அபிராமிபட்டர் அருளிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம்
பங்கயத் தாளும் ஒரு நான்கு தோளும் படாமுகமும்
திங்களின் கோடும் வளர் மோதகத்துடன் செங்கையிலே
அங்குச பாசமு மாகிவந்து என்றனை ஆண்டருள்வாய்;
வெங்கயமே! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (1)
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒருதொழிலைப்
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும் நின் பாதத்திலே
நண்ணுங் கருத்துத் தமியேனுக் கென்றைக்கு நல்குவையோ?
விண்ணும் புகழ் கடவூர் வாழும் கள்ள விநாயகனே! (2)
யாதொன்றை யாகிலும் எண்ணிய போது உன் இணைக்கமல்
பாதம் பரவிய பேர்கட் கலாது பலித்திடுமோ?
பேதம் தெரிந்த மறையோர் தமது பெருத் தெருவில்
வேதம் பயில் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (3)
அரனென் பவனையும் அம்புயத் தோனையும் ஆழிசங்கு
கரனென் பவனையுங் கைதொழ வேண்டி உன் கால் தொழுவார்
இரவும் பகலும் இயலிசை நாடக மென்னும் நன்னூல்
விரவுந் தமிழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (4)
துதியேன் எனினும் தொழுகேன் எனினும் தொழுபவர் தமை
மதியேன் எனினும் வணங்கேன் எனினும் வலியவந்து
கதியே தரும்வழி காட்டிடுவாய்; நின் கருணையினால்
விதியே புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (5)
நாகந் துரகம் பலபணி அடை நவநிதிகள்
பாகஞ்சு மென்மொழியாள் போகமும் உன்றன் பாதமதில்
மோகந் திகழப் பணிந்தோர்க்கு அலாமல் முயன்றிடுமோ?
மேகம் பயில் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (6)
இளங்குஞ் சரச்செழுங் கன்றே! எனச்சொலி ஏத்திநின்றாய்
உளங்கசிந்து அங்கையால் குட்டிக் கொண்டோர்க் கோர் குறையுமுண்டோ?
வளங்கொண்ட மூவர் தமை மறித்தே தமிழ் மாலைகொண்டு
விளங்கும் புகழ்க் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (7)
தண்டாயுதத்தையும் சூலாயுதத்தையும் தாங்கியென்னைக்
கண்டாவி கொள்ள நான் வரும் வேளையில் காத்திடுவாய்
வண்டாரவாரஞ் செய் மாமலர்ச் சோலை வளப்பமுடன்
விண்தாவிய கடவூர் வாழும் கள்ள விநாயகனே! (8)
மூவரும் தங்கள் தொழிலே புரிந்திட முந்திமுந்தித்
தாவரும் நெற்றியில் தாக்கியுன் நாமத்தைச் சாற்றிடுவார்
தேவரும் போற்றிய தேவே! உனையன்றித் தெய்வமுண்டோ?
மேவருஞ் சீர் கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (9)
மைப்பொரு வாரண மாமுக மீதினில் வாய்ந்த துதிக்
கைப்பொருளே! என்று கைதொழு வோர்குன் கருணைவைப்பாய்
பொய்ப்பணியோ அறியாதமு தீசன் புகழுமெங்கள்
மெய்ப்பொருளே! கடவூர் வாழுங் கள்ள விநாயகனே! (10)