திருப்புகழ் கதைகள்: இலக்கியங்களில் தூது!

Published:

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 308
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தருவர் இவர் – சுவாமி மலை
இலக்கியங்களில் தூது

 இலக்கியங்களில் தூது பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில், அகப்பொருள் நிலையிலும் புறப்பொருள் நிலையிலும் தூதுச் செய்திகள் அமைவதைக் காணலாம்.

            தூது வந்தன்றே தோழி (கலித்தொகை – 32 : 18)

என வரும் அடியை அகப்பொருள் தூதுக்குச் சான்றாகக் கூறலாம். அதியமான் என்ற மன்னனுக்காக ஒளவையார் தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் புறநானூற்றுப் பாடல் (95) ஒன்று உள்ளது. இதைப் புறப்பொருள் சார்பான தூதுக்குச் சான்றாகக் கூறலாம்.

     திருவள்ளுவர் திருக்குறளில் தூது என்ற ஒரு தனி அதிகாரமே அமைத்துள்ளார். இப்பகுதியில் தூது செல்பவர்களின் பண்புகள், தூது செல்பவர்களின் இலக்கணம், தூது சொல்லும் முறை முதலியவற்றைக் கூறக் காணலாம். பக்தி இலக்கியம் ஆகிய திருமுறைகளிலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திலும், தலைவனாகிய இறைவனிடம் அன்பு கொண்ட தலைவி தூது அனுப்புவதாய் அமைந்த பாடல்கள் உள்ளன.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

     காப்பியங்களாகிய கம்பராமாயணம், சீவக சிந்தாமணி ஆகியவற்றிலும் தூதுச் செய்திகள் காணப்படுகின்றன. கம்பராமாயணத்தில் அனுமன் தூது காணப்படுகிறது. சீவகசிந்தாமணியில் சீவகனிடம் குணமாலை கிளியைத் தூது அனுப்பும் செய்தி இடம் பெறுகின்றது. மகாபாரதத்தில் கண்ணனின் தூது; கந்தபுராணத்தில் வீரவாகுத் தேவரின் தூது ஆகியன காணப்படுகின்றன.

     தூது இலக்கிய வகையின் முதல் நூல் நெஞ்சுவிடு தூது என்ற நூல் ஆகும். இதனை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியர் ஆவார். இதன் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு. தமது ஞானாசாரியரிடம் சென்று தமது குறைகளை எடுத்துக் கூறுமாறு, உமாபதி சிவாச்சாரியர் தமது நெஞ்சைத் தூது விடுக்கிறார். இந்நூலைத் தொடர்ந்து பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இப்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட தூது நூல்கள் உள்ளன.

     தமிழில் காணப்படும் தூது நூல்களை அடிப்படையாகக் கொண்டு தூது இலக்கிய வகையின் அமைப்பையும், அதில் இடம்பெறும் செய்திகளையும் காணலாம்.

தூது நூல்களுக்குப் பெயரிடும் முறை

     எல்லாத் தூது நூல்களும் பொதுவாகத் தூது என்ற சொல்லை இறுதியில் பெற்றுள்ளன. சான்றாக நெஞ்சுவிடு தூது என்ற நூலைக் கூறலாம். ஆனால் சோமசுந்தர பாரதியார் இயற்றிய தூது நூல் மட்டும் மாரிவாயில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. மாரி என்றால் மேகம் என்றும் வாயில் என்றால் தூது என்றும் பொருள்படும். மேகவிடு தூது என்பது இதன் பொருள் ஆகும்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

     தூது அனுப்பும் பொருளின் பெயரால் இந்த தூது நூல்கள் பெயர் பெறுகின்றன. சான்றாக, மான்விடு தூது என்ற நூலைக் கூறலாம். இதில் தூது செல்வது மான் ஆகும். சில நூல்கள் தூது பெறும் தலைவன் பெயரையும், தூது செல்லும் பொருளின் பெயரையும் கொண்டு அமைகின்றன. சான்றாக, மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது என்ற நூலைக் கூறலாம். இதில் தூது பெறுவோர் இறைவனாகிய சொக்கநாதர், தூது செல்வது தமிழ் ஆகும்.

     குணமாலை யென்னும் அணங்கு, சீவகன்பால் கிளியைத் தூது விடுத்த செய்தியினைச் சீவகசிந்தாமணிக் காப்பியத்திற் காணலாம். வாசவதத்தையின் பிரிவுத் துயருக்கு ஆற்றாது வையங் காவலனை உதயணன் மான் முதலியவற்றை நோக்கி விரித்துரைத்த கருத்துக்களைப் பெருங்கதை பேசுகிறது. நளனிடமிருந்து தூது சென்ற நல்லன்னம், தமயந்தியைக் கண்டு நளனின் நல்வியல்பெல்லாம் சொல்லி இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், ஹம்ச சந்தேசம் போன்ற நூல்கள் உள்ளன.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img