திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த் துறையில் தமிழ் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் நிகழ்த்த திட்டமிட்டிருந்த பன்னாட்டு கருத்தரங்கம், கஜா புயல் காரணமாக ஒத்திப் போடப் பட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்க அழைப்பிதழில் கண்ட தலைப்புகள், தமிழ் இலக்கியங்களை, தமிழ் மொழியை, தமிழர் வாழ்வியலை, பண்டைத் தமிழரின் நாகரிகத்தை இழிவுபடுத்துவதாகவும், கொச்சைப் படுத்துவதாகவும் இருந்ததால், அதுவும் கிறிஸ்துவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தமிழரை இழிவுபடுத்துவதாக அமைந்ததால், இந்து இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்தக் கருத்தரங்கு ஒத்திப் போடப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு, தமிழரின் தொன்மையை சிதைக்கும் கொள்கையைக் கொண்ட கம்யூனிஸ்டுகளின் பின்னணியில் அமைந்த, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த எதிர்ப்புக்கு இந்து மக்கள் கட்சி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இப்படி, தேவையற்ற சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி குளிர்காயும் ஜோசப் கல்லூரியின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக, அரசு உதவியில் இயங்கும் ஒரு கல்லூரி இவ்வாறு ஆய்வு என்ற பெயரிலும் கருத்தரங்கு என்ற பெயரிலும் தமிழ் இலக்கியங்களைக் கொலை செய்யும் நோக்குடன் இயங்குவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றும், இந்தக் கல்லூரிக்கான அரசு உதவிகள் நிறுத்தப் படவேண்டும், கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப் பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரத்தில், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி ராம.ரவிக்குமார் உள்ளிட்டோரும் இந்து இயக்கத்தினர், தமிழார்கள், பேராசிரியர்களும் குறிப்பாக, தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதனால், கல்லூரி தமிழ்த் துறை இந்தக் கருத்தரங்கை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது.
அதில்…
திருச்சி கல்லூரி கருத்தரங்கம் பாஜக தலைவர் எச்.ராஜா, அமைச்சர் பாண்டியராஜன் தலையீட்டால் தள்ளிவைப்பா?
ஆய்வுக்கு முட்டுக்கட்டை – எழுத்தாளர்கள், கலைஞர்கள் கண்டனம்
கருத்துச் சுதந்திரத்தின் மீது, குறிப்பாக முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான கருத்து வெளிப்பாடுகளின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகத்தான், திருச்சியில் ஒரு கல்லூரியின் சர்வதேசக் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணியைச் சந்தேகிக்க வேண்டியுள்ளது. திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் டிசம்பர் 6, 7 தேதிகளில் நடைபெற இருந்த கருத்தரங்கில், ‘தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகள்’ என்ற தலைப்பிலும் ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆய்வு நோக்கத்துடன் கம்பராமாயணம், வில்லிபாரதம் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நூல்களில் உள்ள பதிவுகள் பற்றிய உரைகள் இடம்பெற இருந்தன.
பாஜக தேசியச் செயலர் எச். ராஜா தனது ட்விட்டர் தளத்தில், இது தமிழ் மொழியையும் இந்துயிசத்தையும் இழிவுபடுத்துவதற்கு கிறிஸ்துவ மிஷனரிகளும் அர்பன் நக்ஸல்களும் செய்கிற முயற்சி என்பதாகப் பதிவிட்டிருக்கிறார். இதை எதிர்கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார். ஆய்வுரைகளைக் கேட்பதற்கு மட்டுமல்ல, அவற்றை விமர்சிப்பதற்குமான உரிமையும் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ராஜா இதை எதிர்கொள்ளவிருப்பதாகக் கூறியது விமர்சிப்போம் என்ற பொருளிலா அல்லது இதை நடத்தவிட மாட்டோம் என்ற பொருளிலா?
இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இத்தகைய, கல்வித்துறை சார்ந்த, பண்பாட்டுத்தள ஆய்வுகள் தடையின்றி நடப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கு மாறாக, “இத்தகைய இழிவான நிகழ்வுகள் நடைபெறுவதை அரசு அனுமதிக்காது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ராஜா இவ்வாறு பதிவிட்டதில் வியப்பில்லை, ஆனால் அமைச்சரின் எதிர்வினை கூடுதல் கவலைக் குரியதாக இருக்கிறது.
இலக்கியப் பதிவுகள் அந்தந்தக் காலகட்டத்தின் சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பவையே. இன்றளவும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் பல்வேறு வடிவங்களில் தொடரும் நிலையில், ஆய்வாளர்களின் முயற்சியால் கடந்தகாலத் தொடர்ச்சிகள் பற்றிய உண்மைகள் மக்களுக்குத் தெரியவருவது ஆரோக்கியமான மாற்றங்களுக்கே இட்டுச் செல்லும். இந்தத் தலைப்பில் ஆய்வாளர்கள் தரவுகளை சேகரிக்க முடிந்திருக்கிறது என்றால், தமிழ் இலக்கியங்களில் அத்தகைய வன்முறைகள் நடந்திருப்பதற்கான பதிவுகள் இருக்கின்றன என்றுதான் பொருள். பெண்களைப் போற்றுகிற எத்தனையோ பதிவுகள் இருக்க, தமிழ் இலக்கியம் பெண்களை இழிவுபடுத்தியது என்ற சிந்தனையை விதைக்க அனுமதிக்கப்படக் கூடாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
எல்லாம் போற்றுதலுக்குரிய வகையிலேயே இருந்தன என்ற கற்பனையில் மூழ்குவதும், உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதும் சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலே. மதத்தின் பெயரால் பிரச்சனை கிளப்புவதும், அதற்கு அரசு உடன்பட்டுப்போவதும் குறிப்பாகப் பெண்ணுரிமைக்கும் பாலின சமத்துவத்துக்கும் எதிரான ஆணாதிக்கக் கருத்தியலே. கருத்தரங்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதில் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான பகையுணர்வை விசிறிவிடும் உத்தியும் இருக்கிறது.
கஜா புயல் நிவாரணப்பணிகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் கருத்தரங்கம் தள்ளிவைக்கப்படுவதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுதான் உண்மை என்றால், கருத்தரங்கிற்கான அடுத்த தேதிகள் அறிவிக்கப்பட வேண்டும், அதில் இந்த ஆய்வுரைகள் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், மதவெறிக் கண்ணோட்டத்துடனும் ஆணாதிக்க ஆணவத்தோடும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் வெற்றிபெற்றிருக்கிறது என்றே கருத வேண்டும். தமிழ் இலக்கிய அமைப்புகள் மட்டுமல்லாமல், மக்கள் நல்லிணக்கத்தையும் பாலின சமத்துவத்தையும் முன்னிறுத்துகிற இயக்கங்களும், கல்விக் களத்தில் ஊடுருவும் இந்தக் கருத்தியல் வன்முறைக்கு ஒருமித்த குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்திட வேண்டுமாய் தமுஎகச கோருகிறது.
சு. வெங்கடேசன் /மாநிலத் தலைவர்
ஆதவன் தீட்சண்யா / பொதுச்செயலாளர்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
– என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதில் அறிக்கை…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் “எலும்புக்கு வாலாட்டும் மார்க்சிய-லெனினிய ஆடுகள் ”
கருத்தியல்ரீதியாக நாம் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு இந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பதில் அளிக்க வேண்டுகிறேன்
1. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் எழுத்தாளர்களா இல்லை நேர்மறையாக தேசபக்தியோடு சமூக விரோதம் இல்லாமல் சிந்திப்பவர்கள் உங்கள் பார்வையில் எழுத்தாளர்களா? இல்லையா?
2. கருத்து சுதந்திரம் முற்போக்கு என்கின்ற உங்களுடைய சீரிய சிந்தனை மூளையை விட்டு பிதுங்கி வரக்கூடிய அறிவு பெருக்கு எல்லாம் இந்து சமய தமிழர் சமய நம்பிக்கை இலக்கியங்கள் மீதான எதிர்மறை பார்வை மட்டும் தானா அதை மட்டும்தான் சிந்திக்குமா இஸ்லாமிய கிறிஸ்தவ மதத்தில் கொடுமைகளை தீமைகளை அநியாயங்களை எல்லாம் உங்களுடைய மிதமிஞ்சிய முற்போக்கு அறிவு மூளை சிந்திக்காத இல்லை செலக்டிவ் அம்னீஷியா?
3. சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய தாண்டவபுரம் எங்கள் சைவசமய பெருமக்களே அவமானப்படுத்தியது தவறான கருத்தை ஆவணம் ஆக்கியது.
புலியூர் முருகேசன் எழுதிய எழுத்து கொங்கு சமுதாய மக்களை கேவலப்படுத்தியது .
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்கின்ற புத்தகம் திருச்செங்கோடு திருவிழாவையும், கொங்கு வேளாளர் சமுதாய மக்களையும் இழிவுபடுத்தி தவறான விஷயத்தை ஆவணப்படுத்தியது.
இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்! ஆதாரமற்ற எழுத்துக்களை ஆவணப் படுத்துகின்ற அயோக்கியத்தனத்திற்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்றால்
அந்த கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எங்களுக்கு தேவை இல்லாத ஒன்று.
4. திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பெண்கள் மீதான வன்கொடுமைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறது! சங்ககால இலக்கியங்களில் பெண்களை போற்றி பெருமை சேர்க்கின்ற வகையில் நல்ல பல விஷயங்கள் இருக்கின்ற பொழுது எதிர்மறை சிந்தனைகளை விதைக்கக்கூடிய எடுத்து வக்கிரத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு தலைப்புகளை வெளியிட்டு ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது பசிக்கு உண்ண மனிதனுக்கு உணவு தேவைப்படும் போது பன்றிகள் உண்ணும் மலத்தைக் கொண்டு நாங்கள் உண்ணுவோம் என புதிய எழுத்து புரட்சிக்கு புதிய சிந்தனையைத் தூண்டுவது உங்களுக்கு கருத்து சுதந்திரமா ?
அட ச்சீ கேவலத்திலும் கேவலம் … …
5.நாங்கள் கங்கை நீரைக் குடிப்போம் என சொல்லுகிறோம், காவிரி நீரைக் குடிப்போம் என்று சொல்லுகிறோம், நீங்கள் கூவத்து சாக்கடை கழிவு நீரை குடிப்போம் என்று சொல்கிறீர்கள்.
6. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை சார்ந்த உங்களால் இதுவரை கிறிஸ்தவ திருச்சபைகளில் நடக்கக்கூடிய பாலியல் வக்கிரங்களை பற்றி பாவமன்னிப்பு என்கின்ற பெயரில் கிறிஸ்தவ திருச்சபைகளில் சூறையாடப்பட்ட கற்புகளைப் பற்றி இதுவரை எங்காவது ஒரு கருத்தரங்கம் நடத்தி இருக்கிறீர்களா?
7. இந்து சமய இலக்கியங்களையும் இந்து சமய நூல்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் கருத்து காவலர்களே கிறிஸ்தவர்களுடைய பைபிள் இஸ்லாமியர்கள் வணங்கும் குர்ஆன் வசனங்கள் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை முறை இதுகுறித்து ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரையை இல்லை ஒரு ஆய்வுக் கருத்தரங்கம் எங்காவது நடத்தி இருக்கிறீர்களா?
8. திருச்சியில் நடைபெற இருந்த கருத்தரங்கு எதிர்கொள்வோம் என திரு ஹெச்.ராஜா சொல்லியது பரவாயில்லையாம் அதையே அமைச்சர் சொல்லியது பெருத்த சந்தேகத்தை உருவாக்குகிறதாம் இந்த சந்தேக பேர்வழிகளுக்கு …..
தமிழ் மொழி இலக்கியங்களை அழிக்க வேண்டுமென திட்டமிட்டு செய்யப்பட்ட திருச்சி கிறிஸ்தவ செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ஆதரவாக இவர்கள் செயல் படுவதற்கு காரணம் கிறிஸ்தவர்களும் NGO- க்களும் போடக்கூடிய “எலும்புக்கு ஆசைப்பட்டு
வாலாட்டும் ஆடுகள் ” அதுவும் மார்க்சிய ஆடுகள் லெனினிய ஆடுகள் முற்போக்கு என்கின்ற பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் செய்யக்கூடிய எழுத்துலக அடாவடிக்கு எதிராக கருத்தியல் தளத்தில் நாமும் களமாடுவோம் இதற்கு ஒரு பொது விவாதம் நடத்துவதற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தயாரென்றால் இந்து மக்கள் கட்சி தமிழகமும் , தமிழ்மொழி காவலர்களும் தாய் மத காவலர்களும் தயாராகவே இருக்கிறோம். – என்று தெரிவித்துள்ளார்.
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, செய்ண்ட் ஜோசப் கல்லூரி இந்தக் கருத்தரங்கை நிறுத்துவதாக அறிவித்தாலும், அது கிளப்பிய சர்ச்சைகள் மட்டும் ஒயாது போலிருக்கிறது!