“நானும் மடத்திலுள்ள பெருச்சாளி தான். மற்றும் சிப்பந்தியும் தான்”
(தனவந்தருக்கு பாடமும்,நெகிழ்வும் ஏற்படுத்திய பெரியவா)
சொன்னவர்-ஜி.ஸ்வாமிநாத சாஸ்திரிகள்
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு தனவந்தருக்குப் பெரியவாளிடம் மிகவும் பக்தி. இளையாத்தங்குடிக்குத் தரிசனத்துக்காக வந்தார். இரண்டு மரப்பெட்டிகள் நிறைய ஆப்பிள் கொண்டு வந்து, பெரியவாள் முன்பாக வைத்தார்.பெரியவாளும் பெட்டிகளைக் கண்ணால் பார்த்துவிட்டு,சற்றைக்கெல்லாம் அவர்களும் எழுந்து உட்புறம் சென்று விட்டார்கள்.
தனவந்தர், அங்கிருந்த சிஷ்யர்களிடம் “பெரியவாளுக்காக வாங்கிண்டு வந்திருக்கேன். மடத்துப் பெருச்சாளிகள் தின்று தீர்த்து விடாதீங்கோ” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதைக் காதில் வாங்கியபடி, பெரியவாள் வந்துவிட்டார்கள்.ஆனால் காதில் விழுந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.
அப்போது அங்கே, நரிக்குறவக் குடும்பங்கள் சில டெண்ட் போட்டுத் தங்கியிருந்தன.
ஆப்பிள் பெட்டி வந்த அன்றையதினம் சாயங்காலம், நரிக்குறவச் சிறுவர்களை அழைத்து வரச் சொல்லி, ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு ஆப்பிளைக் கொடுத்தார்கள். – தனவந்தர் எதிரிலேயே!.
தனவந்தரின் முகத்தில் வருத்தம் தெரிந்தது.
“நானும் மடத்திலுள்ள ஒரு பெருச்சாளி தான்” என்றார்கள், பெரியவாள்.
தனவந்தர் தன் தவற்றை உணர்ந்து விக்கித்துப் போய் நின்றார். பின்னர் மன்னிப்பு கேட்டார்.
இதே தனவந்தர், இன்னொரு சமயம் கேரளாவிலிருந்து ஏராளமான முண்டுகள் (வேஷ்டிகள்) வாங்கி வந்து சமர்ப்பித்தார்.
“இத்தனை, எதுக்கு?”
“ஸ்ரீமடத்து சிப்பந்திகளுக்கு…”
பெரியவாள், அவற்றிலிருந்து ஆறு முண்டுகளை காஷாயத்தில் நனைக்க சொன்னார்கள்.
தனவந்தருக்குக் காரணம் புரியவில்லை.
“ஆஞ்சநேயருக்கு (மடத்திலிருந்த ஒரு துறவி) இரண்டு!.. புதுப் பெரியவாளுக்கு, இரண்டு,எனக்கு,இரண்டு!… நாங்களும் ஸ்ரீமடத்துச் சிப்பந்திகள்தான்!…”
இப்படிப் பெரியவாள் கூறியதும்- அவர்களுடைய எல்லை காண முடியா எளிமையை உணர்ந்து-அவர் நெகிழ்ந்து,மகிழ்ந்து போனார்


