ருஷி வாக்கியம் (33) – சமுதாயத்தின் நான்கு தூண்கள் யார்?

sibi1 - 2026

“தயை மூலமாகவே சகல நற்குணங்களும் சர்வ தர்மங்களும் காப்பாற்றப்படுகின்றன” என்கிறார் வியாச மகரிஷி.

மனிதனுக்கு இருக்க வேண்டிய உயர்ந்த குணங்களில் தயை என்னும் இரக்க குணம் மிகவும் இன்றியமையாதது. ஆனால் தர்மத்தை காப்பாற்றவிடாமல் தடுப்பவர்களிடம் அரசாளுபவன் தயை காட்ட வேண்டிய அவசியமில்லை. அதற்காக அவர்களிடம் கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதல்ல. தர்மத்திடமும் தர்மத்தை நம்பி வாழ்பவர்களிடமும் தயை காரணமாக அதர்மம் செய்பவர்களை தண்டிக்கிறான் அரசன். அது அதர்மம் செய்பவர்களிடம் குரோதம் காட்டுவது போல் தோன்றும். ஆனால் அதுவும் தயையில் ஒரு பாகமே! ஆனால், அவர்களை தண்டிக்காமல் அவர்களிடமும் தயவு காட்டி விடுவித்துவிட வேண்டும் என்று எண்ணுவானாகில் அந்த அரசன் தவறு செய்பவனாகிறான்.

எனவே எங்கே தயை காண்பிக்க வேண்டும் எங்கே காண்பிக்கக் கூடாது என்பதை அரசன் அறிந்திருக்க வேண்டும்.
சாதாரணமாக துயரத்தில் இருப்பவர்களைப் பார்க்கும்போது உடனே நம் மனம் உருக வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். துயரத்தில் இருப்போரிடமும் தர்ம வழி நடப்போரிடமும் எப்போதும் தயையோடு நடந்து கொள்ளவேண்டும். அதனால் சாமானியர்களையும் தர்மாத்மாக்களையும் துன்புறுத்துபவர்களை அரசன் தண்டிக்க வேண்டும்.

இரக்க குணத்தை மனிதன் எவ்வாறு வளர்த்துக் கொள்ளவேண்டும்? யாராவது துன்பத்தில் இருந்தால் அதனைப் பார்த்து பொறுக்கமுடியாமல் வருந்தும் குணத்தின் பெயர் தயை அல்லது இரக்கம். உடனே அவர்களின் துன்பத்தை நாம் செயல்வடிவில் உதவி செய்து ஆறுதல் அளிக்க முயல வேண்டும். அதனால் சிருஷ்டியில் இரக்க குணமும் மிகவும் இன்றியமையாதது.

மேலும் வியாச மகரிஷி கூறுகிறார்;
“உத்தமானாம் ஸ்வபாவோயம் பர துக்கா சஹிஷ்ணுதா !
ஸ்வயம் துக்கம் ச சம்ப்ராப்தம் மன்யதே ஸ்யஸ்ய வார்யதே !!”

“உத்தமர்களின் சுபாவம் எப்படி இருக்குமென்றால் பிறரின் துயர் கண்டு தாள மாட்டார்கள். தாம் துன்பப்படுவதற்கு முன் வருவார்களே தவிர பிறர் துன்பத்தைக் கண்டு பொறுக்க இல்லாதவர்களாக இருப்பார்கள். பிறர் துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொண்டாவது அவர்களின் துன்பங்களை போக்க வேண்டும் என்று விரும்புவர்” என்கிறார்.

அப்படிப்பட்டவர்களுள் சிபிச் சக்கரவர்த்தி நமக்கு உடனே நினைவுக்கு வருகிறார். ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்யத் துணிந்தார். இது போன்ற பலப்பல மகாத்மாக்களின் வரலாறுகள் நம் புராணங்களில் காணப்படுகின்றன. தயையையும் அகிம்சையையும் புராணங்களும் வேதங்களும் போதித்து வருகின்றன.

மேலும் வியாசர் கூறுகிறார், “பிறருக்கு உதவி செய்யும் சுபாவம் மிகவும் தேவை. ஏனென்றால் தயையோடு கூட பிறருக்கு உபகாரம் செய்யும் குணமும் சேர்ந்தே இருக்க வேண்டும். இவ்விரண்டும் ஒன்றோடொன்று வேறுபட்டதல்ல. சிலர் தமக்காகப் படும் சிரமத்தை விட பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று படும் சிரமம் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உத்தமமானவர்கள்”.

மேலும், “பிறருக்கு உபகாரம் செய்யும் விஷயத்தில் சாமர்த்தியமும் வசதியும் இருந்தும் கூட செய்யாமல் இருப்பது மாபெரும் குற்றம்” என்கிறார் வியாசர். அதோடு, “உதவி செய்யாமல் இருப்பதால் வரும் அந்த பாவத்தின் பலனை நரகத்தில் அனுபவிக்க வேண்டிவரும்” என்றும் அவர் எச்சரிக்கிறார்.

உதாரணத்திற்கு ஒருவர் தரித்திரத்தில் உழலுகிறார், ஏழ்மையில் அவதியுறுகிறார். அந்த ஏழ்மையைப் போக்கக் கூடிய செல்வம் இன்னொருவரிடம் இருந்தும் அதைச் செய்யாமல் இருக்கிறார். ஏழைக்கு உதவிய பின்பும் நிறைய செல்வம் மிகுந்திருக்கும் நிலையிலும் கூட அந்த ஏழ்மையைத் தீர்க்காமல் இருக்கும் பட்சத்தில் அது தோஷமாகிறது. ஒருவரால் எழுந்திருக்க முடியவில்லை. சிரமப்படுகிறார். ஆரோக்கியமான இன்னொருவர் அவருக்கு கைகொடுத்து எழுப்பி விடலாம் அல்லவா? உடலில் சக்தி இருந்தும் அடுத்தவருக்கு உதவி புரியாவிட்டால் அது பாவமாக மாறி நரகத்தில் துன்பம் அனுபவிக்கச் செய்யும் என்கிறார் வியாசர். இங்கு இவ்விரண்டு உதாரணங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விதம் இரண்டு வித எச்சரிக்கைகளை விடுக்கிறார் வியாசர்.

இவற்றை கவனமாக தெரிந்து கொண்டு மனிதன் உபகார சுபாவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். உபகார சுபாவமுள்ளவனுக்கு உடனுக்குடன் பலன் தென்படாவிட்டாலும் பரிணாமத்தில் எத்தனையோ பலன்கள் தெரிய வரும். யாரோ ஒருவருக்காக நாம் உதவி புரிந்தால் அவர் நம் உதவியை நினைவில் வைத்துக் கொண்டு எப்போதாயினும் சரி பிரதி உபகாரத்தை நமக்குச் செய்வார். ஏனென்றால் காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அவர் உயர்ந்த நிலைக்கு வளரலாம். அவரின் உதவி நமக்குத் தேவைப்படலாம். அதேபோல் சமுதாயத்தில் கூட உபகார சுபாவத்தினால் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும். அப்போது நமக்கு ஒரு தேவை என்று வரும்போது சமுதாயம் நம்மை கைவிடாமல் ஆதரிக்கும். எனவே உதவும் குணம் இவ்வுலகிலும் மறு உலகிலும் கூட நமக்குத் துணை புரியும்.

இவ்விஷயத்தை வியாசர் மேலும் விளக்கமாகக் கூறுகிறார்.
இந்த பூமி நிலைத்து நிற்பதற்கு நான்கு தூண்கள் உதவுகின்றன. நான்கு தூண்கள் இன்றி எந்த அமைப்பும் நிற்க முடியாது. அதனால் பூமி என்னும் அமைப்பு நான்கு தூண்களை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்த நான்கு தூண்களுக்கும் “புண்ணிய ஸ்தம்பங்கள்” என்று பெயர் கொடுத்துள்ளார் வியாசபகவான். இவை பவித்திரமான தூண்கள். இந்தத் தூண்களால் நாம் பவித்திரமானவர்களாவோம்.

அவை என்னென்ன? 1.தயாளு: – தயை குணமுள்ளவன்.

  1. அமதஸ்பர்ஸ: – கர்வமோ அகம்பாவமோ இல்லாதவன். யாருக்காவது உதவி செய்துவிட்டு கர்வத்தோடு பீற்றிக்கொள்வது ஆபத்தானது. மதம் என்றால் கர்வம் பிடித்திருப்பது. அமதம் என்றால் கர்வம் என்னும் மதம் பிடிக்காதவன். ‘அமதஸ்பர்ஸ:’ என்றால் கர்வம் என்னும் மதம் பிடித்த குணத்தின் ஸ்பரிசம் கூட இல்லாதவான். அதாவது கர்வமோ அகம்பாவமோ துளிக் கூட இல்லாதவன்.

  2. உபகாரி.

  3. ஜிதேந்திரியன். – இந்திரியங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன். இது மிக மிக இன்றியமையாத குணம். இந்த ஒரு நல்ல குணம் இல்லாவிட்டால் எத்தனையோ தர்மங்களை நாம் இழக்க நேரிடும். பொதுவாக நாம் நினைத்துக் கொள்வோம், “நாளை முதல் நல்லவனாக இருப்போம்” என்று. ஆனால் சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது ஒரேடியாக இந்திரியங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடும். வாய்க்கு வந்ததைப் பேசுவோம். கைக்குக் கிடைத்ததை அபகரிப்போம். பின்னர், “ஐயோ! தப்பு செய்து விட்டோமே!” என்று வருத்தப்படுவதால் பிரயோஜனம் என்ன? கையைச் சுட்டுக்கொண்ட பிறகு இலையை பிடித்துக் கொண்டாற்போல என்ற பழமொழி போல் ஆகிவிடும். ஜிதேந்திரிய குணம் என்பது இந்திரியங்களை வெற்றி கொள்ளும் மிக உயர்ந்த லட்சணம். இது ஒரேடியாக திடீரென்று வராது. சாதனையாலும் பயிற்சியாலும் சிறிது சிறிதாக இந்த உயர்ந்த குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு குணங்களும் உள்ளவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அது போன்றவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றுள்ளது.
உண்மையில் நிறைய பேர் பொறுமையோடு இந்திரிய நிக்கிரகம் பெற்றிருப்பதால்தான் உலகில் நன்மை நடக்கிறது. அகம்பாவம் இல்லாதவர்கள் இருப்பதால்தான் உலகில் நல்லது நடக்கிறது. தயாள குணம் கொண்டவர்கள் இருப்பதால்தான் பலருக்கும் அடைக்கலம் கிடைக்கிறது. எனவே பிரபஞ்சத்தை நடத்துபவர்களும் பிரபஞ்சத்தை நிலைநிறுத்துபவர்களும் இந்த நால்வரே!

இத்தனை அழகாக சமுதாயத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமான உயர்ந்த மனிதர்களைப் பற்றி விவரித்துள்ளார் வியாசபகவான். அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர்களால் சமுதாயம் நிரம்பியிருக்க வேண்டும் என்று விரும்புவோம்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories