காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, “இவர் தான் இனி நம் பெருமாள்” என்று சொன்னார்கள்.
அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள். தங்களுடைய விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள்.
அதனால், ஒருவன் அர்ச்சகரைப் போலவும், ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும், சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள்.
அச்சிறுவர்களுள் ஒருவன், கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான்.
கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்!” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக அழைப்பது வழக்கம். அதுபோல், இங்கேயும் அர்ச்சகர் வேடமணிந்திருந்த சிறுவன், ராமாநுஜர் வேடத்திலிருந்த சிறுவனைப் பார்த்து, “ஜீயரே வாரும்!” என்று அழைத்தான்.
ஆனால் தற்செயலாக அங்கே வந்த ராமாநுஜர், “ஜீயரே வாரும்!” என்ற குரலைக் கேட்டு, “அடியேன் தாசன்!” என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தார். “பகவத் பிரசாதம்!” என்று சொல்லி மண் உருண்டையை அந்தச் சிறுவன் ராமாநுஜரிடம் தந்தான். “யாம் பெறும் சம்மானம்!” என்று சொல்லிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு மண் உருண்டைப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார் ராமாநுஜர்.
ராமாநுஜரின் சீடர்கள் இக்காட்சியைக் கண்டு திகைத்துப் போனார்கள். “என்ன சுவாமி இது? மண் உருண்டையைப் போய்ப் பிரசாதம் என்று சொல்லி வாங்கிக் கொள்கிறீர்களே!” என்று ராமாநுஜரிடம் கேட்டார்கள். “மண் உருண்டை என்று சொல்லாதீர்கள். இது பெருமாள் அமுது செய்த பிரசாதம்.
பெருமாளின் வாய்க்குச் செல்வதற்கு முன்னால் வாழைப் பழம், மாதுளம்பழம், திராட்சைப்பழம் எனப் பிரித்துச் சொல்லலாம். ஆனால் எப்போது அவரிடம் சென்று திரும்பி வந்து விட்டதோ, அதன்பிறகு அனைத்துமே பிரசாதம்தான்.
அதில் வேறுபாடில்லை. இந்த மண் உருண்டையும் பிரசாதமே!” என்றார் ராமாநுஜர். சீடர்களோ, “சுவாமி! முதலில் அங்கு இருப்பவர் பெருமாளே இல்லை. விளையாட்டுக் குழந்தைகள் ஒரு கல்லை வைத்து அதற்கு நிவேதனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகத்துக்கா நிவேதனம் செய்தார்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு ராமாநுஜர், “சீடர்களே! உங்களுக்குக் கீதை தெரியாதா? “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்” (என் பக்தர்கள் எந்த வடிவில் என்னை வழிபடுகிறார்களோ, அந்த வடிவில் நான் வந்து அவர்களுக்கு அருள்புரிவேன்) என்று கண்ணன் கூறியுள்ளானே! நம் பொய்கையாழ்வார்,
தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமர் உகந்தது எப்பேர் மற்றப்பேர் – தமர் உகந்து
எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியான் ஆம்
என்று பாடியுள்ளாரே!
அடியார்கள் எந்த வடிவில் பெருமாளை வழிபட விரும்புகிறார்களோ, அந்த வடிவில் அவர்களுக்கு அவர் காட்சி தருகிறார் என்பதைக் கண்ணனும் ஆழ்வார்களும் இவ்வளவு தெளிவாகச் சொல்லியிருக்கும் போது, இந்தச் சிறுவர்கள் தங்கள் பிஞ்சு மனதில் பக்தியோடும், இந்தக் கல்லில் பெருமாள் உள்ளார் என்ற நம்பிக்கையோடும் பூஜை செய்கையில், அந்தக் கல்லில் பெருமாள் இருப்பாரா மாட்டாரா?” என்று சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.
“நிச்சயம் இருப்பார்!” என்று கூறினார்கள் சீடர்கள்.“அப்படியானால் நீங்களும் சென்று பிரசாதம் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அவர்களிடம் சொன்னார் ராமாநுஜர். ‘தபஸ்’ என்றால் சிந்தனை என்று பொருள். “தப ஆலோசனே” என்கிறது வடமொழி நிகண்டு.
அடியார்கள் தம் மனதில் சிந்திக்கும் வடிவம் எதுவோ, அச்சிந்தனையிலுள்ள வடிவையே தன் வடிவாகக் மாற்றிக் கொள்ளும் விதம் திருமால் விளங்குவதால், ‘ஸுதபா:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 197-வது திருநாமம்.
ஸுதபஸே நமஹ” என்று தினமும் நாம் சொல்லி வர விரும்பிய நற்பலன்களை நாம் விரும்பிய படி திருமால் தந்து அருள்வார்