கடந்த சில மாதங்களாக, பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை (Old Notes) வாங்குவதும் விற்பதும் அதிகரித்து வருகிறது. பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை மக்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
பல வலைத்தளங்களில், இந்த நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு நல்ல தொகை கிடைப்பதாகக் கூறப்படுகின்றது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்கப்படுகின்றன.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை (Old Coins) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்வதற்காக சில மோசடிக் கூறுகள் மத்திய வங்கியின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலைப் பற்றி கண்டிப்பாக முழுமையாக தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைன் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதற்காக தினமும் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து வருகிறார்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில நிறுவனங்கள் தவறான முறையில் பயன்படுத்துகின்றன. மற்றும் பல்வேறு ஆன்லைன், ஆஃப்லைன் தளங்கள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதற்கு கட்டணம்/கமிஷன்கள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் பெயரில் வசூலிக்கின்றன என ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. இது முறையான செயல்பாடு அல்ல” என கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில், ‘இதுபோன்ற எந்த நடவடிக்கையிலும் ரிசர்வ் வங்கி ஈடுபடவில்லை. ரிசர்வ் வங்கி இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் கட்டணம் அல்லது கமிஷன் எதுவும் கேட்காது.
அதேவேளையில், இவ்வாறான செயற்பாடுகளுக்காக எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ எந்தவொரு அங்கீகாரத்தையும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்று பணம் ஈட்ட நினைப்பவர்கள், இதுபோன்ற செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (Reserve Bank) கையாள்வதில்லை என்பதையும் இதற்கு எந்தவித கட்டணம் அல்லது கமிஷனையும் ரிசர்வ் வங்கி வசூலிக்கவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் பெயரில் யாரும் உங்களை ஏமாற்றாமல் இருக்க இந்த தகவல் உங்களுக்கு உதவும். ரிசர்வ் வங்கியின் பெயரில் இந்த செயல்களில் ஈடுபடுபவர்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.