
மகரஜோதி 2026- சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை மகரஜோதி தரிசனம் நடக்கிறது.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுகளுடன் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. இதையடுத்து அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இதையடுத்து நாளை டிச 31-ந் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பகல் 11.30 மணிக்கு நெய்யபிஷேகம், 12.30 மணிக்கு உச்ச பூஜை போன்றவை நடைபெறும். பின்னர் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மிக முக்கியமான நிகழ்ச்சியாக அடுத்த ஆண்டு 2026ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு அய்யப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும்.
முன்னதாக மகரவிளக்கையொட்டி ஐய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். 11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடக்கிறது. மகரவிளக்கின் முன்னோடியாக 12, 13-ந் தேதிகளில் சன்னிதானத்தில் சுத்தி கிரியை பூஜைகள் நடைபெறும்.
ஏற்பாடுகளை திருபாங்கூர் தேவசம் கூடு தலைவர் ஜெயக்குமார் சபரிமலை தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர் சபரிமலையில் இன்று நடை திறந்த முதல் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலைக்கு நடை பாதையில் நடந்து சென்றனர் நடைபாதை முழுவதும் இருமுடி கட்டிய பக்தர்களாகவே தெரிந்தது பம்பை நதியின் ஓரளவு குளிப்பதற்கு தண்ணீர் வருகிறது பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி சுகாதார வசதி பசு போக்குவரத்து வசதி உட்பட அனைத்து வசதிகளையும் கேரளா அரசு செய்துள்ளது




