ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு, ஒரு உப்புக்கல் போதும்! ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்!

Published:

“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”
 
 
25348822 1793332170711940 70046628756731077 n 1 - 2026
(ஒரு பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை நிராகரித்த பெரியவா)
 
 
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
 
பெரியவாள் கலவையில் முகாம்.
 
காலை வேளை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தரிசனத்துக்கு வந்தார். காரில்.ஏக தடபுடல், மனைவி-மடிசார்., பையன்கள்,வேட்டி-துண்டு, .இவர் பஞ்சகச்சம்-அங்கவஸ்திரம் ,நவரத்தினமாலை இத்யாதி.
 
பெரிய தட்டில்பழங்கள்,புஷ்பம்,கல்கண்டு,திராட்சை, முந்திரிப் பருப்பு,தேன் பாட்டில் அத்துடன் ஒரு காகித உறையில் ரூபாய் நோட்டுகள்.
 
பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பணம் செய்து, வந்தனம் செய்து கொண்டார்கள்.
 
பெரியவா அந்தத் தட்டை மெதுவாகக் கண்களால் துழாவினார்கள்.
 
“அது என்ன, கவர்?”
 
“ஏதோ…..கொஞ்சம் பணம்…”
 
“கொஞ்சம்னா?…பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?”
 
வழக்கறிஞர் நெஞ்சில் ஒரு கர்வம் தோன்றியிருக்கவேண்டும். தன்னைப் பற்றி, மாவட்டத்திலேயே பிரபலமான கிரிமினல் லாயரைப் பற்றி, இவ்வளவு தாழ்வாக எடை போட்டிருக்கிறார்களே பெரியவா? நான் எவ்வளவு பெரிய அட்வகேட் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா?..
 
பொய்யான பவ்யத்துடன், “பதினைந்தாயிரம் ரூபாய்,” என்றார்.
 
பெரியவா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டார்கள்; ” நீ எதில் வந்திருக்கே?”
 
“காரில் வந்திருக்கோம்…”
 
“அந்தக் கவரை எடுத்துக்கொண்டு போய் காரில் பத்திரமாக வைத்துவிட்டு வா. பழம்,புஷ்பம் போதும்…”
 
அட்வகேட் வெலவெலத்துப் போய் விட்டார்.
 
பெரியவா சொன்னபடியே செய்தார்.
 
அவரிடம் வெகு சாந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள்.
 
கார் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டது.
 
“பதினையாயிரம் ரூபாயை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்களே?” என்ற பொருமல் சிஷ்யர்களுக்கு இருக்கும் என்பது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன?
 
“ஒரு பொய் வழக்கில் வாதாடி இவர் ஜெயித்தார். கிடைத்த பீஸில்,ஒரு பங்குதான் இந்தப் பதினைந்தாயிரம் . பாப சம்பாத்யம். அதனால் தான் வேண்டாம் என்றேன்…”
 
தொண்டர்களுக்குத் தெளிவு உண்டாயிற்று.
 
ஸ்ரீ மடத்துக்கு, அந்த நாட்களில் அடிக்கடி பொருள் தட்டுப்பாடு வருவதுண்டு. மானேஜர் கவலைப்படுவார், அப்போது கூட, “எப்படியாவது பணம் கிடைத்தால் சரி” என்று எல்லோருடைய பணத்தையும் பெரியவாள் ஏற்றுக் கொண்டதில்லை.
 
“ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.. ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்.”
ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Related articles

Recent articles

spot_img