-> கேவி பாலசுப்பிரமணியம்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா மூன்றாவது ஒருநாள் போட்டி
தென் ஆப்பிரிக்கா திரில் வெற்றி
இன்று கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா நான்கு ரன்களில், நான்கு பந்துகள் மீதமிருக்கையில் இந்திய அணியை வென்றது. ஆனால் இந்த வெற்றியைப் பெறுவதற்கு அவர்கள் இந்திய அணியுடன் போராட வேண்டியிருந்தது என்பதுதான் உண்மை.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள். புவனேஷ்குமாருக்குப் பதில் தீபக் சாஹார், வெங்கடேஷ் ஐயருக்குப் பதில் சூர்யகுமார் யாதவ்; அஸ்வினுக்குப் பதில் ஜெயந்த் யாதவ்; ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக ப்ரசித்கிருஷ்ணா. தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு மாற்றம். இந்தயா பூவாதலையா வென்று தென் ஆப்பிரிக்க அணியை மட்டையாடச் சொன்னது.
தென் ஆப்பிரிக்க அணியின் முதல் விக்கட் 8 ரன்னிலும், இரண்டாவது விக்கட் 34 ரன்னிலும், மூன்றாவது விக்கட் 70 ரன்னிலும் விழுந்தது. ஆனால் டி காக்கும் டுஸ்ஸேனும் சேர்ந்து நாலாவது விக்கட்டிற்கு 140 ரன்கள் சேர்த்தனர். முதலில் 35.4ஆவது ஓவரில் டி காக் (124 ரன்) ஆட்டமிழந்தார். அதன் பின்னர் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. எனவே 49.5 ஓவரில் அனைத்து விக்காட்டுகளும் இழந்து தென் ஆப்பிரிக்க அணி 287 ரன் எடுத்தது. பத்து விக்கட்டுகளையும் அவுட்டாக்கினோம் என்பது இந்திய அணி பவுலர்களுக்குப் பெருமைதான். ஆனால் 287 ரன் அடிக்கமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது.
இந்திய அணி ஆடத் தொடங்கியபோது ராகுல் ஐந்தாவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷிகர் தவான் 23ஆவது ஓவரில் 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து ஆட வந்த ரிஷப் பந்த் அடுத்த ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். கோலி மிகவும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். அவரது ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்கும்போது 32ஆவது ஓவரில் 65 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் மிக மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். ரன் எடுக்க வேண்டிய ரேட் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். ஆனால் 32 பந்துகளில் 39 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் 60 பந்துகளில் 78 ரன் தேவைப்பட்டது.
சூர்யகுமார் அவுட்டானதும் விளையாட வந்த ஜெயந்த் யாதவ் ஆறு பந்துகள் விளையாடி 2 ரன் எடுத்து அவுட்டானார். தோல்வி கிட்டத்தட்ட உறுதி என நினைத்த நிலையில் தீபக் சாஹார் 34 பந்துகளில், 5 ஃபோர், இரண்டு சிக்ஸுடன் 54 ரன் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்தியா வெற்றி பெறுமோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தார். 47.1ஆவது ஓவரில் துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டானார். அதற்குப் பின் விளையாடிய பும்ரா, சாஹல், ப்ரசித் கிருஷ்ணா ஆகியோரால் 12 பந்துகளில் 8 ரன் எடுக்க முடியாமல் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தது.
தோல்வி ஏன் ஏற்பட்டது எனப் பார்த்தால், இந்திய பவுலர்கள், புதிய பவுலர்கள் வந்த பின்னரும் சரியாகப் பந்து வீசவில்லை. தென் ஆப்பிரிக்க அணியின் ரன் ரேட் 5.75. இந்திய மட்டையாளர்கள் மெதுவாக ஆடினார்கள்; ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வில்லை; ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் எதிர்பார்த்ததைப் போல ஆடவில்லை. தீபக் சாஹார், பாவம் நன்றாகத்தான் விளையாடினார், ஆனால் இன்னமும் 10 பந்துகள் விளையாடியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். அவர் நிச்சயம் வருத்தப்படுவார்.
எப்படியோ தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளிலும் வென்று தொடரை சிறப்பாக வென்றுவிட்டது.