spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆலயங்கள்செங்கோட்டை அருகே முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ..

செங்கோட்டை அருகே முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ..

FB IMG 1666620833275


தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள புகழ்பெற்ற முருகப்பெருமான் குடிகொண்டுள்ள கோயில் திருமலைக்கோயில் ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இங்கு இன்று முதல் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா துவங்கி பத்து நாட்கள் நடைபெறும்.

திருமலைக்கோவில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தென்காசி தாலுக்காவில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.பண்பொழி என்ற இடத்தில் நிலைகொண்டுள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.

FB IMG 1666620781541

FB IMG 1666620851794

இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர். மலைமீது திருமலைக்காளி உள்ளார்.

“ ஈழநாட்டு மாதோட்டந் தென்னாடு ராமேச்சுரம்
சோழநாட்டுத் துருத்தி நெய்த்தானந் திருமலை
ஆழியூரன நாட்டுக்கெல்லாம் அணியாகிய
கீழையில்லாரனார்க்கிடம் கிள்ளி குடியதே.

இந்த ஆலயத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் முருகன் ‘திருமலை முருகன்’ என்றும் ‘திருமலை முத்துகுமாரசுவாமி’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் பெயர் இவ்வாறு அமைந்துள்ளதால், இங்கே காணப்படும் மக்களில் பலர் ‘திருமலை’ என்ற பெயருடன் காணப்படுகிறார்கள். இக்கோவில் வளாகத்தில் ‘திருமலை அம்மனுக்கான’ ஒரு சன்னதியும் நிலை கொண்டுள்ளது. இந்த மலைக் கோவிலைச் சுற்றி நிறைய தென்னந்தோப்புகள் மற்றும் சிறிய கிராமங்கள் சூழ்ந்துள்ளதால், மலை உச்சியில் இருந்து பார்க்கும் காட்சிகள் மிகவும் அற்புதமானதாக காணப்படுகிறது

தல வரலாறு:

முன் காலத்தில் திருமலைக்கோயிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. இங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகளைச் செய்து வந்தார். ஒருநாள் நண்பகல் பூஜையை முடித்து விட்டு, ஓய்வுக்காக ஒரு புளியமரத்தடியில் படுத்திருந்தார். அப்போது, முருகப்பெருமான் கனவில் எழுந்தருளி, “பட்டரே! இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்றார். அதன்படியே பந்தளத்தை ஆண்ட அரசருக்கு தகவல் தெரிவித்த பூவன்பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் என்பது செய்தி.

வரலாற்றுச் சிறப்பு :

பூவன் பட்டர் என்ற திருமலைக்காளி கோயில் பூசாரியின் கனவில் திருமலைமுருகன் தோன்றி, தான் அச்சன்கோயிலுக்குச்செல்லும் வழியில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும், தான் இருக்கும் இடத்தைக் கட்டெறும்பு ஊர்ந்து சென்று காட்டும் என்றும் கூறினார்.இது பந்தள மகாராஜாவிற்குத் தெரிவிக்கப்பட்டது.சேரமன்னரான பந்தளமகாராஜாவும், பூவன்பட்டரும் கோட்டைத்திரட்டிற்கு வந்து கட்டெறும்பு ஊர்ந்து சென்று வழிபட்ட மூங்கில் புதருக்குள்ளிருந்த முருகப்பெருமானை எடுத்தனர்.அவர்கள் முருகப்பெருமானைக்கொண்டு வந்து குன்றின் உச்சியில் ஸ்தாபகம் செய்தனர்.முருகப்பெருமான் குன்றின் மீது எழுந்தருளி பாலசுப்பிரமணியனாக காட்சி தருகிறார்.

இலக்கியச் சிறப்பு:

பேராசிரியர் கணபதிராமன் அவர்கள் ஆய்அண்டிரன் ஆண்ட மலையான் கவிரமலை இதுவென்றும்,சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது இக்குன்றமே என்றும்,கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள் என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் திருமலைக்கோயில் வரலாற்றை எழுதியுள்ளார்.அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.தண்டபாணி சுவாமிகள் முருகன் மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார். கவிராசபண்டாரத்தையா என்னும் புலவர்பெருமான் திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ், திருமலையமக அந்தாதி போன்ற நூல்களைப் பாடியுள்ளார். திருமலைமுருகன் குறவஞ்சி,திருமலை முருகன் நொண்டி நாடகம்,திருமலை கறுப்பன் காதல் போன்ற நூல்களும் உள்ளன.திருமலை முருகன் அந்தாதி திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம்,திருமணிமாலை,திருத்தாலாட்டு போன்ற நூல்களும் இம்முருகப்பெருமான் புகழ் பாடுகின்றன.

முருகப்பெருமானை
மகனாக கொண்ட சிவகாமி அம்மையார்:

திருமலை குமரனை, தனது குழந்தையாக எண்ணி, நாள்தோறும், ஏன் நாழிகை தோறும் அவருக்கு தொண்டு செய்து, பல திருப்பணிகளை செய்து நற்பேறு பெற்றவர், சிவகாமி பரதேசியம்மாள்.

பண்பொழி மலை அடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டலில் அடங்கி அருள்தரும் அற்புத பெண் சித்தரான இவரின் அற்புதங்கள் மிகச்சிறப்பானவை. பெண் சாது ஒருவர் அடங்கிய இடத்தில் அருள் தேடினால், அங்கு பல நூறு மடங்கு அருள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

திருமலை குமரன் திருக்கோவில் சிறப்பாகவும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு சிவகாமி பரதேசியம்மையார் தான் காரணம் என்றால் மிகையல்ல. பண்பொழி திருமலை முருகனை பற்றி பேசும் போதெல்லாம், சிவகாமி பரதேசியம்மையாரை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. செல்வச் செழிப்பாக பிறந்து வளர்ந்து, அனைத்தையும் துறந்து, முருகப்பெருமானுக்காக பரதேசி வேடம் பூண்டு, அருளாட்சி புரிந்தவர் அந்த பெண் சித்தர். பண்பொழி என்பது மிகவும் விசேஷமான ஊர்.

FB IMG 1666620843515

இவ்வூரில் தான் அருணகிரிநாதருக்கு பண் (பாடலை) பொழிய ஆசி வழங்கினார், முருகன். எனவே இத்தலம் ‘பண்பொழி’ எனப் பெயர் பெற்றது. இந்நகருக்கு அருகாமையில் உள்ள பெரும் ஊர் ‘அச்சன் புதூர்’. இவ்வூரில் பெரும் நிலக்கிழராக வாழ்ந்து வந்தவர் கங்கை முத்து தேவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு பெரும் நிலக்கிழாரான சிவகாமி அம்மையாரை மணந்தார்.

மேற்குதொடர்ச்சி மலையில் பல நூறு ஏக்கர் நிலங்களை தன்னகத்தே கொண்டவர்கள் இவர்கள். தங்களின் சொத்தை பராமரிக்க பல வேலையாட்களை வைத்திருந்தனர்.

எல்லா செல்வமும் அவர்களிடம் இருந்தும், குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர்கள் இருவரும் மன அமைதி இன்றி தவித்தனர். இதையடுத்து அவர்கள் இறை சேவையில் இறங்கினர். பாத யாத்திரிகர்களுக்கு திருப்பணி செய்தனர். அச்சன்புதூர் அருகில் பல கல் மண்ட பங்களை அமைத்து, அதில் வழிபோக்கர்கள் தங்கி செல்ல வழிவகுத்தனர். தெய்வ பக்தி, அடியார் களை அன்புடன் உபசரிப்பது முதலான அறச் செயல்களை கணவரின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக செய்து வந்தார் சிவகாமி பரதேசியம் மையார். நெடுவயல் கிராமத்திலும் அடியார்கள் தங்கி செல்வதற்காக, கல் மண்டபத்தைக் கட்டிவைத்தார்கள். அந்த மண்டபத்தில் தான் ‘வாலர் மஸ்தான்’ எனும் இஸ்லாமியத் துறவி ஒருவர் வந்து தங்கினார். அவர் தவ வலிமையில் சிறந்தவர். சித்து விளையாட்டுகளிலும் வல்லவர். தன் இடத்தைத் தேடி வந்த அந்தத் துறவிக்கு, அன்போடு பணிவிடை செய்து அன்னமிட்டு உபசரித்து வந்தார், சிவகாமி பரதேசிம்மையார்.

இந்த செயல் உறவுக்காரர்களுக்கு பிடிக்க வில்லை. ‘குழந்தை குட்டி இல்லை. இருக்கிற சொத்துகளை இப்படி வாரி இறைத்தால், இறுதியில் பிச்சைதான் எடுக்கவேண்டும். இருக்கும் சொத்து களை நமக்காவது கொடுத்தால், நம் பிள்ளைக் குட்டிகளாவது நல்லா இருக்கும். அதையும் செய்யாமல் இப்படி பணத்தை வர்றவனுக்கும், போறவனுக்கும் வாரிக் கொடுக்கிறார்களே’ என அங்கலாய்த்தனர். அதோடு நில்லாமல், சிவகாமி பரேதசியம் மையார் மீது வீண் பழி சுமத்தி வீட்டோடு உட்கார வைத்து விடவும் முடிவு செய்தனர். அதன்படி சிவகாமி பரதேசியம்மையாரின் கற்பு நெறி வாழ்க்கைக்கு களங்கம் கற்பித்தனர். இதைப் பொறுக்க முடியாத அம்மையார், ‘நான் கற்புநிலை தவறாதவள், களங்கமற்றவள் என்றால், நான் தெருவின் மேலக்கோடியில் திரும்பும் முன், என்னை பழித்து பேசியவரின் வீட்டில் இடி விழட்டும்’ என்று சாபமிட்டார். அதன் பின் அங்கிருந்து அவர் கிளம்பினார்.

அவர் சாபமிட்ட காலம் கோடைகாலம். சுட்டெரிக்கும் வெயில் காலை 9 மணிக்கே வந்து தெருக்களை வறுத்தெடுத்தது. ஆனாலும் அம்மை யின் சபதம் ஏற்று, வருண பகவான் வெகுண்டு எழுந்தான். திடீரென்று மின்னலும், இடியும் தோன்றியது. மறு நொடியே அம்மையாரை பற்றி தவறாக பேசியவர் வீட்டில் இடி விழுந்தது. எனவே அவரைப் பற்றி புறம் பேசியவர்கள், அவரது சக்தியைக் கண்டு அமைதி அடைந்தனர். பலரும் அவரை வணங்கத் தொடங்கினர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையின் மனமோ அமைதி இன்றி தவித்தது. ‘தனக்கு குழந்தை இல்லாதது தானே பெரும் குறை. இது பற்றி மஸ்தானிடம் கேட்போம்’ என கல் மடத்துக்கு கணவருடன் சென்றார்.

மஸ்தான், ‘தாயே! நீயோ தெய்வப்பிறவி. உனக் கென்று குழந்தைபேறு ஏது? உனக்கு தென்திருமலை அடிவாரத்தில் அகத்தியருக்கே தமிழ் போதித்த முருகக் கடவுளே மகனாய் கிடைப்பான்’ என அருளினார். ‘ஐயா! என் குழந்தை எங்கே இருப்பான்? எனக்கு எப்படி கிடைப்பான்?’ என சிவகாமி அம்மையார் கேட்டார். ‘கவலைப்படாதே.. பண்பொழி மலை அடிவாரத் தில், நீ செல்லும் இடத்தில் ஒரு பொட்டல் காடு உண்டு. அதன் மேலே வண்டு ஆடிக்கொண் டிருக்கும். அங்குதான் முருகன், குழந்தையாய் உன் கையில் கிடைப்பார்’ என அருளினார். தம்பதியினர் அங்கிருந்து கிளம்பினர். தங்களோடு சிறு குழந்தையில் இருந்து உண்மையாக உழைத்துக் கொண்டிருந்த சங்கிலிமாடன் என்பவரையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்தது. அவ்விடம் பெரும் பொட்டல்காடாக இருந்தது. அதில் கரும் வண்டு ஒன்று ரீங்காரமிட்டு வட்டமிட்டது. அதன் அருகே உள்ள குளக்கரையில் முருகன், குழந்தையாக கிடந்தார். அவரின் அழுகுரல் கேட்டு அருகே ஓடிச்சென்று அந்த குழந்தையை தழுவி தன் மார்போடு அணைத்து ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வை, ‘மகனே யென்றம்மை தானும் மார்பொடு சேயைச் சேர்த்து முகத்தோடு முகத்தை வைத்து முத்தமிட்டணைத்துக் கொண்டு மகனே யென்றழைத்தபோது மார்க்கண்டன் ஒடுங்கி நெஞ்சம் பகவனை சேர்ந்த ணந்த பான்மைபோல் இருந்த தைய’ என அச்சன்புதூர் கவிஞர் சுப்பையா, தனது ‘சிவகாமி அம் மையார் கவிதை வரலாறு’ நூலில் நெஞ்சம் நெகிழ குறிப்பிடுகிறார்.

கோவில் திருக்குளம்:

குழந்தையாக இருந்த முருகப்பெருமான், திருமலை முருகனாய் சிவகாமி அம்மைக்கு காட்சி தந்து, அதன் பின் திரு மலையில் மறைந்தார். முருகன் வண்டாடிய பொட்டலில் கிடை த்த காரணத்தினால், இவ்வூரு க்கு ‘வண்டாடும் பொட்டல்’ என பெயர் விளங்கியது. முருகன் மறைந்த திருமலை என்னும் பைம்பொழில் சிறப்பு பெற்ற மலை. அக்காலத்தில் முள்செடிகளும் மூங்கில் புதர்களும் நிறைந்த காட்டுப் பகுதியாக கிடந்தது. அது போதாதென்று கொடிய காட்டு விலங்குகளும் அங்குச் சுற்றித் திரிந்தன. எனவே பகல் நேரத்தில் கூட அங்கே செல்ல மக்கள் அச்சப்பட்டனர். ஆனால் சிவகாமி பரதேசியம்மையார், எதையுமே லட்சியம் செய்யாமல் மலை மீது ஏறினார். மலைக்கு மேல் அருள்பாலித்த திருமலைக்குமார சுவாமியை தரிசித்தார்.

சிறப்பு மிக்க அந்த தெய்வத்தையே, மகனாக பெற்றதை எண்ணி மகிழ்ந்த சிவகாமி பரதேசியம் மையார், அந்த ஆலயத்திற்கு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார். இதற்காக வண்டாடும் பொட்டலில் மடம் அமைத்தார். திருப்பணி தொடங்கியவுடன் பரதேசியம்மையாரின் வடிவமும் மாறியது. காவி உடுத்தினார். கழுத்தில் ருத்ராட்சம் தரித்தார். கரங்களில் வேலாயுதமும் கமண்டலமும் கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் அணிந்து திருமலை குமரனுக்கு சேவையைத் தொடங்கினார். யாத்திரியர்களுக்குத் தினமும் உணவு வழங்கினார். கோடை காலத்தில் நீர் மோர், பானகம் வழங்கினார். தான் தொடங்கிவைத்த திருப்பணிகள் நிலையாக நடைபெற, ஏராளமான நன்செய் நிலங்களையும் மானியமாக்கி வைத்தார். மலையின் மேலே உள்ள வசந்த மண்டபம் திருப்பணி தொடங்கியது. ஏறத்தாழ 500 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையில் பணியை தொடங்கினார். இதற்காக முருகன் அடிமைகளை அழைத்தார். தற்போது போல அப்போது படிகளும் கிடையாது. வாகனங்கள் ஏறிச்செல்ல வழியும் கிடையாது. செல்லும் வழியில் கால் வைக்க மட்டுமே பாறையில் சிறு சிறு குழி இருக்கும். அதன் வழியாகத்தான் பாறைகளை தூக்கிச் செல்ல வேண்டும்.

சிவகாமி பரதேசி அம்மையார் நினைத்திருந்தால் திருமலையை குடைந்து கூட, முருகப்பெருமான் ஆலயத்தை அமைத்திருக்க முடியும். ஆனால் ‘இது தன் புதல்வன் மலை. இம்மலைக்கு பங்கம் எதுவும் ஏற்படக்கூடாது’ என்பதற்காக, வேறு இடங்களில் இருந்து கற்களைக் கொண்டு வந்தார். மலை உச்சிக்கு தன்னோடு வேலை செய்யும் ஊழியர்களோடு, அம்மையாரும் தலைச்சுமையாக கற்களை தூக்கிச் சென்றார். நடந்து கூட செல்லமுடியாத இடத்தில் பாறைகளை முதுகில் தூக்கி கொண்டு, மேலே கொண்டு சென்றவர் களிடம் இருந்து நழுவி விழும் பாறைகளை தனது தலையால் தடுத்து, பின் தூக்கிச் சென்றும் திருப்பணி செய்தார். அதற்கு அவரது தெய்வ சக்தி ஒத்துழைத்தது. சில நேரங்களில் பாறைகளை கயிறு கட்டி இழுத்த போது, தனது தலைமுடியை சேர்த்துக்கட்டி பாறை களை மேலே இழுத்துச் சென்றுள்ளார். இப்படித்தான், திருமலையில் வசந்த மண்டபம் உள்பட பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் கோவில் தெப்பக்குளத்தை முழுவதுமாக தூர்வாரி, அதை செம்மைப்படுத்தும் பணியையும் மிக கச்சிதமாக செய்து முடித்தார். தற் போதும் கோயில் மலை உச்சியில் அழ காகக் காட்சி தரும் அந்த தெப்பக்குளம், சிவகாமி பரதேசி அம்மையார் பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கிறது. அம்மையார் ஒவ்வொரு கடைசி வெள்ளிக்கிழமையிலும், திருச்செந்தூர் செல்வது வழக்கம். அங்கு முருகப் பெருமானை தரிசித்து விட்டு நடைபயண மாகவே பண்பொழிக்கு திரும்ப வந்துவிடுவார். ஒரு நாள் செந்தூரில் ஆடிவரும் முருகப் பெருமானின் தேரை பார்த்தார். அவன் அழகு முகத்தைக் கண்டு ஓடோடி அருகில் சென்றார். தேரின் வடத்தினை பிடித்து இழுத்தார்.

யார் இது.. பெண் பரதேசி. தூரப்போ’ என தடுத்தார் ஒருவர். கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மையார். ‘என் மகன் தேரை நான் வடம்பிடித்து இழுக்கக் கூடாதா? ‘முருகா! நீ என் மகன் தான் என்றால், இந்தத் தேர் நகரக்கூடாது’ என ஆணையிட்டு விட்டு, கடற்கரையில் போய் அமர்ந்து கொண்டார்.தேர் நகர்ந்ததா? திருமலைக்கு முருகன் வந்த கதை திருமலையை ‘பிரணவத்தின் மலை’ என்றும் கூறுவார்கள். பிரணவத்தின் வடிவான ‘ஓம்’ என்ற வடிவில் இம்மலை இருப்பதால், இந்தப் பெயர் வந்தது. ‘அகத்தியம்’ என்னும் முதல் தமிழ் இலக்கண நூலை அருளியவர் அகத்தியர். அவருக்கும் தமிழ் போதித்தவர் முருகப்பெருமான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தான், ஓம் வடிவில் அமைந்த பண்பொழி திரு லையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து அகத்தியர் வணங்கினார் என்று கூறுகிறார்கள். மேலும் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அகத்தியர் அமைத்தார்.

FB IMG 1666620775100

இந்த பூஞ்சுனையில் ஞாயிறு, திங்கள், அக்கினி ஆகிய மூவர் பெயராலும் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். இக்குழியில் எப்போதும் நீர் நின்று கொண்டிருக்கும். இந்த குழியில் நீர் குறைந்து விடுமானால் உடனே மழை பொழிந்து குழியும், சுனையும் நிறைந்து விடும் என்பது ஐதீகம். இச்சுனையில் நாள்தோறும் குவளைப்பூ ஒன்று பூக்கும். அப் பூவினைக் கொண்டு, சப்த கன்னியர்கள் முருகனை வழிப்பட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு பூவன் பட்டர் என்பவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், ‘நான் அருகில் உள்ள மூங்கில் காட்டு புதரில் புதையுண்டு கிடக்கிறேன். நான் இருக்கும் இடத்தை எறும்புகள் கூட்டம் கூட்டமாக வந்து அடையாளம் காட்டும். என்னை எடுத்து வந்து திருமலையில் பிரதிஷ்டை செய். நான் அனைத்து மக்களுக்கும் காக்கும் தெய்வமாக இருப்பேன்’ என்று கூறினார். அதன்படி மறுநாள் பூவன் பட்டர் மூங்கில் காட்டுக்குள் சென்றார். அங்கு எறும்புகள் அடையாளம் காட்டும் இடத்தில் முருகனை கண்டெடுத்து திருமலையில் பிரதிஷ்டை செய்தார். அது முதல் திருமலை குமரன் காக்கும் தெய்வமாக இருந்து அருள் வழங்கி வருகிறார்.

தனிச்சிறப்பு:

அருணகிரிப் பெருமான், கவிராசப்பண்டாரத்தையா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இப்பெருமானைப் பாடிப்பரவியுள்ளார். அகத்தியர், கற்புக்கரசி கண்ணகி, சப்தகன்னியர், இம்முருகனை வழிபட்டு வந்துள்ளனர்.
பந்தளமஹாராஜா,சொக்கம்பட்டி குறுநில மன்னர் சிவனணைஞ்சாத்தேவர்,பூவாத்தாள்.சுவகாமி பரதேசியார் போன்ற அருளாளர்கள் இக்கோயில் வளர்ச்சிக்கு உறுதுணைசெய்துள்ளார்கள்.சுவகாமி பரதேசியார் நன்செய்,புன்செய் நிலங்களையும்,தோப்புகளையும் இம்முருகப்பெருமானுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் “ஓம்” என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் நானூறு அடி உயரத்திற்கு மேல் இக்கோயில் உள்ளது.
இத்திருத்தலத்தின் தீர்த்தமான பூஞ்சுனை,அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது.நாள்தோறும் ஒரு தாமரை மலர் இச்சுனையில் மலரும்.அதை இந்திராதி தேவர்களும் சப்த கன்னியர்களும் பறித்து முருகனுக்குச் சூட்டி வழிபட்டு வந்த அற்புத தீர்த்தமாகும்.

பிரணவ மலை – திருமலை :

தமிழகத்தின் மேற்கு அரணாக விளங்கக் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொடர்ச்சியாக நிலப்பகுதியோடு இணைந்து திருமலை விளங்குகிறது. இது கவிர மலைப் பகுதி என்று வழங்கப் படுகிறது. கரவி மலை என்பது கவிர மலை ஆகியது என்பர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரன் பரிபாலித்த பகுதி இந்தப் பகுதியில்தான் உள்ளது. அதுவே கவிரமலைப் பகுதி. அவனது தலைநகராக இருந்தது ஆய்க்குடி என்று அழைக்கப் பெறும் ஊர். அது இன்றும் ஒரு முருகன் கோயிலோடு திகழ்கிறது. ஆய்க்குடியும் கவிரமலையும் பொதிகை மலையோடு சார்ந்த திருக்குற்றால மலையை ஒட்டி அமைந்துள்ளன. இப்படி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து, மூன்று மலைகள் சேர்ந்து காட்சியளிப்பதால் இதனை திரிகூடமலை என்றும் அழைப்பர். இதனைப் பிரணவ மலை என்றும் கூறுவர். காரணம் ஓம் என்ற வடிவில் இந்த மலைப் பகுதி அமைந்துள்ளதுதான்… இந்த மலைத்தொடரின் உயர்ந்த இடத்தில் பழங்காலத்தில் சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்று இருந்ததாகவும், நாகம் தனக்கு அளித்த விலையுயர்ந்த ஆடையை ஆய் மன்னன் இந்த லிங்கத்துக்கு அளித்தான் என்றும் சங்க இலக்கியச் செய்தி ஒன்று உண்டு.

தமிழுக்கு இலக்கணம் வகுத்த குறுமுனி அகத்தியர் இந்தக் கோயிலுக்கு வந்து முருகனை வழிபட்ட செய்திகள் உண்டு. பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்தியர் திருமலைக்கு வந்து முருகனை வணங்கி வந்தார். முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக அழகிய பூஞ்சுனை ஒன்றையும் அமைத்தார். அதில் சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் பெயர்களில் மூன்று குழிகளை ஏற்படுத்தினார். அவற்றில் எப்போதும் நீர் நிறைந்தே இருக்கும். எப்போதாவது இக்குழிகளில் நீர் குறைந்தால், உடனே மழை பொழிந்து இந்தக் குழிகளை நிரப்பி விடும் என்பது இந்தத் தலத்து வரலாறு.

இந்தச் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்று பெயர் ஏற்பட்டது. இதில் நீராடி, முருகனை வழிபட்டு வந்தால், நோய்நொடி நீங்கி நீண்ட நாட்கள் வாழலாம் என்பது நம்பிக்கை. இந்தச் சுனையில் நாள்தோறும் குவளைப் பூ ஒன்று பூக்குமாம். அதை சப்தகன்னியர் எடுத்து ஆதி உத்தண்ட நிலைய முருகப் பெருமானை வழிபட்டு வந்தார்களாம். இந்த முருகன் சன்னிதியில் ஏழுகன்னிமார்களுக்கும் சன்னதியிருப்பது ஆச்சர்யமான ஒன்று.

முருகபக்தர்களாகத் திகழ்ந்த பல கவிகளும் பெரியவர்களும் இந்தத் தலத்துக்கு வந்து முருகனைப் பாடி அருள் பெற்றுள்ளார்கள்.

விசாக நட்சத்திர கோயில்:

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக, திருமலை செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள். இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியவில்லை. “வி’ என்றால் “மேலான’ என்றும், “சாகம்’ என்றால் “ஜோதி’ என்றும் பொருள்படும். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்பது தொன்னம்பிக்கை.

சன்னிதிகள்:

திருமலையின் அடிவாரத்தில் வல்லப விநாயகர் சன்னிதி மிகப் பெரிதாக உள்ளது. இந்த விநாயகப் பெருமானை தரிசித்தபின், மலைக்கு ஏறும் படிகள் தொடங்கும் இடத்தில் இரு பாதங்களைத் தொட்டு வணங்கி முருகன் புகழ் பாடி மக்கள் படிகளில் ஏறிச் செல்வர். பரிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் அடுத்து நடுவட்ட விநாயகர் சன்னிதியை அடையலாம். அவரைத் தரிசித்த பிறகு படிகளில் மேலும் ஏறி, இடும்பன் சன்னிதி அடைந்து அவரை வணங்கி பிறகு தொடர்ந்து ஏறவேண்டும். அங்கே இடும்பன் சுனை இருக்கிறது. பிறகு தொடர்ந்து ஏறினால், நந்தகோபர் மண்டபம் வருகிறது. இவற்றைவணங்கி, சுமார் 544 படிகள் கடந்து மேலே உச்சி விநாயகர் சன்னிதியை அடைவோம். அங்கு சன்னிதி 16 படிகளில் ஏறிச் செல்லும் அழகான மண்டபமாக இருக்கிறது. இது, இந்த விநாயகப் பெருமானை வணங்கினால், மக்களுக்கு 16 பேறுகளும் கிட்டும் என்கின்ற தத்துவத்தைச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

இந்த விநாயகரை வணங்கி, வலம் வந்து ஆதி உத்தண்ட வேலாயுதத்தையும், சப்த கன்னியரையும் வணங்கி, அருகே இருக்கும் தீர்த்தக் குளத்தை தரிசிக்கலாம். அத்தோடு சுற்றிலும் சூழ்ந்திருக்கும் மலைகளின் இயற்கை அழகை ரசிக்கலாம். மேகங்கள் நம் கைகளைத் தொட்டுச் செல்வதுபோல் நம்மை உரசிச் செல்லும் அனுபவத்தைப் பெறலாம்.

பிறகு திருமலைக்காளி சன்னிதி சென்று காளிதேவியை வணங்கி திருமலைக் குமாரனின் சன்னிதிக்குள் சென்றால் அங்கே அழகிய பாண்டி நாட்டு கட்டடக் கலையில் அமைந்த அழகான தூண்கள் அமைந்த மண்டபத்தையும் முருகன் சன்னிதியையும் தரிசிக்கலாம். உற்சவ மூர்த்தியும் அறுமுகப் பெருமானும் ஒய்யாரமாகக் காட்சி தருகிறார்கள்.

இந்தத் தலத்தில் எல்லாத் தலத்துக்கும் உரிய சன்னிதிகள் இருந்தாலும், மிகவும் சிறப்பாகத் திகழ்வது, கபால பைரவர் சன்னிதி. இந்த சன்னிதியில் ஐந்தரை அடி உயரத்தில் மிகப் பிரமாண்டமாக பைரவர் அழகாகக் காட்சி தருகிறார். இந்த பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வடைமாலை சாற்றி வழிபட்டுவந்தால், நோய் நொடி, பில்லி சூனியம் போன்ற எதிர்மறை விஷயங்கள் நம்மை விட்டு விலகும். தொழில் அபிவிருத்தி அடைந்து இல்லத்தில் மகிழ்ச்சியும் இல்வாழ்க்கை சிறப்பாக அமைவதையும் பக்தர்கள் பலரின் வாழ்வில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.

திருவிழா:

பண்பொழி திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயிலின் திருவிழாக்கள் திருமலையின் மேல்தளத்திலும் வண்டாடும் பொட்டலிலும் பண்பொழியிலும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதத்தில் கடைசித் திங்கள் பண்பொழியில் நரீசுவரமுடிஅயார் கோயிலுக்கு எதிர்ப்புறமுள்ல சிங்காரத் தெப்பக் குளத்தில் திருமலைக் குமாரசாமிக்கு தெப்ப உத்ஸவம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச உத்ஸவம் இந்தக் கோயிலின் சிறப்பான உத்ஸ்வமாகும். ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா பத்து தினங்கள் சிறப்பாக நடைபெறும். சித்திரை மாத ஐந்து தினங்கள், தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு உத்ஸவங்கள் என்று எப்போதும் இங்கு திருவிழாக்கள் களைகட்டும்.

அமைவிடம்:

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் ஒரு சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. சுரண்டையில் இருந்து 26 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

FB IMG 1666620860946

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe