விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -27
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
Ethics & Values
தலைவனுக்கு கீதோபதேசம்!
பகவத்கீதையில் கீதாசாரியன் உபதேசித்த விஷயங்கள் பண்பாட்டை மலரச் செய்யும் பாடங்கள் என்பதை நவீன மேதைகள் பலர் இன்று கண்டறிந்து வருகின்றனர். மனதை அடக்கும் வழிமுறைகள், காரிய சாதனைக்கான வெற்றி ரகசியங்கள், தினசரி வாழ்க்கையில் வரும் பிரச்னைகளுக்குத் தீர்வுகள், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் ஒழுக்க நெறிகள், அவ்ர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் சாதனை முறைகள்.. பகவத் கீதையில் பலப்பல உள்ளன.
கீதையிலுள்ள ஒவ்வொரு சுலோகமும் ஒரு மகா மந்திரம் என்பர் பெரியோர். சில சுலோகங்களை தினமும் படித்து தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள முடியும். பதினாறாவது அத்தியத்தின் முதல் மூன்று சுலோகங்கள் சிறந்த தலைவனாக நம்மை வளர்த்துக் கொள்வதற்கு ஊக்கமளிப்பவை. இவற்றில் பகவான் விவரிக்கும் இருபத்தாறு உத்தம குணங்கள் ஒவ்வொரு மனிதனும் பெறத் தக்கவை. நாமனைவரும் முயற்சியோடு பழக்கப்படுத்திக் கொண்டு கடைபிடிக்கத் தக்கவை. முக்கியமாக உயர்ந்த பொறுப்பிலிருப்பவர்களுக்கு ஒரு அட்டவணை போன்றவை. சுய கட்டுப்பாடு ஏற்படுத்துபவை.
அபயம் சத்வசம்சுத்தி: ஞானயோக வ்யவஸ்திதி: |
தானம் தமஸ்ச யஜ்ஞச்ச ஸ்வாத்யாயஸ்தவ ஆர்ஜவம் ||
அஹிம்சா சத்யமக்ரோத: த்யாகஸ்சாந்தி ரபைசுனம் |
தயா பூதேஷ்வ லோலுப்த்வம் மார்தவம் ஹீரசாபலம் ||
தேஜ: க்ஷமா த்ருதி: சௌசமத்ரோஹா நாதிமானிதா |
பவந்தி சம்பதம் தைவீ மபிஜாதஸ்ய பாரத ||
(பகவத் கீதை 16- 1, 2 ,3)
பொருள்: (இருபத்தாறு குணங்களை இங்கு விவரிக்கிறார் பகவான்)
*தான் தைரியம் நிறைந்தவானாக இருந்து தொண்டர்களுக்கு அபயம் அளிப்பது.
*நற்குணங்கள் நிறைந்திருப்பது.
*தர்மம் குறித்த ஞானம் பெற்றிருப்பது. சமுதாயத்தை தர்மத்தின் வழி நடத்துவிப்பது.
*தகுதி உள்ளவருக்கு கட்டாயம் தேவையான உதவி செய்வது.
*சுயநலமான விருப்பங்களை கட்டுப்படுத்திக் கொள்வது.
*தவறாமல் கடவுள் வழிபாடு செய்வது.
*தனக்காவும் சமுதாய நலனுக்காகவும் சத்தியம், ஞானம் இவற்றைத் தேடி சாதனை செய்வது.
*சமுதாய நலனுக்காக எப்போதும் தீவிர முயற்சி செய்வது.
*டாம்பீகத்தைக் காட்டாமல் எளியவர்கள் சுலபமாக அணுகும்படி இருப்பது.
*மனம் வாக்கு செயல் மூன்றிலும் வன்முறையின்றி இருப்பது.
*திரிகரணங்களாலும் சத்தியவாதியாக இருப்பது.
*கோபம் முதலான ஆறு துர்குணங்களை அடக்கி ஆளுவது.
*சமுதாய நலனுக்காக தன்னுடையதான அனைத்தையும் தியாகம் செய்வது.
*தடுமாறாத நிலையான மனம் கொண்டிருப்பது.
*தீய பிரசாரங்கள், வதந்திகளைப் பரப்பாமலிருப்பது. புறங்கூறாமலிருப்பது. இவற்றின் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்பது.
*தகுந்தவர்களுக்கு கருணை காட்டுவது.
*எந்த ஒரு விஷயத்திலும் அளவுக்கதிகமாக ஈடுபாடு காட்டாமலும் அதனால் பாதிப்படையாமலும் இருப்பது.
*தன்னை நாடியவர்களின் துயரங்களை அவர்களின் கோணத்தில் பார்க்கும் (Empathy) கண்ணோட்டம் பெற்றிருப்பது.
*வெட்கித் தலை குனியும் செயல்களைத் தான் செய்யாதிருப்பதோடு அவ்வாறு செய்பவர்களைத் தடுப்பது.
*ஏதாவது நற்செயல் செய்யும்போது இது தேவையா? அவசியமா? அனாவசியமா? என்ற மனச்சலனம் இல்லாமலிருப்பது.
*பல பிரச்னைகளைத் தீர்க்கும் அறிவுக் கூர்மை பெற்று பிரகாசிப்பது.
*பூமித் தாய் போல் பொறுமை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் தன்மை பொருந்தியிருப்பது.
*ஞாபக சக்தி அதிகம் பெற்றிருபப்து.
*சுத்தம், சுகாதாரம், ஒழுங்குமுறை கடைபிடிப்பது.
*யாருக்கும் துரோகம் செய்ய நினைக்காமல் இருப்பது. அதே நேரம் தனக்கும் சமுதாயதிற்கும் துரோம் செய்பவர்களை தண்டிப்பது.
*தன்னைத்தான் உயர்வாக நினைக்காமல் அகந்தை கொள்ளாமல் நடந்து கொள்வது.
இந்த இருபத்தாறு குணங்களை ஆராய்ந்து பார்த்தால் பண்பாடு மலரும். இது போன்ற பண்பாட்டாளர்கள் சிறந்த தலைவர்களாக வளர்வார்கள் என்பது கீதை அளிக்கும் கருத்து.
நடைமுறை வேதாந்தம்:
ஆத்மௌபம்யேன சர்வத்ர சமம் பஸ்யதி யோர்ஜுன |
சுகம் வா யதிவா து:கம் ஸ யோகீ பரமோ மத: ||
(பகவத் கீதை 6-32)
பொருள்: அர்ஜுனா! தன்னையே உதாரணமாகக் கொண்டு யாரொருவர் சுகத்தையும் துக்கத்தையும் அனைவரிலும் ஒரே விதமாகக் காண்பாரோ அவரே பரம யோகி என்பது என் (பரமாத்மா) கருத்து.
நமக்கு சுகம் வேண்டுமென்று நாம் விரும்புவது போலவே பிறரும் விரும்புவர். நமக்கு துயரம் ஏற்படக் கூடாதென்று நாம் நினைப்பதைப் போலவே பிறரும் நினைப்பர் என்பதை மறவாமல் நடந்து கொள்ளவேண்டும் – இதுவே கீதை கற்றுத் தரும் நடைமுறை வேதாந்தம்.
சுபம்!