ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பார்சலை, பெண் ஒருவர் பிரித்தபோது பயங்கர துர்நாற்றம் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியர் காலனியில் நிதி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் செயலி மூலம் ஷாம்பு ஒன்று வாங்குவதற்கு ஆர்டர் செய்து உள்ளார். ஆர்டரை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு பார்சல் ஒன்றை அனுப்பியது.
அதில், ஷாம்புக்கான தொகை ரூ.330-ஐ பார்சல் கொண்டு வந்த நபரிடம் அந்த பெண் வழங்கினார். பின்னர், பார்சலை பிரித்தபோது கடுமையான துர்நாற்றம் வீசியது.
அவர், பார்சலின் உள்ளே பார்த்தபோது அதில் ஷாம்புக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு ஒன்று இருந்தது. அதைப்பார்த்த பெண் நிதி ஆலோசகர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தும் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.