
கதிர்காமம் என்றால் ஒளிமயமான விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றித் தருவது என்றுபொருள். அங்கே சுவாமி ஒளிமயமாக விளங்குகிறார். எனவே அவரை நேரே தரிசிக்கக் கூடாதென்று திரை போடப்பட்டுள்ளது. அங்கே உள்ள கற்பூர தீப ஒளியைத் தரிசனம் செய்யவேண்டும்.]
ஏமகூடத்தில் இருந்து (கதிகாமத்தில்) போர் துவங்குகிறது.
பானுகோபன் வதைப் படலம்:
தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர்(3000)ம் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்குச் செல்கின்றான்.
பானூகோபன் மாயயால வித்தைகள் செய்து போர் செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். நீதியாக நடப்பவன். சிவனே முருகனாக அவதரித்து போருக்கு வந்துள்ளார், தேவர்களை விடுவித்தால் நாமும் நெடுநாட்கள் வாழலாம் என தந்தையாகிய சூரனுக்குக்கூறியும் அவன் ஆணவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் சூரன் தானே போருக்குச்சென்று முருகனையும் அவன் சேனையையும் அழிக்கப் போவதாக வீராவேசம் கொண்டு போருக்குச் செல்ல ஆயத்தமானான். தான் மூத்தமகன் இருக்க தந்தை போருக்கு செல்வது சரியில்லை என கூறிய பானுகோபன் தான் போருக்குச் செல்ல அனுமதி தரும்படி சூரனிடம் வேண்டினான். சூரனும் மகனான பானுகோபனை ஆசீர்வதித்து போருக்கு அனுப்பி வைக்கின்றான். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையயை ஆழ்த்தமுருகன் அதையும் முறியடித்து விடுகிறார். அதன் போது பானுகோபனும் முருகன் வேலுக்கு பலியாகிறான்.
சிங்கமுகன் வதை:
பானுகோபன் பலியாக சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்குச் செல்கின்றான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். முருகனாக வந்திருப்பவர் சிவனே. சிவனுடன் போர்புரிய எம்மால் முடியாது. தேவர்களை விடுதலை செய்தால் நாம் உயிர் வாழலாம் என சூரனுக்கு புத்திமதி கூறியும் அவன் கேட்காமையால் செஞ்சோற்றூக் கடனுக்காக போர்புரியச் செல்கின்றான். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் புரிகின்றான். இவனது சிரம் விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய சிரம் தோன்றும் வரம்பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாது குஞ்ச படையால் நெஞ்சைப் பிளந்து சங்காரம் செய்கின்றான்.
சூரன் சங்காரம்:
சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவ மலத்தால் பீடிக்கப் பட்டு அதர்ம வழியில் சென்று அழிகின்றான். தன் சொந்த பந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணை தொடுத்தான். அவை யாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயா யாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர் வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார். அப்போதும் அவனின்ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர் செய்யவே விருப்புக் கொண்டவனாய் போர் செய்யலானான்.
வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிகிறான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் உதவாமல் போனதினால், உதவி செய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான். தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.
முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்)காட்டியும், எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டியும், சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது போர் செயலானான்.
சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற “இந்திரஞாலம்” என்னும் தேரை அழைத்து முருகனின் படைச்சேனையையும் துூக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான். இந்திரஞாலம் என்றதேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின் படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார். இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.
சூலப்படையும் முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்து செயலற்றதாக்கி திரும்பிச் செல்ல வைத்தது. கடைசியாக சூரன் தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது. முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராட துணிது சக்கரவானபக்ஷியாக உருமாறி வானில் பறந்து பல அழிவுகளை ஏற்படுத்தியதுடன் முருகனின் சேனையையும் சீண்டத் தொடங்கினான். இது கண்ட முருகப்பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர் புரிவது யுத்ததர்மத்திற்கு விரோதமானது என எண்ணி, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாயால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.
தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிக்கலானான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சங்காரம் செய்தது.
ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி முருகனை வேண்டி நிற்க; அவன்மேல் இரக்கம் கொண்டு பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.
கந்த புராணக் கதையைச் “சங்கரன் மகன் சட்டியில் மாவறுத்தான்” என்ற சொற்றொடர் மூலம்நகைச் சுவையாக பயன் கூறுவார்கள். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித்திதியிலே மாமரமாக வந்த சூரனை இரண்டாக அரிந்தார் என்பது இதன் பொருள்.
முருகனின் ஆணைப்படி, வருணன் வீர மகேந்திரபுரியைக் கடலுக்கு அடியில் மூழ்கடிக்க, போர்முடிகிறது.
வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்புகின்றான். சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதிநாளாகிய சஷ்டி எனப்படும். சஷ்டி என்பது திதியாகும். இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்த இடம் முருகப் பெரமான் குடிகொண்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றாகியதும், கடலும், கடல் சார்ந்த பிரதேசமாகிய நெய்தல் நிலமாகிய திருச்செந்தூர் என்னும் தலமென கூறுவாருமுளர்.
சூரனை அழித்த மனக்கேதம் தீர, செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஈசனின் ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, சிவ பூசை செய்கிறான் முருகன். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காண்பது. கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.
இங்கே முருகப் பெருமான் அபயம்/வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. அலங்காரத்துக்காக மட்டும் வேலையோ/யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனைமலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம்.
முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம்! அவருக்கே முதல்பூசைகள் செய்யப்படுகின்றன!
மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ் சிறு சிலைகள்! வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று! திருவெளி (ஸ்ரீவேளி/சீவேளி என்று திரிந்து விட்டது). கருவறையைக் காலையிலும் மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப்பயன்படுத்துகிறார்கள்.
ஆலயத்தில் சிறு சிவப்புக் குன்று-செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது. பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்)என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனேமூலத்தானத்து முதல்வன்.
கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!
சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானதுபழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில்சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணக்கூடியதாகஇருக்கின்றது.
முருகப் பெருமான் சூரபத்மனோடும் அவனது படையினருடனும். பத்து தினங்கள் நடந்தபோரில் அசுரர்களை வென்று சூரபத்மனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றினார். மயில் முருகனுக்கு வாகனம் ஆகியது. சேவல் முருகனின் வெற்றிக்கொடி ஆகியது.
சூரசங்காரங்கள் முடிந்த பின்னர், அமரேந்திரன் (இந்திரன்) தேவயானையை முருகப்பெருமானிடமே ஒப்படைக்க விழைகிறான். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம்அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் மணக்கிறார். பின்னர், அவ்வண்ணமே வள்ளி அம்மையையும், திருத்தணிகையில் மணம் புரிகிறார்.
விரதம் தோன்றிப் பரவியமை:
முருகப் பெருமான் தாரகாசுரன் சிங்க முகாசுரன் சூரபத்மன் ஆகியோருடன் ஐப்பசிமாதவளர்பிறை முதலாறு நாட்களில் போரிட்டு வென்றார். கந்தன் கருணையினையும் அவரதுபேரருட் செயலையுங் கண்டு களிப் பேருவகை கொண்ட தேவர்களும் முனிவர்களும் இவ்வாறுநாட்களையும் புனித நாட்களாகக் கொண்டு நோன்பு அனுட்டித்தனர்.
இதனையே பூலோகமக்களும் கடைப்பிடித்து அறுமுகப் பெருமானின் திருவருள் பெற்றுய்ய இவ்விரதத்தினை அனுட்டிக்கத் தொடங்கினர்.
விதிவிலக்கு:
இவ்விரத நாட்கள் பெரும்பாலும் ஆறுநாட்கள் வரும். ஆனால் ஒருசில வருடங்களில் பஞ்சாங்கநேரக் கணிப்புக்கு அமைய திதிகளின் நேரம் கால அளவு குறைவு ஏற்படுமிடத்து ஐந்துநாட்களும் வரலாம்.
கண்கண்ட தெய்வமாகக் காட்சி தருகின்ற ஷண்முகப் பெருமானைத் தாலாட்டி வளர்த்தகார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர், படைவீடுகளும் ஆறு, அவருக்குரிய சக்தி வாய்ந்த மந்திரஅட்சரங்கள்-அதாவது எழுத்துக்களும் ஆறு யந்திரத்தில் கீறப்படுகின்ற கோணங்களும் ஆறு,ஷட்கோணம் அறுகோணம் என்பர். கைமேல் பலன் அளிக்கின்ற விரதநாட்களும் ஆறு.
விரதகாரர் பெறும் பேறு:
கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர்,வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு” நன் மகவு வேண்டின் மக்களைப்பெறுவரெ ன்றும், பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பஃறலை யனந்தன் றாங்கு மாழிசூழுலகமெல்லாம் வேண்டினு மடைவர் மாதோ”
இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்ய விரும்பினால் இயைந்த கன்னியர்களைமணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரை விரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர்.பருத்தவாயையும் இரத்தினம் பொருந்திய சிவந்த சுடிகையையுமுடைய பலதலைகள்பொருந்திய ஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தையெல்லாம் பெறுவர்.
பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சு வாகிக் குருவினால்ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்த வலைகடல் வடிவாங் கந்தனடியிணை நீழல் சேர்வார்.
இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுஷ்டிப்போர் பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம் எழப்பெற்று, பின்ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப் பகைவராதியோரை வென்று, பூரண ஞானானந்தசொருபராகும் முருகப் பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்). எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும்,கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.