
வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 1 )
அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே , பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான் ! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் !!
” வரம் வரய தஸ்மாத் த்வம் யதாபிமதமாத்மந :
ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே ”
மனிதர்கள் கண்ணால் காணக் கூடிய நிலைமையை தற்பொழுது நான் அடைந்துள்ளேன் ! (அவர்களுக்கும் ) எல்லாம் கை கூடப் போகிறது .. உனக்கு வேண்டியதைக் கேள் ! என்றான் இறைவன் ..
கண்ணெதிரே கரிகிரிக் கண்ணனைக் கண்ட கமலத்தயன், பணிவான குரலில் பரமனைப் பார்த்துப் பேசினான் ! ஐய ! வரமே என்ன வரம் வேண்டும் என்று கேட்பது விந்தையாகத் தான் உள்ளது !
எதையும் நான் என் முயற்சியால் ஸாதித்திருப்பதாக நினைக்கவில்லை .. நின்னருளல்லதெனக்குக் கதியில்லை ! அதுவே உண்மை !
பெருமானே ! அநந்த, கருட , விஷ்வக்ஸேநர் போன்ற மஹாத்மாக்கள் காணத் தக்க உன் வடிவை , நான் காணப் பெற்றேனே ! இதை விட வேறு பலன் ; வேறு வரம் ஏதேனும் உண்டோ ?!
என் பதவி நிலையற்றது. உன்னுடைய ஸ்ருஷ்டியில் எத்தனை எத்தனை ப்ரஹ்மாண்டங்கள் உள்ளனவோ ; அங்கங்கெல்லாம் எத்தனையெத்தனை பிரம்மாக்கள் உள்ளனரோ ?; யாரறிவார் ?
ஏதோ ஒரு ப்ரஹ்மாண்டத்தில், ஒரு ஸத்ய லோகத்தில் உனதருளால் தற்சமயம் நான் பிரமன் ! .. கங்கையின் மணலைப் போலே ; இந்திரன் பொழியும் மழையின் தாரைகள் போலே , எத்தனையெத்தனை பிரம்மாக்கள் இந்தப் பிரம பதவியில் இருந்துள்ளனர் என்பது எண்ணக் கூடியதன்று !!
என்னமுதினைக் கண்ட கண்கள் ; மற்றொன்றினை விரும்பாது !
உன்னிடத்தில் சொல்ல விரும்புவது ஒன்று தான் !! நீர் என்றென்றும் இங்கேயே, இக்கச்சியிலேயே எழுந்தருளியிருக்க வேண்டும் !!
” வைகுண்டே து யதா லோகே யதைவ க்ஷீரஸாகரே | ததா ஸத்யவ்ரத க்ஷேத்ரே நிவாஸஸ்தே பவேதிஹ ||
ஹஸ்திசைலஸ்ய சிகரே ஸர்வ லோக நமஸ்க்ருதே | புண்யகோடி விமானேஸ்மிந் பச்யந்து த்வாம் நராஸ் ஸதா || ”
உனக்குப் பிடித்தமான வைகுந்தத்தைப் போலே; திருப்பாற்கடல் போலே ; இங்கும் , இந்த ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தில் , அனைவரும் வணங்கும் இத் திருவத்தி மாமலையில் , புண்யகோடி விமானத்தில் , உம்மை மனிதர்கள் எப்போதும் வணங்கட்டும் !
“அம்மா ! அடியேன் வேண்டுவதீதே ” என்று விண்ணப்பித்தான் பிரமன் !
எம்பெருமானும் ; பிரமனே ஸத்யமாகச் சொல்கிறேன் , அனைவருக்கும் காட்சி அளித்துக் கொண்டு , எப்பொழுதைக்குமாக இங்கேயே இருக்கப் போகிறேன் !
ஸந்தோஷம் தானே !
இந்த ஆதி யுகத்தில் , நீ கண்டிட வந்து தோன்றிய நான் ; இனிவரும் யுகங்களிலும் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன !
அவற்றைச் சொல்கிறேன் கேள் ! என்று தொடங்கினான்..
அவைகளை நாமுமறிய அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !
***
வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 2 )
திருவத்தி மாமலையில் என்றென்றும் நின்று ” பின்னானார் வணங்கும் சோதியாய்” பேரருளாளன் திகழ்ந்திட வேண்டும் என்று பிரமன் இறைஞ்சிடவும் , அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினான் பகவான் !
பிரமனுக்குக் காஞ்சியிலேயே தங்கிவிட ஆசை ! இந்த ஆரமுதைப் பருகிக் களித்தவன் ; மீண்டும் ஸத்யலோகம் செல்ல மனமில்லாதவனாய் , “வேழமலை வேந்தனிடம் ” நித்தியமும் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இங்கேயே ( காஞ்சியிலேயே ) தங்கிவிடும் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் !
” நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் ” ( ந்யாஸ தசகம் ) என்றபடி , காஞ்சியில் தேவப்பெருமாள் திருவடியிணைகளில் கைங்கர்யத்தை வேண்டினான்..
பகவானின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது.
நான்முகனே ! உன் பக்திக்கு மெச்சினோம். ஆனால் நீ என் கட்டளையின் படி பிரம பதவியில் அமர்ந்து , பணிகளைச் செய்து வருகின்றாய் ! நீ அங்கில்லாமல், ஸத்யலோகத்தில் உள்ளோர் , உன்னைக் காணும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீ அங்கே செல்வதே என் விருப்பம் ! உன்னுடைய தூய்மையான மனதில் என்றென்றும் நானுள்ளேன் ! அஞ்ச வேண்டாம் . விரைந்து உன்னுலகம் செல் !
வேள்வியில் நீ நடந்து கொண்ட விதமும் , உன் அன்பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன ! வேள்வியில் ஹவிர்பாகங்களை தேவர்கள் மூலமாக அல்லாது நேரடியாக எனக்கே தந்தாய் !
தேவர்கள் அதனால் வருத்தமுற்று உன்னை வினவின போது ; நீ சொன்ன பதில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று !
பொதுவாக யாகங்களில் பற்பல தேவர்களுக்கு அவி உணவு ( ஹவிர்பாகம் ) வழங்கப்படும் ! அவ்வகை யாகங்கள் பெரும்பாலும் அற்ப சுகங்களை விரும்பியே செய்யப்படும். இந்த யாகமோ , எப்பயனையும் விரும்பிடாது ; பயனளிப்பவனையே வேண்டிச் செய்யப்படுவதொன்று .. ஆதலால் பரமாத்மாவிற்கே ஹவிஸ்ஸு நேரடியாக ஸமர்ப்பிக்கப்படும் என்று சொல்லி , அவ்விதமே நீ நடந்து கொண்டாய் !
உன்னுடைய இந்தத் தெளிவிற்கு எமது பாராட்டுகள் என்று வரதன் அருளினான் !
இனிவரும் காலங்களில் தனக்குக் காஞ்சியில் செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளதாக , பேரருளாளன் சொல்லியிருந்தானே ! அது என்ன என்று அறியும் ஆவலில் , நான்முகன் அரியை வினவினான் !
சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தான் இறைவன்..
முதல் யுகமான இந்த க்ருத யுகத்தில் நீ என்னைப் பூசித்தது போல், அடுத்ததான திரேதாயுகத்தில் கஜேந்த்ரன் என்னைப் பூசிக்க உள்ளான் !
த்வாபர யுகத்தில் , முன்பு உன்னால் சபிக்கப்பட்ட ப்ருஹஸ்பதி , இன்னமும் சில சாபங்களின் காரணத்தால் , என்னைத் தொழுதிட இங்கு வருவார் ..
( ப்ருஹஸ்பதியும் பிரமனும் பரஸ்பரம் சபித்துக் கொண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும் ! )
கலியுகத்தில் ஆதிசேஷன் என்னை அர்ச்சிப்பான்..
நான் என்றென்றைக்குமாக இந்த அத்திகிரியில் நின்று கொண்டு வரந்தரு மாமணி வண்ணனாய் , ஸநாதந தர்மத்தை வாழ்வித்துக் கொண்டு , ஸஜ்ஜநங்களைக் ( நல்லவர்களை ) காத்துக் கொண்டு , ப்ருகு புத்ரியாய்த் தோன்றிடும் பெருந்தேவியுடன் கூடி, ” பெருந்தேவி மணாளனாய் ” , கலியுக வரதனாய், கண் கொடுப்பவனாய் , அடியவர்களுக்கு ஸுலபனாய் நின்று ரக்ஷித்துக் கொண்டிருப்பேன் !
எனவே அன்றோ மாமுனிகளும் , “அத்யாபி ஸர்வபூதனாம் அபீஷ்ட பல தாயினே | ப்ரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்” || என்றருளினார் !
( இப்பொழுதும் , அனைவருடைய கண்களுக்கும் இலக்காகிக்கொண்டு , வேண்டிய வரங்களைத் தந்து கொண்டு , அடியவர் துன்பங்களைப் போக்கிக் கொண்டிருப்பவனான தலைவனுக்கு என் மங்களங்கள் உரித்தாகட்டும் )
நீ ( பிரமனே ) சித்திரை – ஹஸ்தத்தில் தோன்றிய எனக்கு , வைகாசி – ச்ரவணத்தன்று அவப்ருதமாகக்( தீர்த்தவாரி ) கொண்டு, விசேஷமாக , மஹோத்ஸவமான ப்ரஹ்மோத்ஸவத்தை நடத்தி வைப்பாய் ! என்றான் !!
பிரமனும் அவ்விதமே செய்வதாக விண்ணப்பித்து ; நல்லவிதமாக உத்ஸவத்தை நடத்தி முடித்து, தன்னுலகம் மீண்டான் !
வரதன் நினைத்துக் கொண்டான் !!
பிரமனுக்குக் கலியுகத்தில் ஆதிசேஷன் பூசிக்கப் போகிறான் என்கிற அளவிற்குத் தான் சொன்னேன் !!
என் திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதனை நானேயன்றோ அறிவேன் !!
ஸத் ஸம்ப்ரதாயமான ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்க நம்மாழ்வாருக்கு ” மயர்வற மதிநலம் ” அருள வேண்டும் ! பூதத்தாழ்வார் என் கருட சேவையைக் கொண்டாடிப் பாடிட நான் கேட்டின்புற வேண்டும் ..
திருமங்கை மன்னன் சோழவரசன் சிறையில் , “வாடினேன் வாடி ” என்று வாடிப்போகாதிருக்க , அவருக்குச் செல்வம் தரவேண்டியுள்ளது !
விந்திய மலைக் காடுகளிலிருந்து என் குழந்தை இராமானுசனைப் பெருந்தேவியுடன் கூடி ரக்ஷிக்க வேண்டியுள்ளது !
ஆளவந்தார் என்னை வணங்கி, பூதபுரீசர் யதிராஜராம் எம் இராமானுசனை “ஆமுதல்வனிவன் ” என்று அனுக்ரஹிக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது !
அமுதினுமினிய சாலைக் கிணற்றுத் தீர்த்தத்தை இராமானுசர் தர, நான் ஆசை தீரப் பருக வேண்டியுள்ளது !
திருக்கச்சி நம்பிகளிடம் எத்தனை பேச யோசித்திருக்கிறேன் ! முக்கியமாக இராமானுசருக்காக ஆறு வார்த்தைகள் பேச வேண்டுமே !
திருக்கச்சி நம்பி திரு ஆலவட்டக் காற்றின் இனிமை சுகம் காணக் காத்திருக்கிறேன் நான் !
இராமானுசரை அரையருடன் திருவரங்கத்திற்கு அனுப்ப வேண்டும் ! கூரேசனார் வரதராஜஸ்தவம் பாட நான் கேட்டிட வேண்டும் !
நடாதூரம்மாள் பால் தரப் பருகிட வேண்டும் !
பிள்ளை லோகாசார்யராய் நானே தோன்றிட வேண்டும் ! அஷ்டாதச ரஹஸ்யம் அருளிட வேண்டும் !
ஈட்டினையும் , ஸ்ரீ பாஷ்யத்தினையும் காத்து வளர்த்திட வேண்டும் !
என்னையே உயிராய்க் கொண்டும் , ச்வாஸமாகக் கொண்டும் வாழப்போகும், வேங்கடேச கண்டாவதாரர் வேதாந்த தேசிகனை அநுக்ரஹிக்க வேண்டும் !
முக்யமாக , வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாத பெருமையாக , உபய வேதங்களை ( ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட ( தமிழ் ) வேதங்கள் ) என்றென்றும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் !
“அருளிச்செயல் பித்தன் ” என்று பெயர் வாங்கிட வேண்டும் !
இத்தனை பெருமைகள் உண்டானால் கண் த்ருஷ்டி படுமே எனக்கு ??!!!!
பொங்கும் பரிவுடையவர் ஒருவர் மங்களாசாசன ச்லோகங்கள் பாடினால் நன்றாயிருக்குமே !!
விசதவாக் சிகாமணிகள் , எம்பெருமானாரின் புனரவதார பூதர் மாமுனிகள் பரிந்து மங்களாசாசன ச்லோகங்கள் பாடப் போகின்றார் ! அதனைக் கேட்க வேண்டும் !!
மொத்தத்தில் “ஸம்ப்ரதாயப் பெருமாள்” என்று நான் பெயரெடுக்க வேண்டும் !!
பேரருளாளன் சிந்திக்கலானான் !!
எத்தனையெத்தனை ஆசைகள் எனக்குள்ளே !!
க்ருதயுகத்திலேயே திட்டமிட்டு , கலியுகத்தில் அவன் ( வரதன் ) பெற்ற பெருஞ்செல்வங்கள் இவை !!
இவையனைத்தையும் சிந்தித்தபடிச் சிரித்தான் பேரருளாளன் !
இக்காரணங்கள் அன்று பிரமன் அறியாதது !! இன்று நாம் அறிந்திருப்பது !!!!
என்னே வரதனின் தனிப்பெருங்கருணை !!
வரதன் வந்த கதையே மற்ற கதைக்கெல்லாம் விதை !!
எழுதியும் , வாசித்தும் போந்த நாமே பாக்கியசாலிகள் !!
” நமக்கார் நிகர் நீணிலத்தே ” என்று அனுஸந்தித்து நிற்போம் !!
– முற்றும் –
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

With his Thiruttagappanaar (in the framed photo )




