சிஷ்யர்:
விதியை வெல்வதற்கு ஒருவனிடம் சக்தியிருக்கிறதா? இதை நான் கேட்பதற்கு காரணம் என்னவென்றால் சாஸ்திரத்தில் ஒருபக்கம் விதியை வெல்லலாம் என்று காண்கிறோம் உதாரணத்திற்கு யோகவாசிஷ்டத்தில்
சுபா சுபாப்யாம் மார்காப்யாம் வஹந்தீ வாஸநாஸரித் !
பௌருஷேண ப்ரயத்னேன யோஜநீயா சுபே பதி !!
( வாசனைகள் என்னும் ஆறு ஒருவனை சுபம் அசுபம் என்ற மார்க்கங்களின் வழியாக அழைத்துச் செல்கிறது முயற்சியினாலும் பௌருஷத்தினாலும் ஒருவன் நல்வழிக்குச் செல்ல வேண்டும்.) என்பதை நாம் காண்கிறோம் இது விதியை காட்டிலும் முயற்சிக்கு அதிக பலம் இருக்கிறது எனக் காட்டுகிறது. மற்றொரு பக்கம்,
உபபோகேனைவ சாம்யதி (பிராப்தம் பலனைக் கொடுத்து தான் தீரும்) என்றும், யதபாவீ நதத்பாவீ பாவீ சேன்னததன்யதா (எது நடைபெற வேண்டாமோ அது நடைபெறாது. எது நடைபெற வேண்டுமோ அது அப்படித்தான் நடைபெறும்.) என்று நாம் காண்கிறோம் ஆகவே எனது சந்தேகத்தை ஆச்சாரியாள் தெளிவுபடுத்துவார்களா?
ஆச்சார்யாள்:
முதலாவதாக பிராரப்தம் என்றால் என்ன? அது எப்படிச் செயல்களை செய்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். முற்பிறவிகளில் செய்த எந்தக் கர்மாக்கள் தற்போது பலனைத் தருகின்றனவோ இவைதான் இப்பிறவிக்கு நேர்க் காரணமாக இருக்கின்றன. இதையே நாம் பிராரப்தம் என்று அழைக்கிறோம் பிராரப்தம் ஆனது வலுக்கட்டாயமாக ஒருவனை நல்வழியிலோ தீய வழியிலோ இழுத்துச் செல்வது இல்லை. அவை படிப்படியாக இம்மாதிரி வழிகளில் இழுத்துச் செல்கின்றன. எப்படி என்றால் அவை மனதில் விருப்பு வெறுப்பு என்ற வாசனைகளைக் கிளம்பி விடுகின்றன. அதனால் தான் கிருஷ்ண பகவான்,
ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர் ஞானவானபி !
ப்ரக்ருதிம் யாந்தி பூதானி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி!!
என்று கூறியுள்ளார்
இச்சுலோகத்தின் வியாக்யானத்தின் போது சங்கரர் தானே ஒரு எதிர் கேள்வியை கிளப்புகிறார். அது என்னவென்றால் இது போல் ஒவ்வொருவனும் என் சுபாவம் போல் செயல்களை செய்வானென்றால் சாஸ்திரங்களுக்கு இடமில்லை. இதற்குக் காரணம் நடக்க வேண்டியதே நடக்கும் என்று கூறுவதே ஆகும். இப்படி இருக்கும்போது சாஸ்திரங்களில் நல்வழியில் நட என்று கூறுவதில் என்ன பிரயோஜனம்? இம்மாதிரி ஒரு எதிர் கேள்வி ஒன்றை அவரே எழுப்பி, இது தவறு என்று கூறி, அடுத்து வரும் சுலோகத்தை உதாரணமாகக் காட்டுகிறார். அங்கு,
இந்த்ரியஸ்யேந்த்ரியஸ்யார்த்தே ராகத்வேஷௌ வ்யவஸ்திதௌ !
தயோர்ன வசமாகச்சேத்தௌ ஹ்யஸ்ய பரிபந்தினௌ !!
என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து விருப்பு வெறுப்புக்கள் என்றால் நாம் அவைகளின் வசம் விழமாட்டோம் என்று தெரிகிறது. ஆகவே சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு விருப்பையும் வெறுப்பையும் நாம் விட்டு விட்டால் எப்பொழுதும் நல் வழியிலேயே செல்வோம். பிராரப்தத்தை வெல்ல முடியுமா? என்று நீ கேட்டாயே அதற்கு நிச்சயமாக வெல்லலாம் என்பதே பதில். பிராரப்தத்தை வெல்ல முடியாது என்று சொன்னால் அவன் செய்த செயல்களுக்குப் பொறுப்பாளி என்று கூற முடியாது. ஏனென்றால் அவன் அப்படித்தான் செய்ய வேண்டியதாக இருந்தது என்று கூறிவிடலாம்.
முன்பு செய்யப்பட்ட எக்கர்மா இப்போது பலனளிக்குமோ அதுவே பிராரப்தம் என்று நான் கூறினேன். அது முற்பிறவியில் செய்த நம் முயற்சிகளால் ஏற்பட்ட கர்மா. ஆதலால் முயற்சியைக் காட்டிலும் அதிக பலமுள்ளதாக ப்ராரப்தம் என்றுமே இருக்கமுடியாது. ஒருவன் முன் செய்த செயல்களின் வழியை இப்பிறவியில் முயற்சியால் மாற்றலாம். ஆனால் முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவின் வாசனை மிக அதிகமாக இருந்தால் அதை நாம் மாற்ற மிகவும் அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கலாம். இந்த முக்கால்வாசி விஷயங்களிலும் உண்மை. இதற்கு உதாரணம் தூணில் கட்டப்பட்டிருக்கும் ஒரு பசு மாடே ஆகும். கட்டப்பட்டிருக்கும் கயிறு எவ்வளவு நீளமோ அது வரை பசுமாடு சுதந்திரமாகச் சுற்றுலாம். ஆனால் அதைத் தாண்டிச் செல்ல முடியாது. அதேபோல் தான் விதியும் மற்றவர்களின் விதியும் நம் செயல்களும் நமது சுதந்திரத்திற்கு ஓர் எல்லையை வைக்கின்றன.
ஒரு மனிதன் ஓரிடம் செல்வதற்காக ஒரு ரயில் வண்டியில் ஏறிச் செல்லலாம். ஆனால் அவ்வண்டி விபத்துக்கும் ஆளாகலாம். அதே போல் ஒருவன் சில சமயங்களில் தேர்வில் நன்கு எழுதி இருந்தாலும் வரவேண்டிய மதிப்பெண் வராமல் இருக்கலாம். இதெல்லாம் கண்டு வருத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது.
ஆன்மிக வாழ்வில் ஏறக்குறைய எதனையும் முயற்சியால் அடைந்து கொள்ளலாம். பிராரப்தத்தின் வசப்படி ஒருவன் கிரகஸ்தன் ஆக இருக்கவேண்டும் என்று இருக்கலாம். ஆனால் அவன் குருவின் அனுகிரகத்தாலும் முயற்சியாலும் பிரம்மச்சரிய வாழ்க்கையையேக் கடைப்பிடித்து மேலும் சன்னியாச வாழ்வும் பெறலாம். முன் செய்த செயல்களின் பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்றாலும் பிராரப்தத்தின் சக்தியை இறைவன் அருளால் மிகவும் குறைத்து விடலாம். ஜபம் ஹோமம் தியானம் பூஜை நல்லோர்களின் சேர்க்கை போன்றவைகளால் பிராரப்தத்தின் கெட்ட பலனை அதிக அளவிற்கு குறைத்து விடலாம்.
சிஷ்யர்:
ஒருவனின் ஜாதகத்தில் ஒருவன் 80 வயது இருப்பான் என்று இருந்தால் அவன் அதற்கு மேல் முன் இறக்க மாட்டான் என்று அர்த்தமா? அதேபோல் இளமையிலேயே ஒருவன் இறக்க வேண்டும் என்று இருந்தால் அவன் அதற்கு மேல் உயிர் வாழ மாட்டானா?
ஆச்சரியாள்: இரண்டு கேள்விகளுக்குமே இல்லை என்பதே பதில்.
சிஷ்யர்: ஜாதகத்தை தவறாக குறித்தலோ அல்லது ஒழுங்காகப் படிக்காததாலோ தான் இவ்வாறு ஏற்படுமா?
ஆச்சரியாள்: இல்லையே
சிஷ்யர்: அப்படி என்றால் ஜாதகத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு கூறப்பட்ட தெல்லாம் பிரயோஜனமில்லை. மேலும் கைரேகை படிப்பதிலும் அர்த்தமில்லை. ஆகவே ஜோதிட சாஸ்திரத்திற்கே பிரயோஜனமில்லை என்பதா ஆசிரியாளின் கருத்து?
ஆச்சாரியாள்: இல்லையே
சிஷ்யர்: ஆச்சார்யாள் சற்று விளக்கம் கூறுவார்களா?
ஆச்சாரியாள்: ஜாதகன் ஒருவன் முற்பிறவியில் செய்த கர்மாவின் பலனைக் காட்டுகிறது. ஆதலால் அதன்படிச் சொல்லப்பட்ட பலன் முற்பிறவியில் செய்யப்பட்ட கர்மாவினால் வரக்கூடிய பலன். இந்தப் பிறப்பில் நம் சுதந்திர செயல்களினால் அதை நிச்சயமாக மாற்றிவிடலாம். மார்க்கண்டேயனைப் போல் இறைவனின் அருளைப் பெற்றால் நாம் வாழவேண்டிய காலத்திற்கு மேல் அதிகமாக வாழலாம். அதேபோல் கெட்ட வழியில் சென்று உடல்நலத்திற்கு கெடுதல் செய்து கொண்டு வாழ வேண்டிய காலம் கூட வாழாமல் மரணம் அடையலாம். இதெல்லாம் ஜோசிய புத்தகத்தில் இல்லாமல் நாமாகவே பார்க்கலாம். ஆகவே முயற்சியினால் முடிந்த அளவிற்கு மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜோசியர்களும் இம்மாதிரி செய்தால் அக்கர்மாவின் பலன் குறையும் என்று கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஜாதகத்தின்படி தான் நடக்க வேண்டும் என்றால் அம்மாதிரி பிராயச்சித்தங்களுக்கு என்ன பிரயோஜனம்? ஆதலால் முயற்சியால் விதியை வெல்லலாம் என்பது தீர்மானம்தான். ஜாதகத்தை கண்டு ஒருவனும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. அது வரப்போவதற்கு முன்னறிவிப்பாக இருக்கும். ஆனால் அதையே நாம் மாற்றிவிடலாம்.