சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
55. நிலையான மனம்
செய்யுள்:
து: கேஷ்வனுத்விக்னமனா: சுகேஷு விகதஸ்ப்ருஹ: |
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முனிருச்யதே ||
— பகவத்கீதை (2-56)
பொருள்:
துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன் முனிவன் என்று அழைக்கப்படுகிறான்.
விளக்கம்:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பகவத்கீதையில் பகவான் அளித்த உபதேசங்கள் அனைத்தும் நல்முத்துக்கள்.
நிலையான மனம் உடையவர் யார் என்று விளக்கும் ஸ்லோகம் இது. தற்காலிகமான இன்பம் துன்பம் இரண்டிடமும் ஒன்றே போல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.
தேர்வில் தோற்றுவிட்டாலோ, எதிர்பாராத ராங்க் வரவில்லை என்றோ அவசரப்பட்டு கணநேர ஆவேசத்தில் உயிரைவிடத் துணியும் இளைய சமுதாயத்துக்கு இந்த ஸ்லோகம் ஒரு அமிர்தத் துளி.
துன்பம் அச்சத்தை அளித்தாலும், இன்பம் சுகத்தை அளித்தாலும், உலகியலான காதல், பயம், எரிச்சல் போன்றவற்றில் இருந்து மீள முடியாமல் போனாலும், அந்த மனிதன் தன் வாழ்வின் லட்சியத்தை அடைவதில் பின்தங்கி விடுவான்.
இயற்கை கொடுக்கும் அதிர்ச்சிகளுக்கு பலியாகாமல் தன் கடமையை நிறைவேற்றி முன்னோக்கிச் செல்லும் நிலைத்த மனது மனிதனுக்கு மிக அவசியம். அப்போதுதான் சரியாக யோசிக்கும் உறுதி ஏற்படும். தான் நல்ல மார்க்கத்தில் நடப்பதோடு தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் கூட சரியான வழி காட்ட முடியும்.
தலைமைப் பண்புகளில் முதன்மையானது இந்த தீர குணமே. எவ்விதமான பாரபட்சமும் இன்றி, அவசர முடிவு எடுக்காமல், ஆட்சி நடத்துவதற்கு இந்த உபதேசத்தை கடைபிடிக்க வேண்டும். தனிமனித ஆளுமை வளர்ச்சிக்கு ஆரம்பப்படியான இந்த குணங்களை பழகிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.