பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு முடிவு விழாவை கொண்டாடும் வகையில் இமாச்சல் பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி,
இந்திய நாட்டினரின் கௌரவம், பாதுகாப்பு, வளர்ச்சி என அனைவரின் நலனுக்கு தேவையான அனைத்தையும் தன்னால் முடிந்த அளவிற்கு தான் செய்ய வேண்டும் என்பதே எனது முதன்மையான குறிக்கோளாகும்.
2014ம் ஆண்டுக்கு முன்னர் ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய அரசுகள் ஊழலுக்கு அடிபணிந்து விட்டதாகவும் குறிப்பாக மக்கள் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு சென்றடைவதற்கு முன்னரே கொள்ளையடிக்கப்பட்டதை சுட்டி காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அதனால் இப்போதைய பாரதிய ஜனதா கட்சி மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவதை குறிப்பிட்டார்.
ஜன்தன் வங்கி கணக்குகள் மூலமாக மக்களுக்கான திட்டங்களில் மக்களுடைய பணங்கள் மக்களுக்கே சென்றடைகிறது. ஒரு காலத்தில் சமையலறை புகை மூட்டமாக காட்சியளித்த நிலையில் இப்போது “உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்களை சாதாரண மக்களும் பெறமுடிகிறது.
இவை தவிர எவ்வித பயமும் இன்றி சிகிச்சையை மேற்கொள்ள “ஆயுஸ்மான் பாரத்” திட்டம், பெண்ணின் உரிமைக்காக எதிர்த்துப் போரிட “முத்தாலக் தடைச் சட்டம்” உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாஜக அரசு நடை முறைப்படுத்தியுள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஓய்வூதிய திட்டம், உதவித்தொகை பெரும் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் அதில் ஊழலை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நேரடி பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
சிலரின் ஆட்சிக் காலத்தில் ஒரு சில பிரச்சனைகள் தீர்க்கவே முடியாத நிரந்தர பிரச்சனைகள் என கருதப்பட்ட நிலையில் அந்தப் பிரச்சினைகளுக்கு இப்போதைய பாஜக அரசு நிரந்தர தீர்வு கண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் ஏழை மக்களின் அன்றாட கவலையை போக்கக்கூடிய வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், வாக்கு வங்கிக்காக போராடிய அரசுகளை புறந்தள்ளி நாட்டின் நலனுக்காக போராடக்கூடிய அரசு இந்தியாவில் அமைந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், உலக நாடுகளிடம் இந்தியா மீதான பார்வை மாறியுள்ளது. தற்போது இந்தியாவை யாரும் உதவியற்ற நிலையில் உள்ள நாடாக பார்க்கவில்லை, மாறாக தற்போது நமது இந்தியா பிற தேசங்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யும் நாடாக மாறியுள்ளது.
இந்தியா எந்தவொரு தேசத்தின் முன்பும் தலை குனிய தேவைவில்லை, இந்தியா பிற நாடுகளுடன் நேருக்கு நேர் சமமாக நிற்கிறது.
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை செய்துள்ளது; எதிர்கால தலைமுறைக்காகவும் 21 ஆம் நூற்றாண்டில் ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து இந்தியாவிற்காக உழைக்க வேண்டும்.
இந்தியர்களின் உழைப்பிற்கு முன்னால் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதனை இந்தியர்கள் அடைந்தே தீருவார்கள் எனும் நிலை உருவாகியுள்ளது.
உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாகவும் உலக அளவில் சாதனை படைக்கக் கூடிய வகையில் அளவுக்கு அதிகமாக அந்நிய நாட்டு முதலீடுகள் இந்தியாவில் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.