கட்டுரையாளர்;ரா.கணபதி தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
“கண்டிராமாணிக்கம் செட்டியார்” என்று அவரை வெளியுலகில் சொல்வார்கள். “ஆனந்தம் செட்டியார்” என்றாலே மடத்தில் அதிகம் பேருக்குத் தெரியும். தொழிலை விட்டு, காஷாயம் கட்டிக்கொண்டு பெரியவரிடம் வந்து விட்டார்.”ஆனந்தம்,ஆனந்தம்” என்று ஓயாமல் சொல்லிக் கொண்டு பெரியவாளைத் தரிசித்த வண்ணமிருப்பார்.மடம் போகிற இடத்துக்கெல்லாம் தாமும் போய் பெரியவாளுக்குக் கட்டி கட்டியாகச் சாம்பிராணியும்,கர்ப்பூரமும் ஏற்றிக் காட்டிக் கொண்டேயிருப்பார். ஒருநாள் பெரியவாள் அவரிடம் திருவாலங்காட்டுக்குப் போய் இருக்கும்படி ஆக்ஞாபித்தார். ஆனந்தம் செட்டியாரும் அவ்விதமே சென்றார். சிறிது காலத்திலேயே அங்கிருந்து “நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தத்தை”ச் சென்றடைந்து விட்டார். ‘அவரது அந்திம சமயத்தை முன்பே அறிந்த பெரியவாள் அவரைக் குறிப்பாக திருவாலங்காட்டுக்கு அனுப்புவானேன்?” என்றால், “அவர் காரைக்கால் அம்மையார் குலம். காரைக்காலம்மையாருக்குத் திருவாலங்காட்டில்தான் முக்தி” என்கிறார்கள். ஸ்ரீ பெரியவாள், அங்கே அவளது ஜீவ சாந்நித்தியம், தன் குல வழித் தோன்றலிடம் விசேஷமாகச் செயற்பட்டு, அதன் கர்ம பாரத்தைத் தீர்த்து வைத்திருக்குமோ? நாம் வாழ்வதற்குப் பொருத்தமான இடம் பார்க்கிறோம். பெரியவாள் வாழ்வை முடிப்பதற்குக்கூட இடப் பொருத்தம் செய்து கொடுக்கிறார்!


