கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்..

Published:

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்ததை திமுக புறக்கணித்திருந்தது ஏன் என இதற்கான காரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று விளக்கமளித்தார்.

தேநீர் விருந்தை புறக்கணித்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின்கீழ் விளக்கமளித்து ஸ்டாலின் பேசியதாவது,

நீட் விலக்கு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் மாளிகையில் கடந்த 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. இந்த நேரத்தில், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்துக்கொள்வது ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், சட்டசபை மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமையும். எனவே, அந்த விருந்தில் கலந்துக்கொள்ளவில்லை. இது குறித்து கவர்னருக்கு கடிதம் எழுதினேன்.

கவர்னருடன் எங்களுக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை, எனக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இருக்கிறது. மேடை பேச்சுகளில் இந்த அரசை பல முறை கவர்னர் பாராட்டி பேசியுள்ளார். அவர் பழகுவதற்கு இனிமையானவர். கவர்னருக்கு உண்டான மரியாதையை நாங்களும் தொடர்ந்து அளிப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளை விட, தமிழகத்திற்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதே முக்கியமானது. சட்டசபை மாண்பையும், தமிழர்களின் உணர்வுகளையும் மதித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.தமிழக முதல்வராக சட்டசபையின் மாண்பை காப்பதே என் பொறுப்பாகும்.

இதனால் தான் கவர்னர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தோம். கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி இன்றுடன் 70 நாட்கள் ஆகியுள்ளது. தற்போது அம்மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க கவர்னர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. அது தொடர்பான நடவடிக்கைகளை பார்த்துவிட்டு தேவைப்பட்டால் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் பேசினார்.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!
images 55 3 - 2026

Related articles

Recent articles

spot_img