அதிகாரம்” தான் எல்லாப் பொருட்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று சிலர் கூறுவார்கள்.
அதிகாரம் செலுத்துவதில் அவ்வளவு விசேஷமாக ஒன்றும் இல்லை. இதே ரீதியில் நாம் எதை உயர்ந்தது என்று கருதினாலும் அது அவ்வாறு இருப்பதேயில்லை.
இவ்வாறிருக்கையில் “எதுதான் உண்மையில் மிகச் சிறந்த பொருள்?” என்பது இன்னும் கேள்வியாகத்தான் இருக்கிறது.
கடவுள் இந்தக் கேள்வியைத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். அவர் என்ன முடிவுக்கு வந்தார்? மற்றவர்களுக்கு உதவி செய்தல்தான் (பரோபகாரம்) சிறந்தது என்று உணர்ந்தார் அவர்.
பகவானுக்கு எந்த விதமான கடமையோ, எதையாவது அடைய வேண்டும் என்பதோ கிடையாது. காரணம், அவர் பூரணமானவர் (பரிபூர்ணர்) , பகவானே கூறியிருக்கிறார்.
ந மே பார்த்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சன I
நானவாப்தமவாப்தவ்யம்…….
“மூன்று லோகங்களிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமே இல்லை. அடைய வேண்டியது எதுவும் என்னால் அடையப்படாததாக இல்லை.” இவ்வாறிருக்கையில் பகவான் எதற்காக மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரஸிம்ஹ, வாமன, பரசுராம மற்றும் இராம அவதாரங்களை எடுத்துக்கொண்டார்?
“மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்பதுதான் அதற்குக் காரணமாகும், இராக்ஷஸர்கள் இடையூறு செய்து கொண்டிருந்தால் ஜனங்களுக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அந்த சமயம் கடவுள், “நான் இங்கேயே நிர்விகல்ப சமாதியில் இருந்துவிடட்டுமா அல்லது மக்களைக் காப்பாற்றுவதற்காகச் செல்லட்டுமா? இதில் எது சிறந்தது?” என்று சிந்தித்தாராம்.
ஒரு தராசை எடுத்து “கைவல்யம்” என்பதை ஒரு தட்டிலும் “பரோபகாரம்” என்பதை மறு தட்டிலும் இட்டுப் பார்த்தார். பரோபகாரம் தான் அதிக எடையுள்ளது என்பதை அது காட்டியது.
பரோபக்ருதிகைவல்யே தோலயித்வா ஜனார்தன: I
குர்வீமுபக்ருதிம் மத்வா:வதாரான் தசாக்ரஹீத் II
கைவல்யத்தையும் பரோபகாரத்தையும் நிறுத்துப் பார்த்த பகவான் பரோபகாரம்தான் அதிக எடை வாய்ந்தது என்ற முடிவுக்கு வந்து பத்து முறை அவதரித்தார்.