spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்போருக்கு உதவிய பூரி ஜெகந்நாதர்!

போருக்கு உதவிய பூரி ஜெகந்நாதர்!

- Advertisement -
puri jagannath
puri jagannath

முன்பு ஒரு காலத்தில் புருஷோத்தம தேவர் என்ற ஓர் அரசர் இருந்தார். இவர் கோங்கா வம்சத்தைச் சேர்ந்தவர். ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தவர். இவர் ஜெகந்நாதரின் பரமபக்தர். ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்ரையின் போது இந்த அரசர் பகவான் ஜெகந்நாதரின் திருப்திக்காக, ரதத்திற்கு முன் தெருவைக் கூட்டுவார்.

அவர் பகவானை எல்லாவற்றுக்கும் உரிமையாளராகவும், அந்த நாட்டின் உண்மையான அரசனாகவும் நினைத்து, தன்னை பகவானின் மிகவும் தாழ்ந்த சேவகனாக எண்ணிக் கொண்டார்.

ஒரு சமயம் அரசர் தென்னாட்டில் காஞ்சி நகரத்திற்கு விஜயம் செய்தார். அவ்விடத்தில் தனது கூடாரத்தை, தலை நகரத்திலுள்ள மிகவும் ரம்மியமான ஓர் தோட்டத்தில் அமைத்தார். அங்கே, மன்னர் புருஷோத்தம தேவர் காஞ்சி இளவரசி பத்மாவதியை சந்தித்தார். இருவர்கிடையில் கருத்து ஒருமித்து காதலிக்கலானார்கள்.

இவர்களது விருப்பம் அறிந்த காஞ்சி அரசன் , மனமகிழ்ந்து மன்னர் புருஷோத்தமரை அரண்மனைக்கு அழைத்து விவாகம் குறித்து பேசி தீர்மானம் செய்தார்கள். மன்னர் புருஷோத்தம தேவரும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் . பின்னர் ஒரிசாவுக்குத் திரும்பினார்.

சில நாள் சென்ற பிறகு காஞ்சி அரசர் தன்னுடைய மந்திரியை ஒரிசாவிற்கு அனுப்பி தன் மகளின் திருமணத்தைப் பற்றிய உத்தேசத்தை அதிகாரபூர்வமாய் தெரிவித்து வர அனுப்பினார். புருஷோத்தமதேவ அரசர் மந்திரியை நன்றாக வரவேற்று உபசரித்தார். அப்போது ரத யாதரை சமயம். மன்னருக்குப் மிகவும் பிரியமான வைபவம் அது. மேலும் அவரது திருமண உத்தேசம் மன்னரின் மகிழ்ச்சியை மேலும் கூட்டியது.

மன்னர் புருஷோத்தம தேவர், காஞ்சியிலிருந்து வந்த மந்திரியை மேலும் சில நாட்கள் தங்கி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீ ஜெகந்நாதரின் ரதயாத்திரை உற்சவத்தை பற்றி எடுத்துரைத்து . இந்த பிரம்மாண்டமான திருவிழாவில் பங்குகொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விண்ணப்பித்தார். மந்திரியும் அகமகிழ்ந்து மேலும் சில நாட்களுக்கு பூரியில் தங்குவதென்றும் , பிரம்மாண்டமான திருவிழாவில் பங்குகொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

ரத யாத்திரை சுபமுகூர்த்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், ஶ்ரீ பலராமர், மற்றும் சுபத்ரா தேவியின் விக்ரகங்கள் சுதர்சன சக்ரத்துடன் ஶ்ரீ கோவிலிருந்து கொண்டுவரப்பட்டு, ரதங்களில் ஏற்றப்பட்டன. பல்லாயிரக்கணான பக்தர்கள் இந்த மாபெரும் ரத யாத்ரை உற்சவத்தில் பங்குகொள்ள கூடியிருந்தார்கள். கரதாளம், மிருதங்கம், பரையொலி, சங்கொலி போன்ற மங்கள வாத்தியங்களின் ஒலியில் அணைவரும் உற்சாகமாக ஆடி பாடி ஆனந்தம் பரவசத்தில் ஆழ்ந்த அனுபவத்திற்குள்ளானார்கள்.

puri
puri

மன்னர் புருஷோத்தம தேவர், திரு வீதியில் பவனி வரும், பகவான் ஶ்ரீ ஜெகன்நாதரின் ரத உற்சவத்தில் ராஜ வீதியில், தான் ஒரு எளிமையான சேவகனை போல, தங்க துடைப்பத்தில் ரதம் வரும் பாதையெங்கும், பக்தி பரவசத்தில் ஆனந்தமாக சுத்தம் செய்யலானார். அச்சமயம் ரத உற்சவத்தில் பங்குகொள்ள வந்த காஞ்சி மந்திரி, மன்னர் கையில் துடைப்பத்துடன் வீதியை சுத்தம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, பேரரசர் ஒருவர் ஒரு சாதாரண மனிதரைப் போல தெரு கூட்டுகிறாரே என்று குழம்பினார்.

பகவானுக்காக அரசர் இதைச் செய்தாலும், இந்த பணியின் உயர்வினை மந்திரியால் புரிந்துக் கொள்ள இயலவில்லை. அவர் இத்தகைய பணியை ஒரு ராஜாவின் கண்ணியத்துக்கு இழுக்காக கருதினார். ஏனென்றால் தெரு கூட்டுவது இழிவான வேலையாக கருதினார்

மந்திரி உடனே பூரியிலிருந்து புறப்பட்டு காஞ்சிக்குத் திரும்பினார். பூரியில் தான் பார்த்தவற்றை அதிலும் குறிப்பாக துப்புரவு செயலை ராஜா செய்ததை, மன்னருக்குத் தெரிவித்தார்;

மந்திரி காஞ்சி மன்னரிடம் “ஒரு துப்புரவு வேலை செய்பவனையா நமது ராஜகுமாரி பத்மாவதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? என்று எடுத்துரைத்தார்.

புருஷோத்தம தேவரின் செய்கையின் நோக்கத்தை புரிந்து கொள்ளாத ராஜா, தன்னுடைய மந்திரியின் கருத்தை பூர்ணமாக ஒப்புக்கொண்டார், பின்னர் காஞ்சி மன்னர். தன்னுடைய மகள் சண்டாளனைப் போல தெருக் கூட்டுபவனை மணக்கமாட்டாள் என்று பூரிக்கு செய்தி அனுப்பினார்.

இச்செய்தி புருஷோத்தம தேவரையும் ராஜகுமாரி பத்மாவதியையும் வருத்தமடையச் செய்தது. மேலும் ராணி பத்மாவதிக்கு , பூரி ராஜா புருஷோத்தம தேவரை தவிர, நாட்டில் தகுதி வாய்ந்த நல்ல அரசர்களை அழைத்து சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார்.

காஞ்சி மன்னரின் இந்த செயல் புருஷோத்தம தேவர் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பாகக் கருதி, காஞ்சி ராஜனை பழிவாங்க சபதம் பூண்டு போருக்கு புறப்பட்டார். காஞ்சி அரசர் கணபதியின் பக்தர். போர்க்களத்தில் நுழைவதற்கு முன் அவர் ஒரு நிபந்தனையை விதித்தார்:

பூரி அரசர் தோற்றால். அவர் காஞ்சி ராஜனிடம் ஜகந்நாதர், பலதேவர், சுபதரா விக்ரகங்களை ஒப்படைத்துவிட வேண்டும். இந்த விக்ரகத்தை காஞ்சி ராஜன் வழிபடும் கணபதியின் விக்ரகத்திற்குப் பின்னால் வைக்கப்படும். அவ்வாறே காஞ்சி அரசன் தோற்றால், அவர் தான் வணங்கும் கணேசரை பூரி மன்னரிடம் ஒப்படைக்க, அவர் அதை ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா விக்ரகங்களுக்கு பின்னால் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

புருஷோத்தம தேவரின் கூடாரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து அவர் யுத்தகளத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. இதை அவர் அவமானமாக உணர்ந்தார். ஜெகந்நாதர் கோயிலுள்ள. திருவுருவங்களை இழக்க நேரிடுமே என்று அவர் உடனே விசனமடைந்தார். இந்த திருவுருவங்களை காஞ்சி கணேசர் கோயிலின் பின்னால் பிரதிஷ்ட செய்துவிடுவார்களே. என்ன செய்வது என்று மனம் வருந்தினார்.

அரசர் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரிடம் : “ஹே ஜெகந்நாதா! அருள்புரிவீர். தங்களுக்கு தெருக் கூட்டி, திவ்ய சேவை செய்ததை காஞ்சி அரசர் அவமானமடைந்ததாக எண்ணி. என் திருமணத்தை ரத்து செய்துவிட்டார். நான் இந்தப் போரில் தோற்றால் அது தங்களுடைய தோல்வியுமில்லையா? அது தங்களுக்கு பெருத்த அவமானமாயிற்றே ! ஜெகந்நாதரான நீங்கள் எங்ஙனம் கணேசர் பின்னால் அமர முடியும்?” என்று பிரார்த்திக்கலானார்

அன்று இரவு பிரபு ஜகந்நாதர் அரசரின் கனவில் தோன்றி : “விசனப்படாதே. மறுபடியும் திரும்பிச் சென்று காஞ்சி நோக்கி போர் புரியவும். இந்த தடவை நானே உனக்காக போர்க்களத்தில் உதவி செய்வேன்.” என்றார்.

அரசர் விழித்தெழுந்தார். பகவான் தாமே நிலைமையை சரி செய்வேன் என்று குறிப்பிட்டதை நினைத்து மகிழ்ந்தார், மறுபடியும் காஞ்சி அரசருடன் போர்புரிய புருஷோத்தம தேவர் உற்சாகமடைந்தார்.

அரசர் புருஷோத்தம தேவர் இரண்டாவது தடவையாக காஞ்சியை நோக்கி படையெடுத்தார். இச்சமயம் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரும், ஶ்ரீ பலராமரும் அவர் சார்பில் சண்டையிட போர்வீரர்களாக வேஷமிட்டு அவர்களுடன் சென்றார்கள்.

பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் ஒரு கருப்பு குதிரையிலும், பகவான் ஶ்ரீ பலதேவர் ஒரு வெள்ளைக் குதிரையிலும் களம் ஏகினார்கள். அப்போது வைகாசி மாதம் கோடை காலம் என்பதால் வெயில் கொளுத்தியது ; இரு பிரபுகளுக்கும் தாகம் எடுத்தது. வழியில் மாணிகா என்ற மூதாட்டி தலையில் மோர்பானையை சுமந்து அருகில் உள்ள சந்தைக்குப் மோரை விற்க போய்க் கொண்டிருந்தாள். பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் மற்றும் பலதேவர் இருவரும் அவளை வழியில் நிறுத்தி மோரைக் குடிக்க விரும்பினார்கள். திருப்தியாக மோரை அருந்திய இருவரும் அந்த இடைத்தைவிட்டுப் புறப்பட்டு. தங்கள் பயணத்தைத் தொடரப் போனார்கள்.

மூதாட்டி மாணிகா ஜெகந்நாதரும் பலராமரும் மோருக்குப் பணம் கொடுக்காததை எண்ணி விசனப்பட்டாள். ஆகையால் இருவரையும் வழிமறித்து பணம் கேட்டாள். அதற்கு இரு பகவான்களும் மூதாட்டியிடம் “நாங்கள் போருக்குப் போகும் படைவீரர்கள். எங்களிடம் பணம் கிடையாது” என்று பதிலுரைத்தனர் .

மூதாட்டி அழத் தொடங்கினாள். அந்த மோர் மட்டுமே அவளுடைய ஜீவனம். சந்தையில் கிடைப்பதைக் கொண்டு குடும்பத்தை பராமரித்து வந்தாள். இதை அவள் ஜெகந்நாதருக்கும் பலராமருக்கும் விவரமாய்க் கூறினாள்.

ஜெகந்நாதர் குதிரையிலிருந்து குனிந்து தன் விரலிலிருந்து ஒரு மோதிரத்தை கழற்றி. அதை மாணிகாவிடம் கொடுத்துவிட்டு கூறினார்: “இந்த மோதிரத்தை வைத்துக் கொள். சிறிது நேரம் சென்றதும் இவ்வழியாக ஒரு அரசர் தன் படைகளுடன் வருவார். அவரிடம் நாங்கள் கொடுத்த இந்த மோதிரத்தைக் அவரிடம் கொடுத்துவிட்டு மோருக்குகான பணத்தை பெற்று கொள் என்று கூறினார்.

அரைகுறை மனதுடன் மூதாட்டி மோதிரத்தைப் பெற்றுக் கொண்டாள். சகோதரர்கள் தங்கள் போர்ப் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

வீதியோரத்தில் நின்றபடியே மூதாட்டி மாணிகா அரசரின் வருகைக்காக காத்திருந்தாள். வெகு நேரத்திற்கு பிறகு அரசர் சேனையுடன் நெருங்கி வருவதைப் பார்த்தாள். அரசரை வழி நிறுத்தி மாணிகா கூறினாள்: “உங்களுடைய இரண்டு போர் வீரர்கள், கருப்புக் குதிரையிலும் வெள்ளைக் குதிரையிலும் இந்த வழியாகப் போனார்கள். பார்ப்பதற்கு இரண்டு பேரும் சகோதரர்கள் போலத் தெரிந்தார்கள். என்னிடம் மோர் வாங்கி பருகினார்கள். ஆனால் அவர்களிடம் பணம் இல்லை.” பின்னர் அவர்கள் தங்களது கை விரல்களிலிருந்து மோதிரத்தை கழற்றி என் கையில் கொடுத்து , தங்கள் நாட்டு அரசர் சேனையுடன் பின்னால் வருகிறார்கள் அவர்களிடம் இந்த மோதிரத்தை காண்பித்து பணம் பெற்று கொள் என்று கூறினார்கள். என்று நடந்தவை அனைத்தும் ஒன்று விடாமல் கூறினாள். தயவு செய்து இந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு. மோருக்கான பணத்தை தர வேண்டுகிறேன். என்று கூறினாள் .

மோதிரத்தைப் பார்த்த அரசர் ஆச்சர்யமடைந்தார். அது சாதாரண தங்க மோதிரம் அல்ல ; பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் வைர மோதிரமாயிற்றே! என்று தனக்குள் பேசினார். அவருக்குப் புரிந்துவிட்டது பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் மற்றும் பலதேவர் இருவரும், தங்களது வாக்கை காப்பாற்றுவதற்காக. போர்வீரர்கள் கோலத்தில் காஞ்சிக்குப் போய்விட்டார்கள் என்று. இந்த சம்பவத்தால் அரசர் உற்சாகம் அடைந்தார். மகிழ்ச்சியடைந்த அவர் தன்னுடைய வெற்றி ஊர்ஜிதமாய் விட்டதாய் நினைத்தார்;

மன்னர் புருஷோத்தம தேவர் மாணிகாவிடம் : “பிரபு ஜெகந்நாதரையும் பிரபு பலராமரையும் பார்ப்பதற்கும், அவர்களுக்கு மோர் தருவதற்கும் நீ கொடுத்து வைத்திருக்கிறாய். பகவான் சொன்னபடி, நான் உனக்கு மோருக்கான பணத்தை தந்துவிடுவேன்.” தன் சேனையில் சேர்ந்து பிரபுமார்கள் போரிடுவதை நினைத்து மன்னர் மனமிளகினார்.

அந்த மூதாட்டிக்கு தாராளமாக சன்மானம் கொடுக்க விரும்பினார். அவளுக்கு அரசர் சில கிராமங்களை சொந்தமாக்கித் தந்தார். கிராம வாசிகள் தரும் வரிப்பணத்தில் வசதியாக வாழலாம் என்றார். பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் மற்றும் பலதேவர் மோர் வாங்கி குடித்த அதே இடத்தில் மன்னர் பிற்காலத்தில் ஒரு கிராமத்தை எழுப்பினார். அந்த கிராமத்தை ‘மாணிகா பட்டினம்’ என்றழைத்தார். அந்த கிராமம் இன்னும் ஒரிசாவில் இருக்கிறது.

அரசர் காஞ்சியை நோக்கி படையெடுத்தார். இரு தரப்பு சேனைகளுக்குமிடையே பெரும் போர் நடந்தது. காஞ்சி அரசரின் போர் வீரர்கள் புருஷோத்தம தேவரின் படையில் இரண்டு புதிய வீரர்கள் இருப்பதைப் பார்த்தார்கள்: ஒருவர் கருப்பு குதிரையிலும், மற்றொருவர் வெள்ளைக் குதிரையிலும் இருந்தனர். இந்த இரு போர் வீரர்களும் மும்முரமாக போர் புரிந்ததால் யாராலும் அவர்களை வெல்ல முடியவில்லை. காஞ்சி அரசரின் படைவீரர்கள் பலர் இப்போரில் இறந்தனர். காஞ்சி அரசர் தோற்றார்.

காஞ்சி அரசருக்குப் பதிலாக ராஜகுமாரி பத்மாவதியை புருஷோத்தம தேவர் கைது செய்தார். தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்ததைப் பழிவாங்கும் வகையில் புருஷோத்தம தேவர், தெருக்கூட்டும் துப்புரவாளன் ஒருவனுக்கு ராஜகுமாரியை திருமணம் செய்துதர திட்டமிட்டார்.

இந்த செய்தியைக் கேட்க ஒவ்வொருவரும் துக்கமடைந்தனர். குறிப்பாக இளவரசி பத்மாவதி மிகவும் விசனப்பட்டாள் ஏனென்றால் அவள் புருஷோத்தம தேவரிடம் உண்மையான அன்பு கொண்டிருந்தாள்.

தன் தந்தையின் செயலுக்காக புருஷோத்தம தேவர் தன்னை பழிவாங்கத் துடிக்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனால் அரசர் புருஷோத்தமரின் மந்திரியோ புத்திசாலி. அரசரிடம் பொறுமையாக இருக்கும்படி மந்திரி கூறினார். ஏனென்றால் இளவரசியை மணக்கக் கூடிய தகுந்த துப்புரவாளனை தேர்ந்தெடுக்க சிறிது காலம் பிடிக்கும் என்றார்.

இதற்கிடையில், மந்திரி பத்மாவதியை அழைத்துச் சென்று, தன் வீட்டில் புகலிடம் தந்தார். தான் ஒரிசாவின் ராணியாக விதிக்கப்படவில்லையே என்ற தன் துர்பாகியத்தை நினைத்து பத்மாவதி நொந்தாள் கண்ணீர்விட்டாள். தன் கஷ்டத்திற்கு முடிவே இல்லையோ என்று நினைத்து புலம்பினாள்.

காலம் கடந்தது ரத யாத்ரை தினம் நெருங்கிக் கொண்டேயிருந்தது. இத்திருவிழாவிற்காக ஆயிரமாயிரம் மக்கள் பூரிக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்பகுதியில் உள்ள எல்லோரும் சந்தோஷமாயிருந்தார்கள். ஒரு துப்புரவாளனுக்கு தான் வாழ்க்கைப் படுவதை நினைத்த அரசகுமாரி பத்மாவதி சதா மனம் புழுங்கினாள்.

ஒரு நாள் பத்மாவதியிடம் மந்திரி வந்து அன்று அவளது திருமணம் நடக்கப்போவதால் நன்றாக உடையணிந்து கொள்ளுமாறு கூறினார். இதைக் கேட்டதும் பத்மாவதி அழத் தொடங்கினாள். ஏனென்றால் தன் வாழ்நாளின் மீதியை ஒரு துப்புரவாளனின் வீட்டில் கழிக்க வேண்டியிருக்கும் என்பதால். மந்திரி அவளை சமாதானப்படுத்தினார்:

“ராஜகுமாரி பத்மாவதியே, கவலைப்படாதீர்கள்: பிரபு ஜெகந்நாதரை நம்புங்கள், அவர் அருள் புரிவார்.” என்று அவளை தேற்றினார்.

பெண்கள் எல்லோரும் பத்மாவதியை அழகாய் அலங்கரித்தார்கள். அன்றைய தினம் ரத யாத்ரையானதால், தெருக்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டம். பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி ஆகிய மூர்த்திகள் தேரில் அமர்ந்திருந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் தெருக்களில் வரிசையாய் நின்று கொண்டிருந்தார்கள், பக்தர்கள் மிருதங்கம், கரதாளம் இசைத்து சங்குகளை முழங்கினார்கள். ரதயாத்ரை தொடங்குவதற்கு எல்லாம் ஆய்த்த நிலையில் இருந்தது. பூரி அரசர் ஜெகந்நாதரின் ரதத்திற்கு முன்னால் சென்று பகவானின் திருப்திக்காக தெருவைக் கூட்டுவதற்காக தங்கப்பிடிக் கொண்ட துடைப்பத்துடன் இதயம் முழுவதும் பக்தியால் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் நிறைந்திருக்கச் அரசர் தெருக் கூட்டினார்.

புருஷோத்தம தேவர் கூட்டி முடித்தபிறகு, மந்திரி இளவரசி பத்மாவதியை மன்னர் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தார். சாமர்த்தியமாய் அவரிடம் கூறினார் “அன்பார்ந்த அரசரே, இளவரசிக்கு தக்க துப்புரவாளன் கிடைக்கும் வரை பொறுமையாய் இருக்குமாறு கூறியிருந்தேன். இப்போது இங்கே அவளுக்கு கணவனாகும் தகுதியுள்ள ஒரு தெருக்கூட்டும் துப்புரவாளனைப் பார்த்துவிட்டேன் என்பதை சொல்ல வந்திருக்கிறேன்.

மந்திரியிடம் ராஜா கூறினார்; “நல்லது, எனக்கு இதற்கு நேரமில்லை என்று. இன்று ரத யாத்ரை நாள் உங்கள் இஷ்டம் போல் செய்யவும்:” மந்திரி ராஜாவைப் பார்த்து புஞ்சிரிப்பு சிரித்தார். “ஆனால் அரசரே, நான் தேர்ந்தெடுத்த தெருக் கூட்டுபவன் ராஜப்ரமுகராகிய தாங்களே. அரசர் கூட்டுவதை நிறுத்தி, தனது மந்திரியை ஆச்சர்யத்துடன் பார்த்தார் உதட்டில் புள்வகை தெரிந்தது. மந்திரி தொடர்ந்தார் “அரசரே, இன்று நீங்கள் ஒரு தெரு கூட்டுபவன் நீங்கள் என்னிடம் பத்மாவதிக்கு ஒரு தெருக்கூட்டுபவனுக்கு பேசி முடிக்கச் சொன்னீர்கள். ஆதலால் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். இந்த வார்த்தைகளுடன் மந்திரி இளவரசி பத்மாவதியைப் பார்த்து ராஜா புருஷோத்தமரின் கழுத்தில் மாலை போட ஆணையிட்டார்.

அரசர் இளவரசி பத்மாவதியை தன் பட்டமஹிஷியாக ஏற்றுக் கொண்டார்: மந்திரியின் புத்தி சாதுர்யத்தை மெச்சினார். இளவரசி பத்மாவதி சந்தோஷப்பட்டாள்.

காஞ்சி அரசர் விதித்த நிபந்தனைகளின்படி, கணேச மூர்த்தி பூரிக்கு கொண்டுவரப்பட்டு ஐகந்நாதர் கோயிலுக்குப் பின்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றும் கூட பூரி ராஜா, ரதயாத்ரை திருவிழா தொடங்குவதற்கு முன்பாக பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் ரதம் செல்லும் பாதையை கூட்டி பெருக்குவதை காணலாம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe