“வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது” என்பதை காண்பிக்கவே ..

Published:

“வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது” என்பதை காண்பிக்கவே திருவிளையாடலை நடத்திய மகாபெரியவா

‘ஷட் பஞ்ச பலம் v/s நாரங்க பலம்'(ஆரஞ்சுப் பழத்திற்கு விளக்கம்)

நன்றி- குமுதம் லைஃப்
தொகுப்பு-எஸ்.வி.ஆர்.20-09-2017 தேதியிட்ட இதழ்
.தட்டச்சு-வரகூரான் நாராயணன்

வேதம் மகா புண்யமானது. வேத மந்திரங்களைச் சொல்றவாளை அந்த மந்திர தேவதைகள் காப்பாத்தும் வேத மந்திரத்தை தினமும் சொல்றவாளோட நாக்குல சரஸ்வதி நிரந்தரமா வாசம் செய்வா.அவா வாக்குலேர்ந்து ஒரு நாளும் தவறான வார்த்தைகளோ,பொய்யோ வரவே வராது அப்படின்னு வேதசாஸ்த்ரங்கள் சொல்றது.

பிழைப்புக்காக வேத மந்திரத்தைச் சொன்னாலும் அதுல எந்தக் குத்தமும் வந்துடக்கூடாதுங்கற அக்கறையோட மனசார்த்தமா மந்திரங்களைச் சொல்லக்கூடிய சாஸ்திரிகள் ஒருத்தர் இருந்தார். ஒரு சமயம் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைப் போக்கறவிதமா மகாபெரியவா ஓர் அற்புதத்தை நடத்தினார்.

எண்ணூர் அருகே கார்வேட் நகர் என்று ஒரு இடம் இருக்கு. ஒரு சமயம் அங்கே நவராத்திரி பூஜைக்கு எழுந்தருளி இருந்தார் மகாபெரியவா. அந்த இடத்துக்கு போகணும்னா எண்ணூர்ல இருந்து போட்டுலதான் போகணும். ஆழம் ரொம்ப அதிகம் இல்லாத பகுதிங்கறதால படகை கயறு கட்டி இழுத்துச் செல்வார்கள். அங்கே மகாபெரியவா தங்கி இருந்தது, ஒரு பெரிய வனாந்திரம் மாதிரி தனிமையான இடம் அங்கே இயற்கையின் எழில் கொஞ்சும்.

பெரியவா அந்த நவராத்திரியில் காஷ்ட மௌனமாயிருந்தார் அதாவது ஒன்பது நாளும் உபவாசம்.கூடவே மௌனம். சைகையால் கூட விருப்பத்தை வெளியிடமாட்டார்.
பத்தாவது நாள், காஷ்ட மௌனத்தை கலைச்ச மகாபெரியவா ஒரு பெரிய மரத்தடியிலே உட்கார்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார்.

ஒன்பது நாள் உபவாசமும் மௌன விரதமும் இருந்த ஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்காக அன்னிக்கு நிறைய பேர் வந்திருந்தா.அவாள்ல, முதல்ல சொன்ன வேதம் சொல்ற சாஸ்திரிகளும் இருந்தார். அதேமாதிரி அந்தக் கூட்டத்துல இன்னொரு பெரிய மனுஷரும் இருந்தார்.அவர் அந்தக் காலத்துல வருமானவரித் துறையில இருந்த முக்கியமான அதிகாரி. தற்செயலா அந்த சாஸ்திரிகளும், அதிகாரியும் ஒரே சமயத்துல வந்திருந்தா.அவா ரெண்டுபேரையுமே தனக்கு முன்னால உட்காரச்சொன்ன ஆசார்யா, பக்கத்துல இருந்த பழத் தட்டுல இருந்து ஆரஞ்சு ஒண்ணை எடுத்து உரிச்சுண்டே பேச ஆரம்பிச்சார்.

சாஸ்திரிகளைப் பார்த்து, “என்ன வேதபாராயணம் எல்லாம் நடந்துண்டு இருக்கா? புரோஹிதத்துல உனக்கு மாசம் எவ்வளவு வருமானம் வரும்?” அப்படின்னு கேட்டார்.

“ஏறக்குறைய மாசத்துக்கு முன்னூறு ரூபாய் கிடைக்கும்!”

“நீ கடனெல்லாம் வாங்குவியா?”

“பெரியவா..கடன் வாங்கறது தப்புன்னு தெரியும். இருந்தாலும் ஜீவனத்துக்கு கஷ்டம் வர்றதால அப்பப்போ பத்து ரூபாயோ இருபது ரூபாயோ வாங்குவேன்!”

மென்மையா சிரிச்ச ஆசார்யா, பக்கத்துல இருந்த வருமானவரி ஆபீசரைப் பார்த்து, “ஒனக்கு எவ்வளவு சம்பளம்?” அப்படின்னு கேட்டார்.

“பத்தாயிரம் ரூபாய் வர்றது!” சொன்ன அலுவலர், தன்னையும் கடன் வாங்கறது உண்டான்னு கேட்பார்னு தானாகவே தீர்மானித்துக்கொண்டு, “வருமானம் போதாததால், அப்பப்போ ரெண்டாயிரம்,மூணாயிரம் கடன் வாங்குவேன்.இப்போ எல்லா குடும்பத்துலயுமே இது சகஜம்தானே!” அப்படின்னும் தானாகவே சொன்னார்.

“தேவைகளை பெருக்கிண்டே போறோம்.அதனால எவ்வளவு வருமானம் வந்தாலும் போதாதுதான். போதும் என்ற எண்ணம் எப்போ வருதோ அப்போதான் வருமானத்தை சரியான வழியில் செலவிடவும் முடியும். நல்ல கார்யம் பண்ணவும் முடியும்”

சொன்ன ஆசார்யா,அதுவரைக்கும் உரிச்சுண்டு இருந்த ஆரஞ்சுப் பழத்தை வருமானவரி அதிகாரிகிட்டே கொடுத்து, ” இந்தா,இதுல எத்தனை சுளை இருக்குன்னு எண்ணிப்பார்த்து சொல்லு!” அப்படின்னார்.

கையில வாங்கின ஆரஞ்சுப் பழத்தை இரு பிளவாக செய்து எண்ணின அவர், “ஆறு ப்ளஸ் அஞ்சு. மொத்தம் பதினொரு சுளை இருக்கு!” என்று சொன்னார்.

“ஆறும் அஞ்சும் இருக்கு அப்படின்னா இதை ‘ஷட் பஞ்ச பலம்’னு (ஷட் = 6 ,பஞ்ச = 5) சொல்லலாம் இல்லியா?”

பெரியவா கேட்டதுதான் தாமதம், மறு விநாடி சாஸ்திரிகளும், ஆபீசரும் எழுந்து மகாபெரியவா திருவடியில சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினா.ரெண்டுபேரோட உடம்புமே நெகிழ்ச்சியில அப்படியே நடுங்கித்து. மௌனமா ஆசிர்வாதம் பண்ணினார் ஆசார்யா.ஆசார்யா சொன்னதுமே ரெண்டுபேரும் ஏன் அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு நமஸ்காராம் பண்ணினா?

அப்படிங்கறதெல்லாம் அங்குள்ள யாருக்குமே தெரியலை.

மடத்து சிப்பந்தி ஒருத்தர்தான் அதை விளக்கினார்;

அந்த சாஸ்திரிகள்தான், அந்த வருமானவரி ஆபீஸர் வீட்டுல நடக்கற எல்லா விசேஷங்களுக்கும் புரோஹிதம் செய்யறவர். போன மாசத்துல ஒருநாள் அப்படி ஒரு சமயத்துல ஆரஞ்சுப் பழத்தை நைவேத்யம் செய்யறச்சே, அதோட சம்ஸ்கிருதப் பெயரான நாரங்க பலம் என்பதற்கு பதிலா ஷட்பஞ்ச பலம்னு சொல்லிட்டார். அதைக் கேட்டதும் அந்த அதிகாரி, வார்த்தையை தப்பா பிரயோகிச்சுட்டார்னு சொல்லி ரொம்பவே அவமானப்படுத்தற மாதிரி சாஸ்திரிகளை திட்டியிருக்கார்.

சாஸ்திரிகள் தவறுதலா சொல்லவில்லை. அது வேதவாக்கு அதுதான் வெளிப்பட்டிருக்கு. வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது என்பதை காண்பிக்கவே இந்த திருவிளையாடலை மகாபெரியவா நடத்தியிருக்கார்.

வேத மந்திரங்கள் மறைஞ்சுபோகாம காப்பத்தறவாளை அந்த வேதமே காப்பாத்தும்னு சொல்லுவா.அது சத்தியமான வாக்கு என்பதை வேதத்தோட வடிவமாகவே வாழ்ந்த மகாபெரியவாளே நிரூபணம் பண்ணினதை உணர்ந்து,

“ஜயஜயசங்கர ஹரஹரசங்கர”ன்னு கோஷம் எழுப்பினா அங்கே இருந்த எல்லாரும்

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img