கொடைக்கானலில் தொடர் விடுமுறையான கடந்த நான்கு நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். சீசன் துவங்கும் நிலையில் குறைந்த நாட்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்துசென்றுள்ளது இதுவே முதல் முறை என்கின்றனர். இது வழக்கத்தை விட அதிகம் என சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் கோடை சீசனின் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும். வழக்கமாக ஆண்டுதோறும் கோடை சீசனான மே மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கொடைக்கானலின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க வந்து செல்வர். இந்த ஆண்டு பள்ளி தேர்வுகள் மே மாதம் துவங்குகிறது என்பதால் முன்னதாகவே கோடையை அனுபவிக்க குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை வாரவிடுமுறை தினங்களில் ஒவ்வொரு வாரமும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த வாரம் வியாழக்கிழமை சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டு, வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி, வழக்கமான சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் அரசுவிடுமுறையால் சுற்றுலாபயணிகள் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்தது.