திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கோசாலையில், பசு மாடு பராமரிப்பின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக, ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பசு மாடுகளை தானமாக கொடுக்கின்றனர். அனைத்து பசுக்களையும் பராமரிக்க முடியாததால், குறைந்தளவு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, மீதமுள்ள பசுக்களை மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு இலவசமாக வழங்கி விடுகின்றனர்.
இவ்வாறு கடந்த மாதம், 18 பசுக்கள் வழங்கிய நிலையில், தற்போது, 35 பசுக்கள் உள்ளன. இவற்றின் பராமரிப்புக்காக மாதந்தோறும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.
தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் பொறுப்பாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாக பணியை, கடந்த இரண்டு மாதங்களாக கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த, 15 மாதங்களுக்கு முன் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு பசுவின் கால் முறிந்தது. இவற்றை கவனித்து சிகிச்சை அளிக்காமல் விட்டதால் காலில் புழு வந்து எழுந்து நிற்கமுடியாமல் படுத்த படுக்கையாகக் கிடந்த பசு, கடந்த, 22ஆம் தேதி உயிரிழந்தது.
இதை கோவில் நிர்வாகம் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டது. தற்போது இறந்த பசுவின் போட்டோவை கோவில் ஊழியர்களே எடுத்து சமூக வலைதளங்களில் நேற்று பரவவிட்டதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.