவரின் கீழ் தான் இந்த இணையதள செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.
மேலும் சைபர் குற்றங்களில் ஒரேவகையான செல்போன் எண்கள் மூலம் அருகில் உள்ள மாநிலங்களில் அல்லது பிற மாநிலங்களில் குற்றங்கள் நடைபெற்றால், உடனடியாக இந்த தகவல் அனைத்து மாநிலங்களுக்கும் பகிரப்படும். அதன்மூலம் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணமுடியும்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, கடந்த சில நாட்களாக முழுவீச்சில் இந்த இணையதளம் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டு அந்த புகார்கள், சென்னை காவல்துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.