108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் ஒரு தலம்!

Published:

எழு வகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால் தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார். மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம். மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு
தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும். அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.

வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.

‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்’
என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்.

‘நல்வினை’ என்று அவர் கூறியிருப்பதை கவனியுங்கள். வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது.
நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது. எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள்
அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது.
இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான்.

Related articles

Recent articles

spot_img