ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்
“குரு காரணமில்லாமல் அருள்செய்யும் கருணைக்கடல் ; அவரை வணங்கும் புனிதமானவர்களுக்கு அவர் நண்பர்” என்று விவேகசூடாமணியில் கூறப்பட்டுள்ளது.
யாருக்காவது குரு ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்தவேண்டியிருந்தால் அவருடைய தயைக்குக் காரணமே கிடையாது. சிஷ்யன் அவரிடத்தில் சரணாகதியாய் வந்தான் என்றால் அந்தக் காரணம் ஒன்றே போதும்.
ஞானம் சம்பாதிப்பதற்கு நாம் குருவிடம் செல்லவேண்டும். அதனால் அந்த குருவும் தத்துவத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். அப்பேற்பட்ட குருவின் பெருமையை சங்கரர், “ஞானத்தை அளிக்கக்கூடிய ஸத்குருவிற்கு மூவுலகங்களிலும் உவமை கிடையாது.
குருவானவர் தன்னுடைய பாதங்களை அடைக்கலமாக வைத்துக்கொண்ட சிஷ்யனுக்கு தனது நிலைமையையே அளிக்கிறார். ஆதலால் அவர் ஒப்பில்லாதவர் ; உலகிற்கு அப்பாற்பட்டவர். (லெளகிகமான குருவிற்கே உவமை கூற முடியாதபோது ஸத்குருவிற்கு எவ்வாறு உவமை கூற முடியும் ? )” என்று வர்ணித்துள்ளார்.
“குரு என்றால் யார் ? அவர் எப்பேற்பட்டவர் என்பதற்கு ஏதாவது ஒரு த்ருஷ்டாந்தம் சொல்ல முடியுமா ? “ என்று கேட்டால் “அவருக்கு த்ருஷ்டாந்தமாக எதைச் சொல்வது என்று தெரியவில்லை” என உரைக்கிறார் சங்கரர்
ஸ்பர்சமணி என்ற கூறப்படும் ஒரு மணி ஒன்று இருந்தது அந்த மணியின் ஸ்வபாவம் என்னவென்றால் அதன்மீது பட்ட எந்த இரும்பும் தங்கமாக மாறிவிடும். இரும்பின் விலை மிகவும் குறைவு.
அப்பேற்பட்ட இரும்பைத் தங்கமாக மாற்றும் அந்த ஸ்பர்சமணிக்கு எத்தகைய ஓர் அரிய சக்தி இருந்தது என்பதை, நாம் சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு உத்தமமான பொருளாக ஸ்பர்சமணி இருப்பதைப்போல் ஸத்குருவும், ஒன்றுமே அறிவு இல்லாது நின்றுகொண்டே மூத்திரம் போகும் பழக்கம் உள்ளவனும், எதைச் சாப்பிட வேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என்று தெரியாமல் கண்டதைச் சாப்பிடுபவனும், எது ஆரோக்கியமில்லை எது ஆரோக்கியம் என்று தெரியாமல் இருப்பவனும், உலகத்தில் எவ்வாறு பத்து ஜனங்களுடன் பழக வேண்டும் என்று தெரியாமலும் இருக்கும் சிறிய குழந்தையைப் போலுள்ள சிஷ்யனை உலகத்தில் சகல ஜனங்களும் கொண்டாடக்கூடிய மிகவும் உயர்ந்த பிரஜையாக மாற்றிவிடுவார். அத்தகைய சக்தி குருவிற்கு உண்டு.