திருப்புகழ்க் கதைகள் பகுதி – 341
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
கோங்கிள நீரிளக – திருவேங்கடம் பாண்டவர் தேர்கடவும் நீண்ட பிரான் 3
கர்ணனை நாம் பார்த்தன் என அழைக்கலாகாதா? அவனும் ப்ருதையின் மகன் தானே? இதனை சங்க இலக்கியவழி ஆராய்ந்து பார்க்கலாம். சங்க இலக்கியம், அண்ணன் தம்பிகளுள் தம்பி அறிவாளியாக இருந்தால், சமூகம் அண்ணனை ஒதுக்கி தம்பியை ஆராதிக்கும் என்கிறது. சரி தருமனுக்கு என்ன குறை? தான் தாங்கும் தருமத்தால் பூமியில் சக்கரம் படாமல் ஓடும் தேரைக்கொண்டவன் தருமராசன். ஆனால் அசுவத்தாமா எனும் யானை செத்துவிட்டது என்று அவன் சொன்னபோது, அவனது தேர் தரைதொட்டு ஓடத்தொடங்கியதை பாரதத்தில் நாம் அறிகிறோம். ஈன்று புறம் தருதல் எந்தைக்குக் கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே எனும் சங்க இலக்கியச்சாயலில் நின்று எவன் சான்றோன் ஆனானோ அவனே அக்குலத்தின் வழியாக அறியப்படுகிறான். அர்ச்சுனனின் வில்லில் நாணேற்றும் ஒலிதான், பாரதப்போரின் வெற்றிச்சங்க முழக்கத்தின் மூலம். தன்மகனைச் சான்றோன் எனக்கேட்கும் வாய்ப்பு குந்திக்கு அர்ச்சுனனைப் பெற்றதன் மூலம் மட்டும் கிடைத்திருக்கும். இத்தனைக் காரணங்களால் அர்ச்சுனன் மட்டும் பார்த்தன் என்று அறியப்படுகிறான். அதில் பெரும் நியாயமும் இருக்கிறது.
இனி சாரதிக்கு வருவோம். அர்ச்சுனனுக்கு தேரோட்டிய காரணத்தால் இந்த பெயர் வந்திருக்கிறது என்றால், அர்ச்சுனனுக்கு தேரோட்டிய அனைவருமே பார்த்தசாரதி தானே? விராடபருவத்தில் ஒருவருட காலம் திருநங்கையாக பிருகன்னளை எனும் பெயருடன் அர்ச்சுனன் வாழ்ந்த காலத்தில், சைரந்தரி என்ற பெயருடன் இருந்த பாஞ்சாலியை சீண்டினான் என்பதற்காக கீசகன் எனும் மல்லனை கொலை செய்துவிடுகிறான் வீமன். கீசகனைக் கொலைசெய்யும் வன்மை வீமனுக்கு மட்டுமே உண்டு என்பதை அத்தினாபுரம் அறிந்திருந்த காரணத்தால், பாண்டவர்களின் இருப்பிடம் அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது.
அதனால் கௌரவர்கள் விராட நாட்டிற்கு வந்து ஆநிரை கவர்ந்து செல்ல, அவர்களைப் பிடிக்க விராடநாட்டு இளவரசனான உத்தரகுமாரன் செல்கிறான். இந்த உத்தரகுமாரனுக்கு தேரோட்ட பிருகன்னளையாக இருக்கும் அர்ச்சுனன் செல்கிறான். பாதிவழியில் தான் யார் என்பதை அர்ச்சுனன் சொல்லி, உத்தரகுமாரனை தேரோட்டச் சொல்லிவிட்டு தங்களது தெய்வீகபாணங்களை எடுத்துக்கொண்டு போர் செய்கிறான். இப்போது நடக்கும் இந்தப்போரில் அர்ச்சுனனுக்கு தேரோட்டியவன் உத்தரகுமாரன். ஆக இவனும் பார்த்தசாரதி தானா? மட்டுமல்லாமல் அர்ச்சுனன் நகர்வலம் வந்தபோது, அவன் ஒவ்வொரு திசையிலும் சென்று போர்கள் செய்தபோது என்று பலர் அவனுக்கு தேரோட்டி இருந்தனர். அவர்கள் எல்லாம் கூட பார்த்தசாரதிகள் தானா? இல்லையே. ஏன் கண்ணன் மட்டும் பார்த்தசாரதி?
ஏற்கனவே சாரதி எனும் விளக்கத்தில் நான் அப்பெயருக்கான தொழிலில் திறமையான தேரோட்டி என்று சொல்லி இருக்கிறேன். உத்தரகுமாரன் தேரோட்டியபோது பெரும் சாகசங்கள் செய்யவில்லை. வெறுமனே ஒரு வண்டியோட்டியாக அவன் இருந்திருக்கிறான். அதைப்போலவே அவனது பயணங்களுக்கு தேரோட்டிய மனிதர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் கண்ணன் அப்படியில்லை. திறமையாக தேரோட்டுகிறான். வீரன் மயங்கும் வேளையில் கீதை சொல்லி அவனைப் போருக்குத் தயார்ப் படுத்துகிறான். கண்ணனைப் போன்ற ஒரு தேரோட்டி கிடைத்திருக்காவிட்டால் அர்ச்சுனன் சோர்ந்து படுத்து, போர்க்களம் விட்டு ஓடியிருப்பான்.
அதுமட்டுமல்ல. கண்ணனே கூட அஞ்சி, குந்தியை தூது அனுப்பி, நாகபாணத்தை ஒருமுறைக்கு மேல் ஏவக்கூடாது என்று கர்ணனிடம் சத்தியம் வாங்கும் அளவுக்கு வலிமை வாய்ந்த பாணத்தில் இருந்து அர்ச்சுனனைக் கண்ணனே காக்கிறான். தேரை நான்கு அங்குலம் தேருக்குள் அழுத்தி, கழுத்துக்கு வந்த பாணத்தை மௌலியை மட்டும் எடுத்துச்செல்ல வைக்கும் அசகாய செயலைச் செய்தவன் கண்ணனே. தேரில் இக்காலத்து அதிர்வுதாங்கிகள் (shockabsorber) மாதிரி ஏதேனும் அந்தத் தேரில் இருந்திருக்கக்கூடும். வெறுமனே தேரோட்டியாக இல்லாமல் அந்த போரையே நடத்திய சாரதியாக கண்ணன் இருக்கிறான். வெறி கொண்டு போரிட்டுக்கொண்டிருந்த துரோனாச்சாரியாரை கண்ணனே திட்டம் வகுத்து கொலை செய்கின்றான். பீஷ்மரைக் கொல்ல சிகண்டியை முன்னிறுத்தும் யோசனையை அவனே வகுக்கிறான். கர்ணன் இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தைப் பயன்படுத்த கடோத்கசனைப் போரிடச் சொல்லுகிறான். ஆக பார்த்தனுக்கு மட்டுமன்றி போரின் பெரும் பாகத்தில், அதன் சாரதியாக இருந்து தர்மத்துக்காக பாடுபட்டவன் கண்ணனே.
ஆக, பார்த்தன் என்ற பொதுப்பெயர் முழுக்கவும் அர்ச்சுனனுக்கும், பார்த்தசாரதி என்ற தொழிற்பெயர் முழுக்கவும் கண்ணனுக்கே பொருந்தி வரும் காரணத்தால், பார்த்தசாரதி என்ற பெயர் மாபாரதத்தின் கண்ணனுக்கே பொருந்தும்.