தன் மனத்தில் தோன்றிய உண்மையைப் போட்டுடைத்ததற்காக, சமூக வலைதளங்களில் அவதூறுக் கருத்துக்களைப் பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சென்னை பூக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரை பணியிட நீக்கம் செய்துள்ளார்கள்.
தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சேகர், தற்போது சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியில் உள்ளார். இவர் அண்மையில் ‘பேஸ்புக்’ வலைதளத்தில் தன் நண்பரின் பதிவு ஒன்றுக்கு பதில் அளித்திருந்தார்.
அதில் சேகர், ‘தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழில ஒருத்தன் 5௦௦௦ ரூபாய் கொடுக்கச் சொன்னான். வந்தா அதை காணோம். அதை கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்தி மொழியில் பேசியதை எதோ புரிஞ்ச மாதிரி, சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை’ என பதிவு செய்திருந்தார்.
பிரதமர் மோடி கருப்புப் பண ஒழிப்பு தொடர்பில் ஒரு முறை பேசிய போது, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டால், நாட்டில் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடலாம், அந்த அளவுக்கு நம் நாட்டின் ஊழல்வாதிகள் கருப்புப் பணத்தை அங்கே தேக்கி வைத்துள்ளார்கள்” என்று குறிப்பிட்டார்.
ஆனால், அதை மோடி ரூ.15 லட்சம் கொடுப்பதாகச் சொன்னார் என்று காங்கிரஸ், திமுக., பிரசாரம் செய்தது. அதையே திமுக.,வினர் சமூகத் தளங்களில் அவதூறுப் பிரசாரம் செய்து வருகிறது. அதைக் குறிப்பிட்டு, காவல் உதவி ஆய்வாளர் சேகர், ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். ஆனால் அவர் அளித்த நேர்மையான பதில், தமிழக அரசின் மீதான அவதூறு பிரசாரம் என்று குற்றம் சாட்டியிருக்கிறது தமிழக காவல்துறை.
தமிழக காவல் துறைக்கும் காவலர்களுக்கும் நன்மை செய்து வரும் அரசு குறித்து காவலர் இப்படி பதிவு செய்வது நியாயமா என திமுக.,வைச் சேர்ந்த ஒருவர் ‘பேஸ்புக்’கில் கேள்வி எழுப்பி இருந்தார். இதை அடுத்து, அந்தக் கேள்வி பரிமாற்றம் விரிவடைந்துள்ளது.
இதை அறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் உதவி ஆய்வாளர் சேகர் கருத்து பதிவிட்டது சர்ச்சைக்குரியது என்று தீர்மானித்து, அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.