காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்
வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதிலா சையையெ ழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும்அ வத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
தலைவனே!, அருமை தேவனே!, தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த
நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும், இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும், வினவுமிடத்துச் சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும், குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும், நீலமலர் உயிரை ஒழிக்கும், பொருந்தும் இவை உண்டாக்கும் நிலைகளாவன : எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு,
உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல்,
ஆசையுற்ற உயிர் உண்டோ
இல்லையோ என்னும் நிலையடைதல், (ஆகிய இவை)
பத்தும் ஆகும்.