மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது
நேற்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் இரவு வண்டியூர் வீரராகவபெருமாள் கோவிலில் தங்கி அருள்பாலித்தார். இன்று காலை 6 மணிக்கு கள்ளழகருக்கு திருமஞ்சனம், சைத்தியோபசாரம், ஏகாந்த சேவை நடந்தது. சேஷ வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோலத்தில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பாடான கள்ளழகர், வைகை ஆற்றில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். பிற்பகலில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்த நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தவளையாக இருந்த தபசு முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை சுட்டிக்காட்டும் வகையில், முனிவரின் உருவ சிலை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவர் சாப விமோசனம் பெற்றதை விளக்க, நாரை பறக்கவிடப் பட்டது. அதைக் கண்டு பக்தர்கள் தரிசித்தனர்.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியது குறித்த மிக சுவாரஸ்யமான தாகும்.
மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மட்டும் இங்கு வருவதில்லை. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார். அழகர்மலை உச்சியில் என்றும் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. அங்கு ஒருநாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை உச்சரித்துக்கொண்டிருந்தார். அப்போது துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. குளித்து முடித்து பூஜைகளை செய்த பின் நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை பார்த்து மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். உடனே துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி தினத்துக்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ஷ பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகராக வந்து சாப விமோசனம் அளிப்பார் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்கியதாக வரலாறு கூறுகிறது.
இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளித்தார். இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அழகர் அனுமார் கோவிலில் கள்ளழகராக எழுந்தருளினார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடந்தது.
இரவில் விடிய, விடிய நடைபெறும் தசாவதார காட்சியை காணவும் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். முத்தங்கி, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்பட பல்வேறு அவதாரங்களில் கள்ளழகரை தரிசிக்கலாம் என்பதால் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.








